தரம் உயர்த்தும் தச மஹாவித்யா யாகம் - 27 நக்ஷத்திர காயத்ரி ஹோமம்
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 08.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தச மஹாவித்யா ஜபம் மற்றும் ஹோமம் நடைபெறுகிறது.
வேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 08.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தச மஹாவித்யா ஜபம் மற்றும் ஹோமம் நடைபெறுகிறது.
15.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை உலகில் பிறந்த அனைத்து மக்களின் உடல் பிணி உள்ளத்துப் பிணி நீங்கவும், நக்ஷத்திர தோஷங்கள் அகலவும் மற்றும் பல்வேறு காரணங்களின் தீர்வுகளுக்காக 27 நக்ஷத்திர காயத்ரி ஹோமம் நடைபெற உள்ளது.
பெண்மையின் சக்தியை தாய்மை முதல் சம்ஹாரம் வரை உணர்த்துபவர்கள் இந்த தேவியர்கள். இவர்களே ஸ்ரீசாக்த மார்க்கத்தின் ஆதிதேவியர்கள் ஆவார்கள். மேலும் மஹாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களின் போது இந்த தேவியர்கள் ஒவ்வொருவரும்தான் ஆதார சக்தியாக இருந்தார்கள் என்று 'முண்டமாலா தந்திரம்' என்ற நூல் கூறுகிறது. காளி, தாரா, ஸ்ரீவித்யா, புவனேஸ்வரி, பைரவி, ஸ்ரீ சின்னமஸ்தா, ஸ்ரீ தூமாவதி, ஸ்ரீ பகளாமுகி, ஸ்ரீ ராஜமாதங்கி, ஸ்ரீ கமலாத்மிகா என்ற பத்து தேவியர்கள்தான் தசமகா வித்யா தேவியர் என்று அழைக்கப்படுகின்றினர்.
காளி: காலத்தை நிர்ணயிப்பவள் என்பதாலும், கருப்பு நிறத்தைக் கொண்டவள் என்பதாலும் 'காளி" என்று அழைப்படுகிறாள். கத்தி , சூலம், கபால மாலை தாங்கி மயானத்தில் வசிக்கும் இந்த தேவி அச்சமூட்டும் வடிவம் கொண்டவள். துர்சக்திகளை அழிக்கும் ஆற்றல் கொண்டவள். தட்சிண காளி என்ற வடிவில் வழிபட்டு வருகின்றோம்.
தாரா: தாரா தேவிபத்தாக பிரகாசிக்கும் தேவியரில் இரண்டாவதாக பொலிபவள் தாராதேவி. பக்தர்களை சம்சாரம் எனும் கடலில் மூழ்காமல் காத்து முக்தியை அருள்வாள். நரகசதுர்த்தசி அன்று காளி, தாரா வழிபாட்டால் பல மடங்கு பலன் கிடைக்கும். வாக்கு வல்லமை, அளவற்ற செல்வம், தந்து, ஞானமும், முக்தியும் கிட்டச் செய்யும் தேவி இவள். ஆலகாலம் உண்ட சிவனைத் தாங்கிய தேவி இவள். உலக இச்சையை கத்தரிக்கும் இந்த தேவியின் உபாசனை, ஏவல் சக்திகளை ஒடுக்கி ஞானம் அளிக்கும் வல்லமை கொண்டது. தாரா தேவி தாய்மையின் வடிவமாக போற்றப்படுகிறாள்.
திரிபுர சுந்தரி : பாலா திரிபுர சுந்தரி, லலிதா பரமேஸ்வரியின் விளையாட்டின் ரூபமாக பண்டாசர வதத்தின்போது தோன்றியவள் பாலாதேவி. லலிதையின் அங்கத்திலிருந்து தோன்றியவள். ஒன்பது வயது தோற்றத்தோடு கூடியதால் பாலா திரிபுரசுந்தரி என்றழைக்கப்பட்டார். சகல நலன்களையும் தருபவள். எல்லாம் வல்ல இறைவியான பாலாவின் தாள் பணிந்து தடைகளைத் தகர்த்து வாழ்வில் வளம் பெறுவோம். ஸ்ரீவித்யா என்ற இந்த மூன்றாவது சக்தி ஷோடசி, திரிபுரசுந்தரி, லலிதாம்பிகை என்றெல்லாம் போற்றப்படுகிறாள். சக்திகளில் பேரழகு கொண்ட இவள் மோட்சம் அளிப்பவள். மாயைகளைக் கட்டவிழ்க்கும் மகாசக்தி. அறியாமை விலக்கி அருள் செய்யும் தேவி இவள்.
புவனேஸ்வரி: அகிலத்தை தாங்கும் ஆதிசக்தி இவள். உலகின் உருவாக்கத்துக்கு காரணமான மகா சக்தியாக விளங்குகிறாள். தீயவற்றை அழிப்பவளாகவும், நல்லவற்றை உருவாக்குபவளாகவும் புவனேஸ்வரி விளங்குகிறாள். கேட்கும் வரங்களை அளிக்கும் தீனதயாபரி என்று புராணங்கள் வர்ணிக்கின்றன.
திரிபுரபைரவி : தஸமகாவித்யையின் ஐந்தாம் வடிவம் திரிபுரதேவி. இவள் அருள் பெற்றால் எல்லாம் கிடைக்கும். மண்டை ஓட்டு மாலையை தரித்துள்ளதால் பக்தர்களின் மரண பயம் நீங்கும். ஜாத வேதஸே எனும் வேத மந்திரத்தினால் இவளைத் துதிக்க நிவாரணமும், தனலாபமும் கிட்டும். பைரவ மூர்த்திக்கு இணையாக வடிவம் கொண்ட சக்தி இவள். தீய அரக்கர்களையும், கொடிய சக்திகளையும் சம்ஹாரம் செய்யவென்றே தோன்றிய இவள் சித்த பைரவி, சைதன்ய பைரவி, ருத்ர பைரவி, திரிபுரா பைரவி, கால பைரவி, சண்ட பைரவி, வீர பைரவி என பதினாறு வடிவங்கள் கொண்டவள். இவளை வழிபட மரண பயம் நீங்கும் என்பர்.
ஸ்ரீ சின்னமஸ்தா: தசமஹா வித்யைகளில் ஆறாவது தேவியாக அருட்பாலிக்கிறாள் சின்ன மஸ்தா. சூர்ய மண்டலத்தின் ஒளியைப் பழிக்கும் தேக காந்தியையுடையவள். ஆறாவதாக அருள்வதால் ஷஷ்டி தேவி எனவும் வழிபடுவர். இத்தேவி ஒரு கையில் வெட்டப்பட்ட தன் தலையையே தாங்கிய கோலத்துடன் உள்ளாள். பிரசண்ட சண்டிகா என்ற பெயரில் அகோரிகள் வழிபடும் தேவி இவள். தீயசக்திகளை வசப்படுத்த இவளை சாக்த வழிபாட்டில் வழிபட்டனர்.
தூமாவதி: தசமஹாவத்யைகளில் ஏழாவது வித்யையாக பிரகாசிப்பவள் தூமாதேவி. கருத்த நிறம் கொண்டவள். மயானத்தில் வாசம் செய்வதில் பிரியமுள்ளவள். விதவைக் கோலத்தில் காணப்படுகிறாள். காமம், குரோதம், அகங்காரத்தை போக்கி மகிழ்ச்சியை தந்து அருள்கிறாள். வயோதிகத்திலும் பேரருளும், பேரின்பமும் உண்டு என்பதை உணர்த்துகிறாள். அமங்கலமான தேவியாக இவள் வர்ணிக்கப்படுகிறாள். அரிய வித்தைகளின் குருவாகவும், வரங்களைத் தருபவளாகவும், தூமாவதியை கூறினாலும் வறுமை, நம்பிக்கை யின்மை ஆகியவற்றின் குறியீடாக இந்த தேவி இருக்கிறாள். ஜேஷ்டா தேவி என்றும் அழைத்து மகிழ்கின்றனர்.
ஸ்ரீ பகளாமுகி: லலிதா பரமேஸ்வரியான சேனாதிபதியான இவளுக்கு தண்ட நாதா, தண்டினி என்ற பெயர்கள் உண்டு. ஒரு கையால் எதிரியின் நாக்கைப் பிடித்துக் கொண்டும் மற்றொரு கையால் கதாயுதமும் தரித்தவள். அசுரர்களை அழிக்க முருகனுக்கு, பரமன் 'ப்ரஹ்மாஸ்த்திரம்' என வழங்கப்படும் பகளா முகீ மந்திரத்தை அருளினார். "பீதாம்பரி, பிரம்மஸ்திர ரூபிணி" என்ற பெயரில் வணங்கப்படும் இவள், மஞ்சள் ஆடை உடுத்தி, இளம்பிறை சூடி காணப்படுகிறாள். மனதை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவள் இவள் என்பதால் சித்தர்கள் பலர் இவளை வணங்கி பேறு பெற்றுள்ளார்கள்.
ஸ்ரீராஜமாதங்கி : மதங்க முனிவரின் மகளாக அன்னை பார்வதி தோன்றியதால் மாதங்கி என்று பெயர் பெற்றாள். சியாமளா தேவி என்றும் இவளை வணங்குகிறார்கள். நீலம் கலந்த பச்சை நிறத்தில் காட்சி தரும் தேவி சகல செல்வங்களையும் அருளக் கூடியவள்.
கமலாத்மிகா: மகாலட்சுமியின் வித்யா வடிவமே கமலாத்மிகா என்று வணங்கப்படுகிறது.இவளே திருமாலின் போக சக்தி என்று போற்றப்படுகிறாள். ஆதிசங்கரருக்கு தங்க நெல்லிக்கனிகளை வழங்கியவள் இந்த கமலாத்மிகா என்று கூறப்படுகிறது. அகில அண்டங்களை படைத்தவள் பராசக்தி. அவளை தசமஹாவித்யாவில் கமலாத்மிகா வித்யையாக பத்தாவது வடிவில் வழிபடுகின்றனர். மண்ணிலிருந்து சீதையாகவும், தீயிலிருந்து தடாகையாகவும், தாமரையிலிருந்து பார்கவியாகவும் அவதரித்த தேவி பாற்கடலைக் கடைந்தபோது திருமகளாய் நின்றாள். லக்ஷ்மி, ஸ்ரீ கமலா, கமலாலயா, பத்மா, ரமா, நளினீ, யுக்மகரா எனும் நாமங்களால் துதிக்கப்படுகிறார். இந்த தசமகா தேவியர்கள் ஞானிகள், முனிவர்களால் உக்கிரம் குறைக்கப்பட்டு தற்போது பொதுமக்கள் வழிபாட்டில் இருந்து வருகிறார்கள். தசமகா வித்யா தேவியர் அருளால் அஞ்ஞானம் அழித்து ஞானம் பெற பிரார்த்திப்போம்.
உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் சந்தித்து வருகிறோம். அனைவரும் நிம்மதியாக வாழ்கின்றோம் என்றால் இல்லை எனலாம். ஒரு சில குடும்பத்தில் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெறவில்லை. சிலருக்கு குழந்தை பாக்யம் இல்லை, பலருக்கு தொழில் அமையவில்லை, கணவன், மனைவி பிரிவினை, பிள்ளைகளும் பெற்றோர்களும் பேசுவது கூட கடினமாக உள்ளது, சிலருக்கு கடன், காமம், குரோதம் போன்ற பிரச்சனைகள், இதுபோன்ற செயல்களை நாம் கூறிகொண்டே போகலாம். இவற்றுக்கு எல்லை என்பதே இல்லை.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மேலும் பாதிப்புகள் வராமல் இருக்க பிராயச்சித்த ஹோமமாக வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 15.07.2018 ஞாயிற்றுக்கிழமை த்விதீய திதியில் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை உலகில் பிறந்த அனைத்து மக்களின் உடல் பிணி உள்ளத்துப் பிணி நீங்கவும், நக்ஷத்திர தோஷங்கள் அகலவும் மற்றும் பல்வேறு காரணங்களின் தீர்வுகளுக்காக 27 நக்ஷத்திர காயத்ரி ஹோமம் நடைபெற உள்ளது.
இந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி யாகத்தில் பங்கேற்கலாம் தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203.