90 கிட்ஸ் வாழ்க்கையில் விளையாடும் கொரோனா - எத்தனை காலம் பிரம்மச்சாரி வாழ்க்கை
கொரோனா லாக் டவுன் மார்ச் 22ல் ஒருநாளாக இருந்து 21 நாட்கள் ஆகி இப்போது 4வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. வேலையிழப்பு, சம்பளமில்லை, நோய் பற்றிய அச்சம் பலரையும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கியுள்ளது.
சென்னை: கெரோனா லாக் டவுன் வெர்சன் 4.0 பல தளர்வுகளுடன் இருந்தாலும் 90களில் பிறந்த பல இளைஞர்களின் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது. மாசியில பொண்ணு பார்த்து முடிவு செய்து வைகாசியில் திருமண தேதி குறித்த பலரது வாழ்க்கையும் இப்போது ஊசலாடிக்கொண்டிருக்கிறது. பலர் குறித்த தேதியில் சிம்பிளாக திருமணத்தை முடித்தாலும் சிலரோ திருமணத்தை ரத்து செய்து வருகின்றனர். கொரோனா வைரஸ் எங்க வாழ்க்கையில இப்படி வந்து விளையாடுதே என்று ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்த திருமண தடை பலரையும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கியுள்ளது.
திருமண தடை, தாமத திருமணங்கள் எல்லாமே பிறந்த ஜாதகத்தில் கிரகங்களின் கூட்டணியும், களத்திர ஸ்தானம், குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்களின் அமைப்பை பொறுத்துதான் ஏற்படுகிறது. என்னதான் குடும்பத்தில் பொறுப்பான மூத்த பையனாக இருந்தாலும் சிலருக்கு சீக்கிரமே திருமணமாகி விடும் அதற்கு காரணம் கிரக அமைப்புதான். அதே போல சிலருக்கு ராகு கேதுவின் பிடியில் சிக்கி கால சர்ப்ப தோஷத்திலோ, களத்திர தோஷத்திலோ பாதிக்கப்பட்டிருந்தால் திருமணம் லேசில் கை கூடி வராது.
பெண்களை அதிகம் பாதிப்பது செவ்வாய் தோஷமும் மாங்கல்ய தோஷமும்தான். எந்த ஜோதிடரிடம் எடுத்துக்கொண்டு போனாலும் திருமணம் லேசில் நடக்காது என்று சொல்லிவிடுவார்கள். அதற்கு ஏற்ற பரிகாரங்களை செய்தால் மட்டுமே சரியான மணமகனோ, மணமகளோ தேடி வருவார்கள். சரியான ஜோடிப்பொருத்தம் அமைந்து விட்டால் அப்புறம் அவர்களை லேசில் அசைக்க முடியாது. சரி 90களில் பிறந்தவர்களுக்கு மட்டுமல்ல 87ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்களில் இருந்தே பலருக்கும் இன்னும் திருமணம் கை கூடி வராமல் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் ஆண்டு கிரகங்களின் சஞ்சாரம்தான்.
ராகு சனி சஞ்சாரம்
பொதுவாகவே ஆண்டு கோள்கள் ஒருவரின் ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கிறது என்று பார்த்து திருமணத்திற்கு பொருத்தம் பார்ப்பார்கள். பிறந்த ஜாதகத்தில் சனி,செவ்வாய், ராகு, கேது போன்ற பாவ கிரகங்கள் திருமணத்தை பாதிக்காத நிலையில் இருக்க வேண்டும். குருவின் சஞ்சாரமும், பார்வையும் சரியாக அமைந்தால் திருமணம் நடைபெறும். 1986ல் சனி பகவான் விருச்சிகத்திலும் 89ஆம் ஆண்டில் தனுசு ராசியிலும் சஞ்சரிக்கிறார். 1990களில் சனிபகவான் மகரம் ராசியில் ஆட்சி பெற்றிருக்க கூடவே ராகுவும் சஞ்சரிக்கிறார். அந்த கால கட்டத்தில் கடக ராசியில் கேது மிதுனம் ராசியில் ராகு சஞ்சரிக்கிறார்.
ஏழரை சனி காலம்
1991ல் ராகு கேது பெயர்ச்சியாகி ராகு பகவான் தனுசு ராசிக்கும் கேது மிதுனம் ராசிக்கும் இடப்பெயர்ச்சியாகியிருக்கிறார். கடகம் ராசியில் கோச்சார ரீதியில் குரு சஞ்சரிக்கிறார். சனிபகவான் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த கால கட்டம் தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியாக அமைந்துள்ளது.
ராகு கேது சனி
ஒருவரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 3,7ல் பாவ கிரகங்கள் அமர்ந்திருந்தாலோ அல்லது 3,7ம் இடத்தினை பாவ கிரகங்கள் பார்ப்பதாலே அவர்களுக்கு லேசில் திருமணம் கை கூடி வராது தடை வந்து கொண்டே இருக்கும். குடும்ப ஸ்தானம் எனப்படும் இரண்டாம் வீட்டில் சனி, ராகு கேது போன்ற கிரகங்கள் இருந்தால் திருமணம் தடைபடும் தாமதமாகும்.
திருமண தடை காரணம்
ஆணின் ஜாதகத்தில் 7ம் அதிபதி களத்திர காரகன் 6,8,12 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் மறைவு பெற்றிருந்தாலோ அல்லது பகை சாரம் பெற்றிருப்பின் பாவ கிரகம் ஏழம் இடத்தை பார்த்தாலோ, சுக்கிரன் கெட்டு இருந்தாலோ, நீசமாகி இருந்தாலோ திருமண தடை ஏற்படும்.
என்னென்ன தோஷங்கள்
செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம், சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம் என பல தோஷங்கள் திருமணம் ஏற்படும் தடை தாமதத்தை ஏற்படுத்துகின்றன. எல்லா தோஷ பரிகாரங்களும் செய்து ஒரு வரனை பார்த்து முடிக்கப் போகிற நேரத்தில் கொரோனா கொள்ளை நோய் வந்து இப்படி நம்ம வாழ்க்கையில விளையாடுதே என்று பலரும் கவலைப்படுகிறார்கள். கல்யாணத்திற்கு பெண்ணும் மாப்பிள்ளையும்தான் வேணும் குறித்த தேதியில் குறித்த நேரத்தில் சிம்பிள் ஆக கல்யாணத்தை முடிங்க. லாக் டவுன் முடிந்த பிறகு பிரம்மாண்டமாக ரிசப்சன் வச்சிக்கங்க.
லாக்டவுன் மன அழுத்தம்
லாக் டவுன் 55 நாட்களுக்கு மேலாக நீடித்துள்ளது. பொருளாதார ரீதியான பாதிப்புகள் வேலையிழப்புகள், திருமண தடைகள் போன்றவை பலரையும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கியுள்ளது. இந்த மன அழுத்தத்தை விரட்ட மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் தயாராக வேண்டும். இதுவும் கடந்து போகும் என்று நினைத்துக்கொண்டு தினசரியும் நடைப்பயிற்சி, எளிதான உடற்பயிற்சி செய்ய வேண்டும். சத்தான உணவுகளை வீட்டிலேயே தயார் செய்து சாப்பிடலாம். திருமணம் நின்று போகவில்லை தள்ளிப் போயுள்ளது என்பதை மனதளவில் ஏற்க பழக வேண்டும். உறவினர்கள், நண்பர்களுடன் நேரம் செலவழித்து பேசினாலே மன அழுத்தம் மாயமாகிவிடும்.