கொரோனா வைரஸ்: தமிழகம் முழுவதும் கோவில்களில் சாமி தரிசனத்திற்கு தடை - பூஜைகள் மட்டும் நடக்கும்
தமிழகம் முழுவதும் முக்கிய கோவில்களில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின் படி ஆகம விதிகளுக்கு உட்பட்டு சாமிக்கு நடைபெறும் அனைத்து பூஜைகளு
சென்னை: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள பிரபல கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் பக்தர்கள் தரிசனம் செய்யவும், பிராத்தனை செய்யவும், தொழுகை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் ஆகம விதிப்படி நடைபெறும் பூஜைகள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவுக்கு பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோன வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்தியாவிலும் இதன் தாக்கம் தொடர்ந்து ஒற்றை இலக்கத்தில் கூடிக்கொண்டே செல்கிறது. மக்கள் கூட்டம் கூடம் இடங்களில் அதிகமாக பரவுகிறது என்பதால் பொதுமக்களும் பீதியடைந்து பெரும்பாலும் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, நாடு முழுவதும் அனைத்து சுற்றுலா தலங்கள், பொழுது போக்கு வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், மால்கள் என அனைத்தையும் வரும் மார்ச் 31ஆம் தேதி வரையிலும் மூடும் படி உத்தரவிட்டுள்ளது. அதே போல் மத வழிபாட்டு தலங்களுக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள கோவில்களிலும் பிற மத வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களின் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடிக்கிடக்கின்றன.
இதனிடையே தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் சோதனைக்கு பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இன்று முதல் அதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் முக்கிய வழிபாட்டு தலங்களான திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி முருகன் கோவில், வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உள்ளிட்ட பல முக்கிய கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு உத்தரவு காரணமாக காரணமாக திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோவில் உள்ளிட்ட முருகனின் அறுபடை வீடுகளிலும் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும் எனவும் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்களின் நலன் கருதி சாத்தூர் அருகேயுள்ள பிரசித்திபெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சாமிதரிசனம் செய்ய தற்காலிகமாக 31ம் தேதி வரை அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. மாரியம்மன் கோயிலில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு சாமிக்கு நடைபெறும் அனைத்து பூஜைகளும் வழக்கம்போல் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசால் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கோவில்கள் மட்டுமல்லாமல் பிரபல தேவாலயங்கள், மசூதிகளில் பக்தர்கள் கூடவும் வழிபாடுகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை ஏற்று மசூதிகளில் நடைபெறும் 2 மணிநேர வெள்ளிக்கிழமை தொழுகை 20 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.