கொரோனா - திருமலையில் இனி காத்திருக்க தேவையில்லை இன்று முதல் நேரடி தரிசனம்
பெருமாளின் 108 திவ்யதேசங்களில் முக்கியமானது திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவில். நாள்தோறும் குறைந்தபட்சமாக பத்தாயிரம் பேர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர். காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் காத்திருக்
திருப்பதி: உலகின் பெரும்பாலோன நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று நோய் அச்சுறுத்தல் இருந்து வரும் நிலையில், ஆந்திர மாநிலம் திருமலையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இன்று முதல் வரும் மார்ச் 31ஆம் தேதி வரையிலும் காத்திருப்பு அறைகளில் காத்திருக்காமல், ஏழுமலையானின் நேரடி தரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அதே சமயத்தில் தர்ம தரிசன முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
பெருமாளின் 108 திவ்யதேசங்களில் முக்கியமானது திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவில். நாள்தோறும் குறைந்தபட்சமாக பத்தாயிரம் பேர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை நாட்கள், மற்றும் விஷேச நாட்களில் சுமார் ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் பேர் வரை தரிசனம் செய்வதுண்டு. இதனால் சில நாட்களில் இரண்டு நாட்கள் வரை கூட பக்தர்கள் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்வதுண்டு. அந்த சமயங்களில் பக்தர்கள் அனைவரும் காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்படுவார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அங்கேயே கிடைத்து விடும். இதனால் இரண்டு நாட்கள் ஆனாலும் கூட பக்தர்கள் காத்திருந்து ஏழுமலையானை தரிசிப்பதுண்டு.
தற்போது, சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கொரோனா வைரஸின் தாக்கம் மேலும் பரவாமல் இருக்க, பொதுமக்கள், பொது வெளியில் அதிகம் கூட்டம் கூடுவதை தவிர்க்க மத்திய அரசு, நாடு முழுவதும் அவசர நிலையை பிறப்பித்துள்ளது. கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள், மால்கள் என அனைத்தையும் வரும் மார்ச் 31ஆம் தேதி வரையிலும் மூடிவிட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் 27 டிகிரிக்கும் குறைந்த வெப்பநிலையில் தான் பரவும் என்பதால், கோடை வாசஸ்தலங்களில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே போல் திருமலையிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது. திருமலையில் தற்போது சராசரி தட்பவெப்ப நிலை 26 டிகிரிக்கும் குறைவாகவே உள்ளது.
இதனால் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு, ஏழுமலையான் தரிசன திட்டத்தில் மாற்றம் செய்துள்ளது. இதன்படி திருமலைக்கு வரும் வழியில் உள்ள அலிபிரி சோதனைச் சாவடி மற்றும் பாதயாத்திரை நடைபாதை மார்க்கங்களில் இருபத்தி நான்கு மணி நேரமும், சுகாதார பணியாளர்கள் சுழற்றி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் எல்லாம் நோய் தொற்று பரவாமல் இருக்க கிருமி நாசினி மருந்துகளால் அவ்வப்போது சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருப்பு அறைகளில் நீண்ட நேரம் காத்திருக்க நேரும் சமயத்தில் ஒருவருக்கு ஏற்படும் கொரோனா வைரஸ் தொற்று, எளிதில் மற்றவர்களுக்கும் பரவி விடும் ஆபத்து உள்ளதால், அதை முற்றிலும் தவிர்க்கும் வகையில், இன்று முதல் வரும் மார்ச் 31ஆம் தேதி வரையிலும் நேரடி தரிசன முறையில் மட்டுமே பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளனர். தர்ம தரிசன முறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதே போல், வழக்கமான ஆர்ஜித சேவைகளான, விசேஷ பூஜை, சகஸ்ர கலசாபிஷேகம், வசந்தோற்சவம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் வரும் மார்ச் 31ஆம் தேதி வரையிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனால், மேற்கண்ட சேவைகளுக்காக முன்பதிவு செய்த பக்தர்கள், திருமலையில் உள்ள கூடுதல் செயல் அதிகாரி அலுவலகத்திற்கு நேரில் சென்று, அதற்கு பதிலாக விஐபி பிரேக் தரிசன அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.
தர்ம தரிசன நேரடி ஒதுக்கீடு, ரூ.300 விரைவு தரிசனம், திவ்ய தரிசனம் உள்ளிட்ட நேரடி ஒதுக்கீட்டு தரிசனங்களில் மட்டுமே பக்தர்கள் வெங்கடாசலபதியை தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளனர். நேரடி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் தங்களின் அடையாள அட்டையான, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையை தங்களுடன் எடுத்து வரவேண்டியது கட்டாயமாகும்.
தேவஸ்தானம் அறிவித்துள்ள ஏதாவது ஒரு அடையாள அட்டையுடன் பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் மட்டுமே ஏழுமலையான் தரிசனத்திற்கு செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.