அன்னதோஷம் நீக்கும் அன்னபூரணி - தீபாவளியில் தரிசிக்க குறைவில்லாத உணவு கிடைக்கும்
தீபாவளி நாளில் லட்சுமி குபேர பூஜை செய்வது சிறப்பு. இதே போல அன்னபூரணியை விரதமிருந்து வணங்க வற்றாத செல்வங்களும், உணவும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சென்னை: அன்னபூரணியை வணங்குபவர்களுக்கு அன்னதோஷம் என்னும் வறுமை அணுகவே அணுகாது. காசியில் அன்னபூரணி அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரத்தில் பால் அன்னம் தந்து உலக உயிர்களின் அன்னதோஷம் என்னும் வறுமை அண்டாதவாறு அருள்புரிகிறாள். அன்ன துவேஷத்தையும் போக்குபவள் அன்னபூரணி. தீபாவளி நாளில் தங்க அன்னபூரணியை தரிசிக்க அன்னதோஷம் நீங்கும்.
தீபாவளி நாளில் லட்சுமி குபேர பூஜை செய்வது போல அன்னபூரணியை விரதமிருந்து வணங்க வற்றாத செல்வங்களும், உணவும் கிடைக்கும் என்பது ஐதீகம். தனதிரயோதசி தொடங்கி தீபாவளி, அமாவாசை நாட்களில் காசியில் தங்கமயமாய் காட்சி தரும் அன்னபூரணியை தரிசிக்க வாழ்நாள் முழுவதும் அள்ள அள்ள குறையாத அன்னமும் செல்வமும் கிடைக்கும்.
நவரத்ன சிம்மாசனத்தில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் அன்னையின் ஒரு கரத்தில் அட்சய பாத்திரமும், மறு கரத்தில் தங்க கரண்டியுடன் கூடிய தங்கத்தில் ஜொலிக்கும் அன்னபூரணியை தீபாவளியின்போது மூன்று நாட்களுக்கு மட்டுமே தரிசிக்க முடியும். அன்னையிடம் பிச்சை கேட்கும் பிட்சாடனார் உருவமும் அருகில் ஆரடி உயரத்தில் உள்ளது. இந்த சிலை வெள்ளியால் செய்யப்பட்டது.
தீபாவளியன்று அன்ன கூடம் என்ற நிகழ்வில் பலவித உணவுகள், பலகாரங்கள் வைத்து பூஜை செய்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படும். மறுநாள் லட்டு தேரில் அன்னபூரணி ஊர்வலம் வருவதைக்காண கண் கோடி வேண்டும். எண்ணற்ற லட்டுகளால் உருவான தேரில் உள்ள லட்டுக்களை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுப்பார்கள்.
பிரம்மன் கர்வம்
அன்னபூரணி அவதாரம் எப்படி நிகழ்ந்தது. அவர் காசிக்கு எப்படி வந்தார் என்பதே ஒரு புராண கதையாக சொல்லப்படுகிறது. நான் முகன் என்று போற்றப்படும் பிரம்மனுக்கு முன்பு ஐந்து தலைகள் இருந்தனவாம். இதனால் கர்வம் அதிகமாக இருந்தது. பார்வதி, பரமசிவன், பிரம்மா ஆகிய மூவருக்கும் இடையேயான சிறு பிரச்சினையில் பிரம்மனின் ஒரு தலையை சிவனார் அறுத்து விட்டார்.
பிச்சை எடுத்த சிவன்
பிரம்மனின் தலையை அறுத்த சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது. பிரம்மனின் கபாலம் சிவன் கையிலேயே ஒட்டி கொண்டது. இந்த தோஷம் நீங்க பிட்சாடனாராக சிவபெருமான் பல இடங்களில் பிச்சை பெற்றார். ஆயினும் சிவன் கையை விட்டு கபாலம் விழவில்லை. அந்த பாத்திரத்தில் எந்த பொருளும் தங்கவில்லை.
பசி தீர்த்த அன்னபூரணி
அதே நேரம் பிரம்மதேவனை பார்த்து சிவனார் என நினைத்து வணங்கிய பார்வதி, தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்கொண்டு அன்னபூரணியாக அவதரித்து காசியில் தவம் செய்தாள். இந்த சமயத்தில்தான் பிட்சாடனாராக வந்த சிவபெருமான் அன்னபூரணியிடம் பிச்சை பெற்றார். அந்த நேரமே பிரம்மனின் கபாலம் சிவபெருமான் கையை விட்டு விலகியது. சிவனின் பசியை தீர்க்க வந்த அன்னபூரணி உலக பசிப்பிணி தீர்க்க காசியிலேயே தங்கி விட்டார் என்கிறது புராண கதை.
அன்னதோஷம் தீர்க்கும் அன்னபூரணி
நாம் உணவாய் உண்ணும் அனைத்தையும் விளைவிப்பதும், அதற்கு ஆதாரமாய் இருப்பதும் அன்னபூரணியே. இந்த அன்னபூரணியை தீபாவளியன்று தொடர்ந்து மூன்று நாட்கள் விரதமிருந்து பூஜை செய்து வணங்கலாம். அதுபோல் அன்னபூரணி உருவச்சிலை வைத்து பூஜை செய்து வணங்கிடலாம். அன்னபூரணி அனைத்து நலன்களையும் தருவாள். அன்னபூரணியை வணங்குபவர்களுக்கு அன்னதோஷம் என்னும் வறுமை அணுகவே அணுகாது.
பசியோடு இருப்பவர்களுக்கு உணவு
தன் தேவைக்கும் அதிகமாக உணவைத் தயார் செய்து வீணடிப்பவர்களை, தான் உண்டது போக ஏராளமான அன்னம் கைவசம் இருந்தும், அதை யாருக்கும் பகிர்ந்து அளிக்காமல் குப்பையில் வீசுபவர்களை, மற்றும் பித்ருக்களுக்கு ஒழுங்காகப் பிண்டம் அளிக்காதவர்களுக்கும் அன்னதோஷம் ஏற்படும். சாப்பிடும் பந்தியில் நமக்கு வேண்டியவர்களுக்குத் தேவையான உணவை அளித்து மற்றவர்களைக் கவனிக்காமல் இருப்பதும் கூட அன்னதோஷம்தான். கறவை நின்ற பசு மாட்டிற்குத் தேவையான உணவு அளிக்காதவர்களை அன்னதோஷம் பீடிக்கும் என சாஸ்திரம் கூறுகிறது.
அன்ன துவேஷம்
பசியால் வாடுபவர்களுக்கு உணவு தராமல் விரட்டினால் அன்னதோஷம் ஏற்படும். அன்னதோஷம் பீடித்தால் வீட்டில் எவ்வளவு உழைத்தாலும் செல்வம் தங்காது. தரித்திரம் ஆட்டிப்படைக்கும். அன்னதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னதுவேஷம் எனும் உணவைக் கண்டாலே வெறுப்பு உண்டாகும் நோய் ஏற்படும். இப்படி அன்னதோஷத்தாலும் அன்ன துவேஷத்தலும் பீடிக்கப்பட்டவர்களும் அன்னபூரணியை தரிசனம் செய்ய தோஷமும் துவேஷமும் நீங்கும்.
பசியாற்றும் அன்னபூரணி
சகலருக்கும் பசியை நீக்கிய பிறகே இந்த அன்னை தனது பசியாறுவாள் என்றும் கூறப்படுகிறது. அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரத்தில் பால் அன்னம் கொண்டு உலக உயிர்களின் பசிப் பிணி போக்கும் அன்னை அன்னபூரணியின் பிரியமும் அருளும் நமக்கு நாளும் கிடைக்கவேண்டுமெனில், அன்னதானம் செய்ய வேண்டும். பிறரின் பசியாற்றினால் நமக்கு வாழ்நாள் முழுவதும் அன்னத்திற்கு குறையிருக்காது.