பிராணன் தொடங்கி தனஞ்செயன் வரை மனித உடலில் கட்டுப்படுத்தும் தச வாயுக்கள்
மனித உடலில் பத்து வாயுக்கள் அதாவது தச வாயுக்களை பற்றி தெரிந்து கொள்வோம். மனித உடலில் பத்து விதமான வாயுக்கள் இருந்து ஆட்சி செய்கிறது. இவற்றில் வரும் ஏற்ற தாழ்வுகள் உடலில் பல வித வியாதிகளை உருவாக்குகிறத
சென்னை: காயமே இது பொய்யடா...வெறும் காற்றடைத்த பையடா என்று பாடியிருக்கின்றனர். காற்று சுற்றி வரும் வரைதான் உயிர் இருக்கும். நவ துவாரங்களில் ஏதாவது ஒரு ஓட்டை வழியாக காற்று வெளியேறி விட்டால் இந்த உடல் வெறும் சவம்தான். அதற்குள் எத்தனை ஆட்டம் போடுகின்றனர்.
நாம் விடும் மூச்சு, கழிவாக வெளியேற்றும் வாயுக்கள், கொட்டாவி, கண் இமைத்தல் என ஒவ்வொன்றையும் ஒவ்வொருவிதமான வாயுக்கள் கட்டுப்படுத்துகின்றன. குழந்தை கருவில் உற்பத்தியாகும் போது தச வாயுக்கள்தான் அவற்றின் வளர்ச்சியை நிர்மானிக்கின்றன.
மனித உடம்பில் நவ துவராங்கள் இருப்பது எப்படியோ அதே போல தச வாயுக்கள் உள்ளன. மனித உடலிற்குள் இந்த பத்து விதமான வாயுக்கள் சுற்றிச் சுற்றி வந்து ஆட்சி செய்கிறது. இவற்றில் வரும் ஏற்ற தாழ்வுகள் உடலில் பல வித வியாதிகளை உருவாக்குகிறது. உடம்பில் சின்ன சின்ன வலிகள் பிடிப்புகள் ஏற்பட்டால் கூட வாயு பிடிப்பு என்று சொல்வது அதனால்தான். தும்மல், விக்கல், இருமல் என அனைத்து வேலைகளை செய்வதும் இந்த வாயுக்கள்தான்.
உடலை விட்டு , இந்த இடத்தில் உயிர் பிரிய வேண்டும் என முன்பே தீர்மானிக்கப்பட்டுள்ள இடத்தில்தான் உயிர் உடலை விட்டு பிரியும். உயிர் வெளியே புறப்படும் நாள் , நேரம் நெருங்கியுடன் உடலின் அனைத்து செல்களும் முடக்கப்பட்டு, எல்லாவித வாயுக்களின் வழிகளும் ஒவ்வொன்றாக அடைக்கப்பட்டுக் கொண்டே வரும். உயிர் பிரியும் முன்பாக நமது அனைத்து உறுப்புகளையும் அவற்றின் செயல்பாடுகளையும் ஒவ்வொன்றாக நிறுத்தி , நமது நடு நெஞ்சுக்கு கொண்டு வந்து வைத்து உயிர் வெளியேற வழி வகுத்து கொடுக்கும். உயிரானது சிலருக்கு கண்களின் வழியாகவும், சிலருக்கு வாயின் வழியாகவும், வேறு சிலருக்கு உச்சி மண்டையின் வழியாகவும் , இன்னும் சிலருக்கு ஆசன துவாரத்தின் வழியாகவும் , சிறுநீர் பாதை வழியாகவும் , காதின் வழியாகவும் , மூக்கின் வழியாகவும், தொப்புள் குழி வழியாகவும் சிலருக்கு உயிர் வெளியேறும்.
உடலை இயக்கும் வாயுக்கள்
தச வாயுக்களில் ஒன்பது வாயுக்களும் நிறுத்தப்பட்டு, அது செயல்படுத்தும் உறுப்புக்களும் முழு நிறுத்தம் கண்டு, எந்த வழியாக உடலை விட்டு உயிர் வெளியேற வேண்டுமோ அந்த வழியாக தனஞ்செயன் என்ற அந்த வாயு மற்றவற்றையும் வெளியே அழைத்து செல்லும். அதன் பின்னரே உயிர் பிரியும். மீண்டும் பிறப்பெடுக்கும் காலம் வரும்போது அதற்கென குறிப்பிட்ட தாயின் கர்ப்பத்தில் சேர்ப்பிக்கும் வேலையும் அந்த தனஞ்செயன் தான் செய்யும். இப்படி மனித உடலை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பத்து வாயுக்கள் பற்றி அனைவரும் தெரிந்து கொண்டே ஆக வேண்டும். சுவாசக்காற்று அல்லது உயிர் காற்று பிராணன், மலக்காற்று அபானன், தொழில் காற்று வியானன், ஒலிக்காற்று எனப்படுவது உதானன், நிரவுக்காற்று எனப்படுவது சமானன், தும்மல் காற்று நாகன், விழிக்காற்று கூர்மன், கொட்டாவிக் காற்று கிருகரன், இமைக் காற்று தேவதத்தன், வீங்கற் காற்று தனஞ்செயன் என்பவைதான் பத்துவிதமான வாயுக்கள்.
உயிர்வாழ உதவும் காற்று
பிராணன் - மூலாதரத்தில் ஆரம்பித்து இதயத்தில் நின்று மூக்கு வழியாக மூச்சு விடல். இது மேல் நோக்கி இயங்கும். மற்ற ஒன்பது வகை வாயுவிற்கும் இதுவே மூலாதாரம். அபானன் - சுவாதிட்டானத்தில் இருந்து வெளிப்பட்டு மலம், சிறுநீறு போன்றவைகளை கீழ் நோக்கி தள்ளும், ஆசனவாயை சுருக்கும். அன்னத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும். இது கீழ் நோக்கி இயங்கும்.
தொழில் காற்று
வியானன் - இது தொழில் காற்று மூளையின் கட்டளைகளை அனைத்து உறுப்புகளுக்கும் கொண்டு செல்லும். தோளிலிருந்து எல்லா நரம்பிலும் அசையும் அசையாபொருளில் உறுப்புக்களை நீட்ட மடக்க உணர்ச்சிகளை அறியவும் உணவின் சாரத்தை கொடுத்து உடலைக் காக்கும். உதானன் உணவின் சாரத்தை கொண்டு செல்லும் உடலை எழுந்து நிற்க உதவும். மேல் நோக்கி இயங்கும் வாயு. குரல் நான்களை அதிரச் செய்து ஒலியை எழுப்புகிறது இந்த வாயு.
நச்சு வெளியேற்றும் காற்று
சமானன் - நாம் உண்ணும் உணவு ஜீரணிக்க உதவுகிறது இந்த வாயு. நாபியிலிருந்து கால் வரை பரவும் வாயுக்களை அதிகப்படாமல் சரி செய்யும், உண்ட உணவு செரித்தவுடன் ரத்தத்திற்கும் எல்லா உறுப்புகளுக்கும் பகிர்ந்து அனுப்பும் வேலையை செய்கிறது இந்த வாயு. நாகன் - உடம்பில் சேர்ந்த நச்சுக்களை வெளியேற்றுவது நாகன். இது அறிவை வளர்க்கும், கண்களை திறப்பதற்கும், இமை மூட வேலை செய்யும். வாந்தி எடுத்தால் குமட்டல் போன்ற வேலைகளை செய்ய உதவுகிறது.
தும்மல்
கூர்மன் - கண்ணில் நிற்கும் வாயு இது. கொட்டாவி, வாய் மூட, கண் இமைக்க, கண்ணீர் வர வேலை செய்யும். கிருகரன் - இது தும்மல் காற்று. நம் உடம்பில் எந்த தூசியும் மாசுவும் நுழைய விடாது. தும்மல், இருமலை உண்டு பண்ண உதவும் வாயு இது. நாக்கில் கசிவு, நாசி கசிவு உண்டு பண்ணும், பசியை வர வைக்கும் இந்த வாயு.
விக்கல்
தேவதத்தன் - கொட்டாவி, விக்கல் போன்றவை ஏற்பட காரணமே இந்த வாயுதான். மூளைக்கு போகும் வாயுவை குறைத்தல், ரத்தத்தில் பிராண வாயுவின் அளவு குறைவது, உடல் ஓய்வு நிலைக்கு தயாராவது சோம்பல், தூங்கி எழும்போது ஒரு வித சோர்வை தருவது இந்த வாயுதான்.
உயிர் பிரிந்த பின்னர்
தனஞ்செயன் - ஒருவர் உயிரோடு இருக்கும் போது மேற்சொன்ன ஒன்பது வாயுக்களும் நன்றாக வேலை செய்யும். உயிர் பிரிந்த பின்னர் ஒன்பது வாயுக்களும் செயல்பாட்டை நிறுத்திய பின்னர் இந்த தனஞ்செயன் வாயு செயல்படத் தொடங்கும். இதனை வீங்கல் காற்று என்றும் சொல்வார்கள். மூக்கிலிருந்து உடல் முழுதும் வீக்கத்தை ஏற்படுத்தும். நுண்ணியிரிகள் மூலம் உடலை அழுகச் செய்யும். கடல் அலை இரைச்சல் போல் இரைத்தல், இறந்த மூன்றாம் நாள் தலை வழியாக வெளியே செல்லும்.