கொரோனா : சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் ரத்து - வீட்டிலேயே விரதம் முடிக்கலாம்
சமயபுரம் பச்சைப்பட்டினி விரதம் இருக்கிறார். கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் நிலையில் கோவில் திருவிழாக்கள் நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் சித்திரை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளத
திருச்சி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் சித்திரைத் தேர்த் திருவிழாவின் கொடியேற்றம் தொடங்கி தேரேட்டம் வரையில் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு விரதம் இருந்தவர்கள் ஏப்ரல் 5ஆம் தேதியன்று காலை 6 மணி முதல் காலை 8 மணிக்குள் தங்கள் வீட்டிலேயே பூஜை அறையில் சமயபுரம் மாரியம்மன் படத்தை வைத்து பூஜை செய்து, நைவேத்தியமாக இளநீர், தயிர் சாதம், பானகம், நீர் மோர், கஞ்சி ஆகியவற்றை வைத்து மாலையை கழற்றி, கயிற்று காப்பை அவிழ்த்து தங்களின் விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டிலுள்ள அம்மன் கோவில்களில் புகழ்பெற்றதும், முக்கியமானதும், ஆக விளங்குவது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில். இது திருச்சிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. அன்னை பராசக்தி சமயபுரம் மாரியம்மனாக இங்கு வீற்றிருந்து, தன்னை நாடி வரும் மக்களின் குறைகளைப் போக்கி வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரமளிக்கும் மகா சக்தியாக, ஆயி மகமாயி ஆக குடிகொண்டிருக்கிறாள். சக்தி தலங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது பூச்சொரிதல் விழாவும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் சித்திரை தேர்த்திருவிழாவும் தான். பூச்சொரிதல் விழாவைக் காண்பதற்காகவே, பக்தர்கள் மஞ்சள் ஆடை உடுத்தி, 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருந்து தமிழ்நாடு முழுவதும் இருந்தும் பாதயாத்திரையாக வந்து அன்னை மகமாயி மாரியம்மனை வழிபட்டுச்செல்வது வழக்கமாகும்.
இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா, கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதியன்று தொடங்கியது. 28 நாட்கள் விரதத்திற்கு பின்பு இன்று ஏப்ரல் 4ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதோடு சமயபுரம் மாரியம்மனின் பச்சை பட்டினி விரதமும் இனிதே நிறைவடைகிறது. அதனைத் தொடர்ந்து வழக்கமாக சித்திரை மாத தொடக்கத்தில் தேர்த்திருவிழா நடைபெறும்.
இந்நிலையில், சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி இதுவரை சுமார் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை தாக்கியதோடு, ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்களை பலிவாங்கியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பலியானதோடு, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்களை இந்நோய் தாக்கியுள்ளது.
இதன் காரணமாக கொரோனா வைரஸின் தாக்குதல் மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், மத்திய அரசு கடந்த மார்ச் 25ம் தேதி முதல் வரும் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் முழு அடைப்புக்கு உத்தரவிட்டது. அதோடு, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் மூட உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவை அடுத்து இந்திய முழுவதும் அனைத்து கோவில்களும் மூடப்பட்டன. வழக்கமான பூஜைகள் மட்டுமே தடையின்றி நடைபெறுகின்றன.
அதே போல், சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சித்திரைத் தேர்த் திருவிழாவின் கொடியேற்றம் தொடங்கி தேரேட்டம் வரையில் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பூச்சொரிதல் விழாவையொட்டி, 28 நாட்கள் பச்சை பட்டினி இருந்து வந்த பக்தர்கள் அனைவரும் வரும் ஏப்ரல் 5ஆம் தேதியன்று காலை 6 மணி முதல் காலை 8 மணிக்குள் தங்கள் வீட்டிலேயே பூஜை அறையில் சமயபுரம் மாரியம்மன் படத்தை வைத்து பூஜை செய்து, நைவேத்தியமாக இளநீர், தயிர் சாதம், பானகம், நீர் மோர், கஞ்சி ஆகியவற்றை வைத்து மாலையை கழற்றி, கயிற்று காப்பை அவிழ்த்து தங்களின் விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம் என்று கோவிலின் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.