தீபாவளி: தந்தேரஸ் தொடங்கி யம துவிதியை வரை ஐந்து நாள் அட்டகாசமாக கொண்டாடலாம்
தீபாவளி பண்டிகை தமிழ்நாட்டில் ஒருநாள் கொண்டாடப்படுகிறது வட இந்தியாவில் ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். கோவத்ஸ துவாதசி, தன திரயோதசி, தன்வந்திரி ஜெயந்தி, எம தீபம், நரக சதுர்த்தசி தீபாவளி
சென்னை: வட இந்தியாவில் தீபாவளித் திருநாள் ஐந்து நாள் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. துவாதசி தொடங்கி திரயோதசி, சதுர்த்தசி அமாவாசை, பிரதமை, துவிதியை என ஐந்து தினங்களும் திருநாள்தான். தீபாவளிக்கு முதல்நாள் முன்னோர்களுக்கு யமதீபம் ஏற்றி வழிபடுகின்றனர். தனத்திரயோதசி நாளில் மகாலட்சுமி வீட்டிற்கு வருகிறார் என்பது ஐதீகம். மகாலட்சுமியை வரவேற்க லட்சுமி குபோர பூஜை செய்கின்றனர். தன்வந்திரி ஜெயந்தி கொண்டாடுகின்றனர். தமிழ்நாட்டில் நரக சதுர்த்தசி தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
வட இந்தியாவில் தீபாவளி சர்வ அமாவாசை நாளில் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். கேதார கௌரி விரதம் இருப்பவர்கள் லட்சுமி பூஜை செய்கின்றனர். அமாவாசை முடிந்து வளர்பிறை பிரதமை நாளில் கோவர்த்தன பூஜை செய்கின்றனர்.
எம துவிதியை கொண்டாடுவது வட இந்தியாவில் சிறப்பு சகோதரர்களை அழைத்து விருந்து போட்டு புத்தாடைகள் கொடுத்து அவர்களுக்கு பொட்டு வைத்து ஆசி வழங்குகின்றனர் ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறிக்கொள்கின்றனர். தீபாவளியை ஒட்டி வரும் எம துவிதியை மற்றும் எம தீபம் ஏற்றும் திரயோதசி ஆகிய தினங்கள் தனக்கு உகந்தவை ஆதலால், தீபாவளிப் பண்டிகை கையை எமதர்மன் விரும்புவதாக புராணங்கள் கூறுகின்றன.
தன திரயோதசி
தந்தேஸ் எனப்படும் தனத்திரயோதசி நாளில் லட்சுமி குபேர பூஜை செய்ய வீட்டில் செல்வ வளம் பெருகும். அக்ஷய திரிதியை நாளில் வாங்கும் பொருட்கள் பெருகும் என்பது நம்பிக்கை. இதே போல ஐப்பசி மாதம் தேய்பிறையில் வரும் திரயோதசி தனத்திரயோதசியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் வாங்கும் பொருட்களும் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இன்று அக்டோபர் 25, 2019 வெள்ளிக்கிழமை தந்தேரஸ் எனப்படும் தனத்திரயோதசி கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில் இரவு 7.08 மணி முதல் 8.15 மணி வரை நல்ல நேரமாகும்.
சின்ன தீபாவளி
சின்ன தீபாவளி எனப்படும் நரக சதுர்த்தசி அமாவாசைக்கு முதல்நாள் கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் நரகாசூர வதம் நிகழ்ந்ததாக புராண கதைகள் சொல்கின்றனர். ராமாயணத்தில் ராம லட்சுமணர் சீதா தேவி உடன் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து நாடு திரும்பிய நாளாக கொண்டாடப்படுகிறது. மக்கள் ராமரை வரவேற்கும் விதமாக விளக்குகள் ஏற்றி கொண்டாடிய நாளே தீபாவளி. நாடு நகரம் இழந்து வனவாசம் சென்ற பாண்டவர்கள் குருச்ஷேத்திர போர் முடிந்து திரும்பிய நாளாக கொண்டாடப்படுகிறது.
பெரிய தீபாவாளி
மூன்றாவது நாளான அமாவாசையன்று அவர்கள் பெரிய தீபாவளி கொண்டாடுகிறார்கள். விளக்குகளுடன் ஒளிரும் தங்கள் வீட்டுக்கு வந்த, மகாலட்சுமியை வரவேற்கும் விதமாக மாலையில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் செய்கிறார்கள். மேற்கு வங்கம், ஒடிசா, அசாம் போன்ற மாநிலங்களில் காளி தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.
கிருஷ்ணருக்கு விழா
நான்காவது நாள் பண்டிகை, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகிறது. பொதுவாக, கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்து வருணன் மற்றும் இந்திரனின் செருக்கை அடக்கிய கிருஷ்ணரைப் போற்றும் வகையில்,கோவர்த்தன பூஜை கொண்டாடப்படுகிறது. சில மாநிலங்களில், மகாவிஷ்ணு வாமனராக வந்து மகாபலிச் சக்கரவர்த்தியை வெற்றிகொண்ட தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
புதுக்கணக்கு போடும் நாள்
இன்னும் சில மாநிலங்களில் ராவணனை சம்ஹாரம் செய்து ராமர் அயோத்திக்குத் திரும்பிய நாளாகவும் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் ராமபிரானுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்கிறார்கள். குஜராத்தில் இந்த நாளைத்தான் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள். வியாபார நிறுவனங்களில், அன்றுதான் புதுக் கணக்கு துவங்குகிறார்கள்.
சகோதரர்களுக்கு பரிசு
ஐப்பசி மாதம் வளர்பிறை துவிதியை எம துவிதா வாக வட மாநிலத்தவர் கொண்டாடுகிறார்கள். பால்பிஜி என்றும், பையாதுஜ் என்றும் போற்றப்படுகிறது இந்தத் திருநாள். மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும், நேபாளத்திலும் இந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. இதற்கு புராண கதையும் உள்ளது. ஒரு முறை ஐப்பசி மாத வளர் பிறை துவிதியை அன்று தன் சகோதரி எமி யின் வீட்டுக்குச் சென்றார் எமதர்மன். அவருக்கு ஆரத்தி எடுத்து, மாலை சூடி, திலகம் இட்டு அன்புடன் வரவேற்றாள் எமி. இருவரும், ஒருவருக்கு ஒருவர் பரிசுகளையும் பலகாரங்களையும் கொடுத்து தங்கள் பாசத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
எமனின் ஆசிர்வாதம்
சகோதர பாசத்தை வளர்க்கும் இந்த விழாவை எமனுக்குப் பிடித்த விழா என்று புராணங்களும் போற்றுகின்றன. சகோதரியின் அன்பில் மகிழ்ந்த எமதர்மன், ''இந்த தினத்தில், தன் சகோதரியின் கைகளால் திலகம் இட்டுக் கொள்பவர்களை நான் துன்புறுத்த மாட்டேன். அவர்களுக்கு அகால மரணம் கிடையாது என்று வரம் தந்தாராம். எனவே எம துவிதியைத் திருநாளில் வடநாட்டுப் பெண்கள், தங்கள் சகோதரர்களைச் சந்தித்து, அவர்களின் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துகிறார்கள்! ஐந்து நாள் பண்டிகை கொண்டாட முடியாவிட்டாலும் எம தீபம் ஏற்றுவோம் லட்சுமி பூஜை செய்வோம், முன்னோர்களை வழிபட்டு தீபாவளியை கொண்டாடுவோம்.