கொரோனா லாக் டவுன்: அதிகரிக்கும் குடும்ப வன்முறைகள் - ஜோதிட பரிகாரங்கள்
கொரோனா வைரஸ் அனைவரையும் வீட்டிற்குள் அடக்கிவிட்டது ஆனாலும் சண்டைகள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
சென்னை: கொரோனாவை விட பெரும் கொடுமையாக இருக்கிறது லாக் டவுனால் வீட்டிற்குள் இருக்கும் மக்களுக்கு ஏற்படும் மன அழுத்தம். இதனால் அடிதடிகளும் குடும்ப வன்முறைகளும் அதிகரித்து வருகிறதாம். சிலர் இந்த லாக் டவுனை ஜாலியாக அனுபவித்து ஆளுக்கு ஒரு வேலை செய்து நேரத்தை கடத்தினாலும் உலகம் முழுவதும் குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருகிறது என்ற தகவல் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. கணவன் மனைவி தகராறுகள், குடும்ப உறவினர்களிடையே மனக்கசப்புகள் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த பிரச்சினை தீர ஜோதிட ரீதியாக சில பரிகாரங்களை பார்க்கலாம்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பா என உலகம் சுற்றி இந்தியாவிலும் மெல்ல மெல்ல தனது ஆக்டோபஸ் கரங்களால் வளைக்கத் தொடங்கியுள்ளது. இதனால் உலகின் பல நாடுகளில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே போல அமெரிக்காவில் ஏப்ரல் 30 வரை லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
லாக் டவுன் அறிவிப்பால் பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இது கொரோனாவை விட கொடுமையாக இருக்கிறது. தனிமையில் உள்ள பலருக்கு பசி பட்டினி அதனால் பாதிப்பு ஏற்படுகிறது. குடும்பத்தில் இருப்பவர்கள் ஒரே வீட்டிற்குள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு இருப்பதால் சில நேரங்களில் சந்தோஷமாக இருந்தலும் எதிர்காலம் பற்றிய பயம் பல நேரங்களில் சண்டையை உருவாக்குகிறது. மது போதைக்கு அடிமையானவர்கள் பாடுதான் பெரும் திண்டாட்டமாக உள்ளது. அடிதடிகள் உருவாகி அதோடு சண்டைகளும் அதிகரித்து வருகின்றன.
உலகம் முழுவதும் வன்முறை
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பத்து லட்சம் பேரை பதம் பார்த்துள்ளது. 50 ஆயிரம் பேரின் உயிரை குடித்துள்ளது. வைரஸ் பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகள் உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. சமூக விலகலை கடைபிடிக்க இந்தியா, இத்தாலி, சீனா, தென்கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஈரான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் லாக் டவுன் கடைபிடிக்கப்படுகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் குடும்ப சண்டை தொடர்பான வழக்குகள் தொடர்பான தொலைபேசி அழைப்புகள் அதிகரித்து வருவதாக வக்கீல்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அதிகரிக்கும் தாக்குதல்கள்
குடும்பத்தில் அடிதடி, சண்டைகள், மனரீதியான காயங்கள், குடும்ப உறுப்பினர்களிடையே கசப்புகள், உடல்ரீதியான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்த குடும்ப வன்முறைகள் இந்தியாவில் மட்டுமல்ல சீனா, இத்தாலி,ஈரான், ஜெர்மனியிலும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குடும்பத்திற்குள் அனைவரும் சேர்ந்திருப்பதே இதுபோன்ற சண்டைகள் அதிகரிக்க காரணமாவதாக உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
எதிர்காலம் பற்றிய பயம்
எதிர்காலம் பற்றிய பயமும் அதனால் ஏற்படும் மன அழுத்தமும் வார்த்தைகளில் சூட்டினை அதிகரிக்கிறது. இந்த தகராறினால் அதிகம் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர். இந்த லாக் டவுன் முடிந்த பின்னரும் இந்த சண்டைகள் நீடிக்கும் பட்சத்தை கொரோனா வைரஸ் பாதிப்பை விட குடும்பங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
குடும்ப பிரச்சினை தீர பரிகாரங்கள்
குடும்பத்தில் அனைவரும் சேர்ந்திருக்கும் இந்த நேரத்தில் பிரச்சினைகள் தீர சில பரிகாரங்களை செய்யலாம். படிப்பதற்கும் எழுதுவதற்கும் நிறைய நேரம் இருக்கிறது. சுந்தரகாண்டத்தை மனமுருகி படித்தால் பாவங்கள் தீரும் தீராத நோய்களும் தீரும். சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், மன வலிமை உண்டாகும். வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வரும். கஷ்டங்கள் தொலைந்து போகும் வாழ்வு வளம் பெறும்.
துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றலாம்
வீட்டில் துளசி செடி வளர்ப்பவர்கள் தினந்தோறும் தண்ணீர் விட்டு வர தம்பதியர் இடையே ஏற்படும் பிரச்சினைகள் தீரும். மஞ்சள் குங்குமம் தண்ணீரில் கலந்து துளசி செடிக்கு ஊற்றி வரவேண்டும். வெள்ளிக்கிழமைகளில் காலையில் உண்ணாவிரதம் இருந்து மகாலட்சுமியை வணங்க தம்பதியர் இடையே ஏற்பட்ட கசப்பு மறையும்.
ஸ்ரீராம நாம மகிமை
ஸ்ரீ ராம ஜெயம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் படத்தின் முன்பு விளக்கேற்றி வணங்கலாம். 108 முறையோ, 1008 முறையோ குழந்தைகளை ஸ்ரீ ராமஜெயம் எழுதலாம். கணவன் மனைவி பிரச்சினை தீரும் வீட்டில் சண்டை சச்சரவுகள் நீங்கி நிம்மதி பிறக்கும். பிரிந்த தம்பதியர் இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.