கொரோனா பீதி - திருப்பதி, ஸ்ரீரங்கம், தஞ்சாவூர் பெரிய கோவில்களின் கள நிலவரம்
தஞ்சாவூர்:கொரோனா வைரஸ் குறித்து அச்சம் இருந்து வருவதால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தி உள்ளதால் கோவில்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் வரும் மார்ச் 31ஆம் தேதி வரையிலும் மூடப்படுகிறது. அனைத்து பாரம்பரிய சின்னங்களையும் மூடுமாறு மத்திய அரசு தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டதை அடுத்து பெரிய கோவில் நேற்று முற்பகல் 11 மணி முதல் மூடப்பட்டது. கோவில் பூட்டப்பட்டாலும், வழக்கமாக நடைபெறும் அனைத்து பூஜைகளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிக மக்கள் கூடும் பொது இடங்களில் தான் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுகிறது என்று மத்திய சுகாதாரத் துறை எச்சரித்தது. இதனால் மத வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள் என அனைத்து இடங்களிலும் கூட்டம் படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளன.
கொரொனா வைரஸ் பீதியால் சென்னையில் பெரும்பாலான கோவில்கள் வெறிச்சோடி காணப்பட்டன. நேற்று செவ்வாய்க்கிழமையாக இருந்தாலும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைந்து இருந்தது. அதே நேரத்தில் கோவில்களில் பூஜைகள் அனைத்தும் வழக்கம்போல் நடந்து வருவதாகவும், அன்னதான கூடம் செயல்பட்டு வருவதாகவும் அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் மேற்கு கோபுர வாசல் மூடப்பட்டு, கிழக்கு ராஜகோபுர வாசல் வழியாக மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். திருவல்லிக்கேணி பார்த்ததசாரதி கோவிலில் பரிசோதனைக்குப் பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
தஞ்சை பெரிய கோவில்
வரலாற்று சின்னமாகவும், யுனெஸ்கோவின் கலை பண்பாட்டு சின்னமாகவும் விளங்கும் தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் கோவிலுக்கு வந்து தரிசித்து செல்வதோடு, கோவிலை சுற்றப்பார்த்து செல்கின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் உறுதி செய்யும் வகையில், கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்கும் பொருட்டு இந்தியாவிலுள்ள அனைத்து பாரம்பரிய சின்னங்களையும் வரும் 31ஆம் தேதி வரையிலும் மூடுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, யுனெஸ்கோவின் கலை பண்பாட்டு பாரம்பரிய சின்னமாக விளங்கும் தஞ்சை பெரிய கோவிலை மூடுமாறு தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவு வந்தது.
பெரியகோவில் மூடல்
இதனையடுத்து, நேற்று முற்பகல் 11 மணி முதல் தஞ்சை பெரிய கோவில் மூடப்பட்டது. வழக்கமாக நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்ட உடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பிற மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்த பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். 11 மணிக்கு பிறகு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் என யாரையும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. வரும் மார்ச் 31ஆம் தேதி வரையிலும் கோவில் மூடப்பட்டிருக்கும். கோவிலுக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை என்பதை பக்தர்கள் அறிந்துகொள்ளும் வகையில், மராட்டா நுழைவு வாயிலில் முன்பாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பதாகையும் வைக்கப்பட்டது. பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், கோவிலில் வழக்கமாக நடைபெறும் அனைத்து பூஜைகளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில் பூட்டப்பட்டதை அடுத்து தரிசனத்திற்காக வந்திருந்த ஏராளமான பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
திருச்சி ஸ்ரீரங்கம்
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா தாக்குதலின் பயமின்றி வழிபாட்டை மேற்கொள்ள, கோயிலுக்கு வரும் அனைவரும் தெர்மல் ஸ்கிரீன் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படுகிறார்கள். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சுமார் 20,000 பக்தர்கள் தினமும் வருகிறார்கள் என்றும், வெளிநாட்டுப் பயணிகளும் வருவதால், நான்கு சோதனை கருவிகள் கோயிலின் வாயில்களில் வைக்கப்பட்டு, மருத்துவ குழுவினர் சோதனை மேற்கொள்கின்றனர் எனக் கோயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் காய்ச்சல், இருமல் இருந்தால் அனுமதி மறுக்கப்படுகிறது. பல சோதனைக்கு பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
திருப்பதி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பக்தர்கள் தங்கும் அறையில் காத்திருக்காமல் நேரம் ஒதுக்கீடு டிக்கெட் வழங்கி நேரடியாக தரிசனத்துக்கு அனுமதித்து வருகிறது. ஒரே நேரத்தில் ஆயிரம் பக்தர்கள் வரை அமர்ந்து சாப்பிடக்கூடிய அன்னதானம் வழங்கும் இடத்தில் தற்போது ஒரு மீட்டர் இடைவெளியில் 500 பக்தர்கள் வரை மட்டுமே அமர வைக்கப்பட்டு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கோயில் ஊழியர்கள் அனைவருக்கும் முக கவசம் வழங்கப்பட்டுள்ளது.