சித்ரா பௌர்ணமி கிரிவலம் வர திருவண்ணாமலைக்கு போகாதீங்க - வீட்டிலேயே நிலாச்சோறு சாப்பிடலாம்
திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி நாளில் கிரிவலம் வர மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: சித்திரை மாதம் வரும் பௌர்ணமி பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி புதன்கிழமை இரவு 7.28 மணிக்கு தொடங்கி மறுநாள் மாலை 4.15 மணிக்கு பௌர்ணமி முடிவடையும் என பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி நாளில் கிரிவலம் வர திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொருமாதமும் பௌர்ணமி முழுநிலவு நாள் எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அதனுடன் சேர்ந்து அழைக்கப்படும். சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால் சித்ராபௌர்ணமியாக கொண்டாடப்படுகிறது.
சித்ரா பௌர்ணமி நாளில்தான் சித்ரகுப்தர் அவதரித்தார் என்பது வரலாறு. மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி அருள்பாலிப்பார். இதனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் கூடுவார்கள். கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் சூரியன் மறைவதையும் சந்திரன் தோன்றுவதையும் ரசிக்க கடற்கரையில் மக்கள் கூடுவார்கள். திருவண்ணாமலையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்வார்கள்.
சித்திரை முழுநிலவு நாள்
சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரம் இணைந்த நாளில் வரும் பவுர்ணமி தினம், புராண நிகழ்வுகளின் நினைவாக சிறப்பைப் பெறுகிறது. மற்ற பவுர்ணமிகளில் சிறு களங்கத்துடன் தோன்றும் சந்திரன், சித்திரா பவுர்ணமியன்று, பூரணக்கலைகளுடன் பூமிக்கு மிக அருகில் தோன்றும். மேஷம் ராசியில் உச்சமடைந்துள்ள சூரியன் துலாம் ராசியில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் சந்திரனை சம சப்தமாக பார்வையிடுகிறார். இந்த நாளில், நாம் தெய்வங்களிடம் சரணடைந்து வழிபடுவது நன்மைகளைத் தரும் என்பது ஐதீகம்.
நிலாச்சோறு
சித்ரா பௌர்ணமியன்று முழுநிலவின் அழகை ரசிக்க ஏராளமானோர் ஆற்றங்கரையில் ஒன்று கூடி வீட்டில் இருந்து சமைத்து எடுத்துக்கொண்டு போன உணவுகளை சாப்பிடுவார்கள. தேங்காய் சாதம், புளிசாதம், லெமன் சாதம் என பலவகை கலவை சாதங்களை சாப்பிட்டு மனதார பேசிவிட்டு வருவார்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒற்றுமையை அதிகரிக்கும் நிகழ்வாக இது கடைபிடிக்கப்பட்டது.
மொட்டைமாடியில் கொண்டாட்டம்
வீட்டில் பூஜை அறையில் அம்பிகைக்கு தேங்காய் சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர்சாதம், பருப்புபொடி சாதம், கறிவேப்பிலைப்பொடி சாதம், மாங்காய் சாதம், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், அரிசி உப்புமா, அவல் உப்புமா, கோதுமை உப்புமா ஆகியவைகளைப் படைத்து அவற்றை பலருக்கும் தானமாகத் தந்து புண்ணியம் பெறலாம். இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி நாளில் வீட்டை விட்டு வெளியே செல்ல மூடியாத சூழ்நிலை இருப்பதால் எல்லோரும் வீட்டின் மொட்டை மாடியிலோ வாசலில் பாய் விரித்தோ அமர்ந்து நிலவை ரசித்தவாறு சாப்பிடலாம்
திருவண்ணாமலை கிரிவலம்
முழு நிலவு நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது வழக்கம். சித்தர்களும், தேவர்களும் கிரிவலம் வருவதாக நம்பப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் கோவில்கள் பூட்டப்பட்டு பக்தர்கள் வர தடை செய்யப்பட்டுள்ளது இதனையடுத்து பங்குனி உத்திரம் நாளில் கிரிவலம் வர தடை விதிக்கப்பட்டது. இந்த மாதம் நாளை சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் யாரும் கிரிவலம் வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கேட்டுக்கொண்டுள்ளார். வெளி மாவட்ட பக்தர்கள் மட்டுமல்லாது உள்ளூர் பக்தர்கள் கூட கிரிவலம் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.