மகரத்தில் சனி, செவ்வாய், குரு சேர்க்கை - சித்திரை பிறந்தால் ஓடிப்போகும் கொரோனா
கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படி ஒரு கொள்ளை நோயை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லையே என்று எல்லோரும் புலம்பத்தொடங்கி விட்டனர்.
சென்னை: சனியின் வீடான மகரத்தில் கிரகங்கள் கூட்டணி சேர்ந்திருப்பதே கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவ காரணம் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். மகரத்தில் சனி ஆட்சி பெற்று அமர்ந்திருக்க, கூடவே குரு பகவான் அதிசாரம் பெற்று அமர்ந்திருக்கிறார். கூடவே செவ்வாய் பகவானும் கூட்டணி அமைத்திருக்க நாடு முழுவதும் நோய் பற்றிய பயம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மிதுனம் ராசியில் ராகு, தனுசு ராசியில் கேது சஞ்சரிப்பதும் நோய் பரவலுக்கு காரணமாக இருக்கிறது. நோய் பாதிப்பு எப்போது நீங்கும் என்று ஜோதிட ரீதியாக கணித்துள்ளனர் பிரபல ஜோதிடர்கள்.
இது யாரையும் பயமுறுத்தும் செய்தியல்ல மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கவே நோய் பயத்தை போக்கவே இதுபோன்ற செய்திகளை அவ்வப்போது தருகிறோம்.
2019ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சனி, குரு, கேது, சந்திரன், சூரியன், புதன் ஆகிய ஆறு கிரகங்கள் ஒரே ராசியில் அதாவது தனுசு ராசியில் சஞ்சரித்த போது அதை மிதுனம் ராசியில் இருந்து ராகு பார்க்க அந்த நேரத்தில் சூரிய கிரகணம் ஏற்பட உலகின் பேரழிவு கொரோனா வைரஸ் வடிவத்தில் ஆரம்பித்தது. சீனாவில் தொடங்கிய பேரழிவின் தொடக்கம் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா என பதம் பார்த்து இந்தியாவிலும் மெல்ல மெல்ல பரவத்தொடங்கியுள்ளது. உயிர்பலி இந்தியாவில் குறைவுதான் என்றாலும் உலக அளவில் லட்சம் பேரின் உயிரை குடித்துள்ளது கொரோனா வைரஸ். உலக வல்லரசு நாடுகள் அனைத்தும் இப்போது ஆடித்தான் போயிருக்கின்றன.
தனுசு ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரித்து வந்த குரு பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி மார்ச் மாதம் 30ஆம் தேதி அதிகாலை நான்கு மணியளவில் அதிசாரமாக மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். சனி பகவானும் மகரத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்க செவ்வாயும் இந்த கிரகங்களுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார். இந்த கிரகங்களின் கூட்டணிதான் நோய் பரவலுக்கு காரணம் என்கின்றனர் ஜோதிடர்கள்.
குருவின் கட்டுப்பாட்டில் சனி செவ்வாய்
மகரம் ராசியில் பரம பகை கிரகங்கள் சனி செவ்வாய் சேர்ந்திருக்கின்றனர். இப்போது நீச பங்கம் பெற்றுள்ள குருவும் மகரத்தில் இணைந்து சனி செவ்வாயை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார். குரு பகவான் ஜூன் மாதம் இறுதி வரைக்கும் மகரம் ராசியில் சஞ்சரிப்பார் அதே நேரத்தில் செவ்வாய் மே 4ஆம் தேதியன்று மகரத்தில் இருந்து கும்பம் ராசிக்கு நகர்ந்து விடுவார். அந்த நாளில் இருந்து கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறையத்தொடங்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
உச்சம் பெற்ற சூரியன்
மகரம் ராசியில் குரு பகவான் உத்திராடம் இரண்டாம் பாதை வரை சஞ்சரிப்பார். ஜூன் 30ஆம் தேதிக்கு பின்னர் வக்கிரம் பெற்று படிப்படியாக தனுசு ராசிக்கு திரும்புகிறார். நவம்பர் 20 ஆம் தேதி வரை தனுசு ராசியில் சஞ்சரிப்பார் குரு பகவான். உத்திராடம் நட்சத்திரம் சூரியனின் நட்சத்திரம். சூரிய பகவான் ஏப்ரல் 13ஆம் தேதி முதல் மேஷம் ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். 30 நாட்கள் மேஷம் ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் சூரியன் பரிபூரண பலத்தோடு இருப்பார். அப்போதிருந்த நோய் தாக்கம் குறையத்தொடங்கும் என்று நல்ல வார்த்தை சொல்கின்றனர் ஜோதிடர்கள்.
கொரோனா தாக்கம் குறையும்
சூரியன் உச்சம் பெற்றிருந்தாலும் மகரத்தில் இருக்கும் செவ்வாயின் பார்வை சூரியன் மீது விழுகிறது. குரு நீசம் பெற்றிருந்தாலும் சூரியன் சாரம் பெற்றிருப்பதால் வலுவான நிலையிலேயே இருப்பார். குருவின் பார்வை கால புருஷ ராசிகளான குடும்ப ஸ்தானம் ரிஷபம், சுக ஸ்தானம் கடகம், ருண ரோக சத்ரு ஸ்தானமான கன்னி ராசிகளின் மீது விழுகிறது. இதனால் மக்கள் தங்களின் வீடுகளில் நிம்மதியாகவும் சுகமாகவும் சந்தோஷமாகவும் நோய் நொடிகள் இன்றி இருப்பார்கள் என்கின்றனர் ஜோதிடர்கள்.
நோய்கள் குறையும்
மகரத்தில் இருந்து கும்பம் ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சி அடைந்த பின்னர் கொரோனா வைரஸ் படிப்படியாக குறையும் என்ற நம்பிக்கை வார்த்தைகளை கூறியுள்ளனர். இப்போது தனுசு ராசியில் கேதுவும் மிதுனம் ராசியில் ராகுவும் சஞ்சரிக்கின்றனர். ராகு கேது பெயர்ச்சி செப்டம்பர் மாதம் நிகழ்கிறது. ராகு ரிஷபம் ராசிக்கும், கேது விருச்சிகம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றனர். இதன் பின்னர் கொரோனா நோய் பாதிப்பு பற்றிய அச்சம் படிப்படியாக நீங்கும் என்றும் ஜோதிடர்கள் ஆறுதல் வார்த்தை கூறியுள்ளனர்.
இறை நம்பிக்கை
எத்தனையோ நோய்கள் உலகத்தையும் மக்களையும் தாக்கிய போது அதிலிருந்து நம்பிக்கையுடன் மீண்டு வந்திருக்கிறார்கள். பஞ்சம், பசி, பட்டினியை கடந்து நம்பிக்கையுடன் உயிர் வாழ்ந்திருக்கிறார்கள். கொரோனோ வைரஸ் பாதிப்பும் அப்படித்தான் இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையுடன் வீட்டிலேயே அவரவர்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வம் குல தெய்வங்களை வணங்கலாம். நோய்க்கும் கிருமிகளுக்கும் ஜாதி,மதம் கிடையாது யாரை வேண்டுமானாலும் தாக்கலாம். நமக்காக மட்டுமல்ல உலக நன்மைக்காக இறைவனை வேண்டிக்கொள்ளலாம். நோய் பாதிப்பு நீங்க அனைவரும் மனதார செய்யும் கூட்டு பிரார்த்தனை நம்பிக்கையுடன் பலிக்கும்.