சித்ராபவுர்ணமி: ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 468 சித்தர்களை போற்றும் யாகங்கள்
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வரும் 29ஆம் தேதியன்று 468 யாக குண்டங்களில் 468 பேர் பங்கேற்கும் நாளும் நன்மை தரும் 468 சித்தர்கள் யாகம், முத்தான மூன்று ஹோமங்கள் நடைபெற உள்ளது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வரும் 29ஆம் தேதியன்று 468 யாக குண்டங்களில் 468 பேர் பங்கேற்கும் நாளும் நன்மை தரும் 468 சித்தர்கள் யாகம், 22ஆம் ஆண்டு மஹேஸ்வர பூஜை, ஜோதிடர்கள் குடும்ப நலன் கருதி மாபெரும் தன்வந்திரி ஹோமம் நடைபெற உள்ளது.
ஆண்-பெண் திருமணத்தடை நீக்கும் சுயம்வரகலா பார்வதி ஹோமம்,கந்தர்வ ராஜ ஹோமம், சந்தான கோபால யாகம் நக்ஷத்திர தோஷம் நீக்கும் 27 நக்ஷத்திர ஹோமம், ஸ்ரீ சத்ய நாராயண ஹோமம், இராகு-கேது அன்னாபிஷேகம், அன்ன யக்ஞம், சிவ பஞ்சாட்சர யாகம் நடைபெறுகிறது.
சித்தர்கள் "சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆதனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்.
பவுர்ணமி பூஜை
இந்திய நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள சித்தர்கள் மற்றும் மஹான்களின் அனுஷ்டானம், அதிஷ்டானங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்து அங்கிருந்து ம்ருதி (புநித மண்) கொண்டு வந்து சிவ பஞ்சாட்சர யந்திரத்துடனும் மந்திரத்துடனும் 15 நாட்கள் அதிருத்ர மஹாயாகம் செய்து 468 சித்தர்களுக்கு 468 சிவலிங்கம் என்ற வகையில் தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்து ஒவ்வொரு பிரதோஷ நாட்களிலும் பௌர்ணமி நாட்களிலும் மற்றும் விசேஷ தினங்களில் சிறப்பு பூஜைகளும் சித்தர்கள் யாகமும் நடைபெற்று வருகிறது.
ஜோதிடர்கள் நல வேள்வி விழா
சித்ரா பௌர்ணமியில் மஹான்கள், சித்தர்கள், சிவனடியார்கள், ஜோதிடர்கள், பக்தர்கள் பங்கேற்கும் மாபெரும் சித்தர்கள் யாகமும், சப்த ரிஷி பூஜையுடன் மஹேஸ்வர் பூஜையும், ஸ்வாமிகளின் பெற்றோரும் குருவுமான ஸ்ரீமதி கோமளவல்லி சமேத ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு 22வது ஆண்டுகளாக குரு பூஜை நடைபெற உள்ளது. இதில் 10 க்கு மேற்பட்ட சிவாச்சாரியர்கள், 500க்கு மேற்பட்ட சாதுக்கள் மற்றும் ஜோதிடர்கள் பங்கேற்கும் விதத்தில் நடைபெற உள்ளது.
திருமண தடை நீங்கும்
திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும், சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற உள்ளது. மேலும் பீடத்தில் சென்ற 14 ஆண்டுகளில் ஏறக்குறைய சுமார் 2500க்கும் மேற்பட்ட கந்தர்வராஜ ஹோமங்கள் நடைபெற்று எண்ணற்ற ஆண்கள் பங்கு பெற்று பயனடைந்துள்ளார்கள்.
பெண்களுக்கு யாகம்
திருமணத்தடைகள் உள்ள பெண்கள் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி சுயம்வரகலா பார்வதி யாகம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு பின்னர் சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடத்தப்பட உள்ளது. திருமணத் தடைகளும் நீங்கி உடனே திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், மனைவிக்கு ஏற்ற கணவர் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.
குழந்தை பாக்கியம்
குழந்தை பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க வேண்டி சங்கல்பம் செய்து சந்தான கோபால யாகம் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த யாகம் செய்வதின் மூலம் எல்லாவிதமான தடைகளும் நீங்கி விரைவில் குழந்தை பாக்யம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம். தம்பதியருக்குள் மிகுந்த அந்யோன்யம் ஏற்படும். நவநீத கிருஷ்ணனின் பரிபூரண அருளும் கிடைக்கும்.
பக்தர்களுக்கு அன்னதானம்
இந்த ஹோமங்களில் பங்கேற்கும் நபர்களுக்கு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருள் பிரசாதமும் ஆசீர்வாதமும் வழங்க உள்ளார். மேலும் 468 சித்தர்கள் ஆசீர்வாதமும் கிடைக்கும். இந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சாரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் தானம் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட தன்வந்திரி குடும்பத்தினர் அன்புடன் அழைக்கின்றனர்.