எந்த சாபத்திற்கு என்ன பாதிப்பு - பாபம் செய்தால் சாபம் வரும்
மதுரை: மனசு நொந்து சொல்லும் சொல் சாபமாக மாறும். பெற்றோர்களோ, சகோதரிகளோ, வீட்டின் மூத்தவர்களோ மனது நொந்து சாபம் விட்டால் அவை ஜென்ம ஜென்மத்திற்கும் தொடர்ந்து வரும். ஒருவரின் வீட்டில் திருமண தடையோ, புத்திர தடையோ, தினசரியும் வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படும். ஜாதகத்தை எடுத்துக்கொண்டு போய் ஜோதிடரிடம் காட்டினால் ஏதோ சாபத்தை சொல்லி பரிகாரம் சொல்வார்கள். இந்து மதத்தில் 13 வகை சாபங்கள் உள்ளன.
அவை பெண் சாபம், பிரேத சாபம், பிரம்ம சாபம், சர்ப்ப சாபம், பித்ரு சாபம், கோ சாபம், பூமி சாபம், கங்கா சாபம், விருட்ச சாபம், தேவ சாபம்,ரிஷி சாபம், முனி சாபம், குலதெய்வ சாபம் என இந்த சாபங்கள் மனிதர்களை பாதிக்கின்றன.
முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும்,பித்ரு சாபத்தை ஏற்படுத்தும்.
பித்ரு சாபம்
பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும். வீட்டில் உள்ள வயது மூத்தவர்களை உதாசீனப்படுத்தாமல் அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும்.
பெண் சாபம்
பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும். பெண்களை ஏமாற்றுவதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் இந்த சாபம் ஏற்படுகிறது.
பிரேத சாபம்
பிரேத சாபத்தால் ஆயுள் குறையும். இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும்.
பிரம்ம சாபம்
பிரம்ம சாபத்தால் படிப்பு வராமல் போகும். நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது,வித்தையை தவறாக பயன்படுத்துவது,மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது,இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது.
சர்ப்ப சாபம்
சிலரது வீட்டில் பிள்ளைகளுக்கு திருமண தடை ஏற்படும். ஆணுக்கோ பெண்ணுக்கோ வரன் அமையவே அமையாது. பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும்,சர்ப்ப சாபம் உண்டாகும். இதனால் புத்திரர்களுக்கு திருமணத் தடை ஏற்படும்.
கோ சாபம்
பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.
பூமி சாபம்
ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும்.பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.
கங்கா சாபம்
பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும்.
கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.
விருட்ச சாபம்
பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.
தேவ சாபம்
தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர். தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும்.
ரிஷி சாபம்
ரிஷி சாபத்தால், வம்சம் அழியும். இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும்.
ரிஷி சாபத்தால், வம்சம் அழியும். ரிஷிகளை மதிக்க வேண்டும்.
முனி சாபம்
முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும். எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும்.
குலதெய்வ சாபம்
குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும்.ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும். ஒருவரது வம்சாவளியில் வரும் தாத்தா பாட்டி, தாய் தந்தையர் போன்றோர்கள் குலதெய்வத்திற்கு செய்யவேண்டிய வருடாந்திர பூஜையை முறையாக செய்ய தவறினாலோ, குலதெய்வத்தை அடியோடு மறந்து வேறு இஷ்டதெய்வங்களை மட்டுமே வணங்க தொடங்கி குலதெய்வ கோயிலிற்கு செல்வதை முற்றிலும் தவிர்த்துவிட்டாலோ குலதெய்வத்தின் சாபம் நிச்சயம் ஏற்படும்.