கொரேனா பீதியால் திருப்பதியில் களையிழந்த உகாதி : லட்டுக்களை ஊழியர்களுக்கு கொடுக்கும் தேவஸ்தானம்
கொரானாவைரஸ் பீதியால் திருப்பதி கோவிலுக்குள் பக்தர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. இதனால் அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த 2.4 லட்சம் லட்டுக்கள் தேக்கமடைந்துள்ளன. உகாதி பண்டிகையை முன்னிட்டு கோவில் ஊழிய
திருப்பதி: கொரோனாவைரஸ் தாக்குதல் அச்சத்தால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனையடுத்து பக்தர்களுக்கு அளிப்பதற்காக தயாரிக்கப்பட்டிருந்த சுமார் 2.4 லட்சம் லட்டுகள் தேக்கமடைந்தன. இந்த லட்டுக்கள் அனைத்தும், கோவிலில் பணிபுரியம் அனைத்து ஊழியர்களுக்கும் தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி பண்டிகையை முன்னிட்டு பரிசாக வழங்கப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
சீனாவில் உருவான கொரோனாவைரஸ் கிருமியின் தாக்குதல் உலகம் முழுதும் பரவி அச்சுறுத்தி வருகின்றது. இதுவரைக்கும் சுமார் பதினான்காயிரம் பேர்களை பலி வாங்கியதோடு, இன்னமும் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்வதை அடுத்து, கொரோனாவின் தாக்குதலை முற்றிலும் ஒழிக்க மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வரும் மார்ச் 31ஆம் தேதி வரையிலும் நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடை
கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க நாடு முழுவதும் 75 மாவட்டங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதே போல், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் மூடிவிடவும் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவை அடுத்து நாடு முழுவதும் உள்ள அனைத்து கோவில்களும் மூடப்பட்டுவிட்டன.
திருப்பதி தரிசனம் ரத்து
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற வைணவ கோவிலான திருப்பதி வெங்கடாசலபதி கோவிலும் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் முதல் மூடப்பட்டது. திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக உலகம் முழுவதும் இருந்தும் நாள் ஒன்றுக்கு சுமார் ஐம்பதாயிரம் முதல் என்பதாயிரம் பேர்கள் வரை வந்து தரிசித்து செல்வதுண்டு. விஷேச நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுண்டு.
லட்டு பிரசாதம்
திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பவர்களுக்கு இலவச பிரசாதமாக ஒரு லட்டு வழங்கப்பட்டு வருகிறது. ரூ.300 டிக்கெட்டில் சிறப்பு தரிசனம் செய்பவர்களுக்கு இரண்டு லட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக தேவைப்படுபவர்களுக்கு ஒரு லட்டு ரூ.50க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையின் மூலம் நாளொன்றுக்கு சுமார் என்பதாயிரம் லட்டுகள் வரை பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒரு மாதத்திற்கு உத்தேசமாக சுமார் 24 லட்சம் லட்டுகள் வரை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
2 லட்சம் லட்டுகள் தேக்கம்
ஆரம்ப காலம் தொட்டு சமீப காலம் வரை லட்டுக்கள் கைகளாலேயே தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. நாளடைவில் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததால், இயந்திரங்களின் மூலம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் சுமார் என்பதாயிரம் பக்தர்களை வரை தரிசனம் செய்வதால், பக்தர்களுக்கு தங்கு தடையின்றி வழங்க ஏதுவாக மூன்றுநாட்களுக்கு தேவையான 2.4 லட்சம் லட்டுக்கள் வரை முன்கூட்டியே தயார் செய்து இருப்பில் வைத்திருப்பது வழக்கமாகம்.
களையிழந்த உகாதி
தற்போது கொரோனாவைரஸ் தாக்குதல் பீதியின் காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடையுத்தரவி போடப்பட்டுவிட்டது. கடந்த வெள்ளிக் கிழமை முதல் பக்தர்கள் தரிசனம் இன்றி அனைத்து விதமான ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டு, வழக்கமான பூஜைகள் மட்டுமே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏழுமலையானை தரிசித்துவிட்டு வருபவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லட்டுகள் என்னவாயிற்று என்று பத்கர்களின் மனதில் கேள்வி எழுந்தது.
பக்தர்களுக்கு லட்டு
திடீரென பக்தர்கள் தரிசனத்திற்கு தடையுத்தரவு போடப்பட்டுவிட்டதால், பக்தர்களுக்கு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட சுமார் என்பதாயிரம் லட்டுக்கள் என்னவாயிற்று, அதை என்ன செய்தார்கள் என்று பக்தர்கள் முதல் பல்வேறு தரப்பிலிருந்தும் கேள்வி எழுந்தது. இதனையடுத்து, பக்தர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக தயாரித்து இருப்பில் வைக்கப்பட்டுள்ள சுமார் 2லட்சத்து 40 ஆயிரம் லட்டுகளை ஏழுமலையான கோவிலில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் பகிர்ந்தளிக்கப் போவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
10 லட்டுகள் பரிசு
கோவிலில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் சுமார் 10 லட்டுகள் என்ற கணக்கில் அனைத்து பணியாளர்களுக்கும் தெலுங்கு வருடப்பிறப்புக்காக பரிசாக வழங்கப்படும் என்று தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பீதியின் காரணமாக முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட லட்டுகளை வீணடிக்காமல் கோவிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பிரசாதமாக வழங்கி இருப்பது பெருமைப்பட வேண்டிய விஷயம் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.