சாவு எப்படி வேண்டுமானாலும் வரலாம் - கொரோனாவைப் பார்த்து மரண பயம் வேண்டாம்
மரணம் சிலருக்கு கருவிலேயே கூட வரும். பிறந்த சில நாட்களில் வரலாம், இளைஞராக இருக்கும் போதும் நடுத்தர வயதிலும் வரலாம். சிலர் மட்டுமே எண்பது, நூறு என வாழ்ந்து அனுபவித்து மடிவார்கள்.
சென்னை: உலகத்தில் உள்ள பல நூறு கோடி மக்களில் சில ஆயிரம் பேர் மட்டுமே கொரோனா வைரஸ் தாக்கி மரணமடைந்திருக்கிறார்கள் என்றாலும் தினசரி மரணமடைபவர்களின் எண்ணிக்கை பலரையும் கவலைப்பட வைத்துள்ளது . வைரஸ் தாக்காமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இப்போது ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தனிமைப்படுத்ததலால் சிலருக்கு மன அழுத்தமும், பதற்றமும் ஏற்படுகிறது. இந்த மரணபயமே சிலருக்கு மரணத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஒருவருக்கு சாவு எப்படி வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால் இருக்கிற காலத்தை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் அதை விட்டு மரணபீதியுடனே இருக்க வேண்டியதில்லை. ஒருவருக்கு மரணம் எப்படி வரும் என்பதை அவரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் தீர்மானிக்கின்றன.
Recommended Video
இப்பத்தான் பார்த்துட்டு வந்தேன் அதுக்குள்ள இறந்து போனதா தகவல் வருதே என்பார்கள். கொரோனா வைரஸ் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசிய டாக்டரும் நடிகருமான சேதுராமனின் திடீர் மரணமும், கொரோனா நோய் தொற்று இருக்கலாமோ என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இளைஞரின் மரணமும் பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது. ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா என்பதை உணர்ந்து தர்ம நெறி தவறாமல் அமைதியாக வாழ்ந்தால் நிம்மதியான மரணம் நிகழும்.
சிரித்துக்கொண்டே இறந்தவர்கள் இருக்கிறார்கள். சொந்த பந்தங்கள் புடை சூழ பார்த்துக்கொண்டே இறந்தவர்களும் உண்டு. நோய்கள் தாக்கி வெந்து நொந்து செத்தவர்களும் இருக்கிறார்கள். சிலரோ கடன் தொல்லை, நோய்களின் தீவிரத்தினால் தற்கொலை செய்து கொள்கின்றனர். சிலரோ விபத்தில் உடல்கள் சிதறி மரணித்தவர்களும் இருக்கின்றனர். இதற்கான காரணம் என்ன என்று ஆய்வு செய்தால் மரணத்திற்கான காரணத்தையும் அறிந்து கொள்ளலாம்.
சனி ஆயுள் காரகன்
அற்பாயுள், மத்திம ஆயுள், தீர்க்க ஆயுள் என்று மூன்று உண்டு. 30 வயதிற்குள் இறந்து போனால் அற்பாயுள், 60 வயதிற்குள் மரணமடைந்தால் மத்திம ஆயுள். எண்பது முதல் 100 வயது வரை வாழ்ந்து அனுபவித்து மரணமடைவது தீர்க்க ஆயுள். சனி கர்ம வினை கிரகம். ஆயுள் காரகன் நீதிமான் சனிபகவான், கலியுகத்தில் சகல தெய்வங்களின் தூதுவனாக நின்று நன்மையோ தீமையோ செய்கிறார் சனிபகவான்.
மரண காலம் எப்படி
ஒரு மனிதனின் ஆயுளையும், அவனது மரணம் எப்படி நிகழும் என்பதையும் ஆயுள் ஸ்தானம் எனப்படும் எட்டாம் பாவகம் குறிப்பிடுகிறது. ஆயுளைக் குறிப்பது எட்டாமிடம் என்றாலும் உயிர் வாழ்வது என்பது லக்னம் லக்னாதிபதி சம்பந்தப்பட்டது என்பதால், ஒரு மனிதனை உயிர் வாழும் நிலையை லக்னம், லக்னாதிபதி, எட்டாமிடம், எட்டின் அதிபதி மற்றும் ஆயுள் காரகனாகிய சனியின் நிலைகொண்டு அறிந்து கொள்ள முடியும். ஒருவருக்கு நீண்ட சிறப்பான ஆயுளை தரும் கிரகம் சனி. ஜாதகத்தில் சனியின் நிலையே மரணத்தின் வகையை நிர்ணயிக்கும்.
தீர்க்க ஆயுள் யாருக்கு
ஒருவரின் ஜாதகத்தில் 8 ஆம் இடத்தை கொண்டு ஆயுளை பற்றியும் 2 , 7, 11ஆம் இடத்தை கொண்டு மாரகத்தை பற்றியும் கூறமுடியும். மாரக தசை அல்லது புத்தி வரும் காலங்களில் மிக கவனமுடன் இருப்பது அவசியம். ஓருவருக்கு 2,7,11 அதிபதிகள் தொடர்பு கொள்ளும் காலங்களில் ராகு அல்லது கேதுவையும் தொடர்பு கொள்ளும் போது மரணம் ஏற்படுகிறது. லக்னாதிபதிக்கு 8ஆம் இடத்துக்கு உடைய கிரகத்தை 9 ஆம் இடத்துக்கு உடைய கிரகம் சுபர், பாவியாக இருந்தாலும் அவர் உச்சமடைந்து சேர்ந்தாலும், பார்த்தாலும் சந்தேகம் இல்லாமல் ஆயுள் தீர்க்கம் உண்டு. அதேபோல் 8 ஆம் இடத்துக்குடையவன் ஆட்சி உச்சமானாலும், லக்னத்தில் பலமானாலும் பூரண ஆயுள் உண்டு.
எப்படி எப்போது வரும்
மரணம் ஒருவருக்கு நோய் மூலம் வரலாம், சிலருக்கு திடீர் என்றும் வரலாம். ஒருவருக்கு சாவு பாதகாதிபதி, மாரகாதிபதி, அஷ்டமாதிபதி ஆகிய மூவரின் தசா, புக்திகளிலோ அல்லது இவர்கள் மூவரோடு தொடர்பு கொண்ட கிரகங்களின் தசா, புக்திகளிலோ நடக்கும். சிலருக்கு ராகு-கேதுக்களின் தசா, புக்திகளில் கூட மரணம் நடக்கும். ஒருவரின் மாரகாதிபதிகளின் தசாபுத்தி நடைபெறும் காலத்தில் லக்னத்திற்கு ஏற்படும் கிரகங்களின் தொடர்பை பொருத்து மரணத்தின் தன்மை அமைந்துவிடுகிறது.
விபத்து அவமானம்
சிலருக்கு சாவு வராவிட்டாலும் சாவை விட கொடிய பாதிப்புகள் ஏற்படும். அதற்குக் காரணம் மரணத்திற்கு அதிபதிகளான 2,7,11 அதிபதிகளின் தசா புத்தி அந்தரங்கள் நடைபெற்று அப்போது கோசாரத்தில் ராகு/ கேது ஆகிய சர்ப கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை ஆயுள் ஸ்தானத்திற்கு அமைந்து நிற்கும் போது மரணத்திற்கு நிகரான கண்டங்கள் நிகழ்கின்றது. அந்த நேரத்தில் லக்னமோ அல்லது லக்னாதிபதியோ 6,8,12 அதிபதிகளுடன் தொடர்பு கொள்ளும்போது மரணம் நிகழ்கிறது.
நோய்,ஆயுள், மோட்சம்
ஜாதகத்தில் ஆறாம் இடம் நோய், கடன், எதிரி ஸ்தானம், எட்டாமிடம் ஆயுள் ஸ்தானம், 12ஆம் இடம் மோட்ச ஸ்தானம் ஒருவரின் ஜாதகத்தில் 12ஆம் இடத்தில் எந்த கிரகமும் ஆட்சி, உச்சம், நீச்சம் பெற்றிருக்க கூடாது அப்படி இருந்தால் அவருக்கு அந்த கிரகத்திற்கு உரிய நோய் தாக்கும். 12 ஆம் இடத்தின் அதிபதியின் திசை நடக்கும் போது வெளிநாடு சென்று நோய் தாக்குதலுக்கு ஆளாவார்.
யாரால் எந்த நோய்
நவகிரகங்களில் சூரியன் 12ஆம் வீட்டில் நின்றால் ஏதாவது ஒரு நோய் வந்து கொண்டே இருக்கும். சந்திரன் நின்றால் சளி தொந்தரவு, வாயு தொந்தரவு வரும். செவ்வாய் நின்றால் உடலில் கட்டிகள் வரும். புதன் நின்றால் ரத்தம் தொடர்பான நோய்கள் வரலாம் கால்களில் ரத்த ஓட்டம் தடைபடும். குரு நின்றால் ஏதாவது ஒரு நோய் இருந்து கொண்டே இருக்கும். சுக்கிரன் நின்றால் போதை பொருளுக்கு அடிமையாவார். சனி நின்றால் பித்தம் தொடர்பான நோய் வரும். ராகு நின்றால் பருவ கால நோய்கள் தாக்கும். சுவாச கோளாறுகள் தாக்கும். கேது நின்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.
பரிகாரங்கள்
ஆரோக்கியம் என்பது வெறும் உடல் சார்ந்த விசயம் மட்டுமல்ல மனதோடு தொடர்புடையதும் கூட. நோய் தாக்கினால் கூட நேர்மறையான சிந்தனையோடு எதிர்கொள்ள வேண்டும். அதுவே மகிழ்ச்சி ஹார்மோன்களை சுரக்கச் செய்யும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இப்போது குடும்பத்துடன் நேரத்தை கழிக்க அனைவருக்குமே கூடி வந்துள்ளது. இந்த நாட்களை தவற விட வேண்டாம். சந்தோஷமாக அனுபவியுங்கள் எந்த நோயும் தாக்காது. இந்த வைரஸ் பிரச்சினை பற்றிய பரபரப்பு அடங்கிய பின்னர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் மற்றும் காலசம்ஹார மூர்த்தியை பிறந்தநாட்களிலும் ஜென்ம நட்சத்திரநாட்களிலும் வணங்கி வாருங்கள். தன்வந்திரி ஆலயம் சென்று தரிசனம் செய்வதோடு, ஆயுஷ் ஹோமம், மிருத்யுஞ்ச ஹோமம், சுதர்சன ஹோமம் செய்யலாம். ஆரோக்கியம் அதிகரித்து ஆயுள் நீடிக்கும்.