தீபாவளிக்கு நல்லெண்ணெய் தேய்த்து சுடுநீரில் குளிப்பது ஏன் தெரியுமா
தீபாவளி நாளில் உச்சி முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பார்கள். அந்த நாளில் மட்டும் சூரிய உதயத்திற்கு முன்பாகவே நல்லெண்ணெயை தேய்த்து குளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
சென்னை: தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசும், பலகாரமும் முதலிடம் பிடிக்கும். கிராமப்புறங்களில் அசைவ உணவு களைகட்டும் இவை அனைத்துக்கும் முன்பாக உடம்பில் குளிர குளிர எண்ணெய் தேய்த்து வெந்நீர் குளியல் போடுவது முக்கியம். உச்சி முதல் உள்ளங்கால்வரை நல்லெண்ணெய் தேய்த்து ஊறவைத்து வெது வெதுப்பான வெந்நீரில் குளியல் போடுவது பாரம்பரியம். இந்த ஆண்டு தீபாவாளி அக்டோபர் 27ஆம் தேதி ஐப்பசி 10ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள் சூரிய உதயமாகும் முன்பாக எண்ணெய் தேய்த்து குளிப்பது சம்பிரதாயம். எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் பலன்களைப் பார்க்கலாம்.
நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் இளநரை வராது. சளி, தலைவலி, சைனஸ் தொந்தரவு நீங்கும். ஆரோக்கியமான தூக்கம் கிடைக்கும்.
சனி நீராடு என்பது பெரியவர்கள் கூறும் முது மொழி. புதன்கிழமை, சனிக்கிழமைகளில் ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பது பாரம்பரியம். உடலுக்கு ஆரோக்கியம். பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் சூட்டை தணிக்கும். நல்ல எண்ணெய் என்று அழைக்கப்படும் எள் எண்ணையை உடல் முழுக்க தேய்த்து , வெந்நீரில் குளிப்பது, இதனால் அறிவியல் ரீதியாக உடலில் உள்ள எண்ணை பசை மற்றும் நமது தோல் பகுதிகள் புத்துணர்ச்சி அடையும் என்கிறார்கள்.
எள் எண்ணெய் எனப்படும் நல்லெண்ணெயில் லட்சுமி வாசம் செய்கிறார் என்பது ஐதீகம். வெந்நீரில் கங்கை வாசம் செய்கிறார் எனவேதான் தீபாவாளி நாளில் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதை பாரம்பரியமாக கடைபிடிக்கின்றனர். இன்றைய பரபரப்பான காலத்தில் இளைய தலைமுறையினர் எண்ணெய் குளியலை மறந்தே விட்டனர். வீக் என்ட் கலாச்சாரத்தில் உள்ளவர்கள் தீபாவளி நாளிலாவது தியேட்டர்களில் போய் அமர்ந்து கொள்ளாமல் எண்ணெய் தேய்த்து குளித்து இறைவன் அருளை பெறலாம்.
மஹா காலபைரவருக்கு தசபைரவர் யாகம் - தேய்பிறை அஷ்டமியில் தரிசனம் பண்ணுங்க
கிருஷ்ணன் கொடுத்த வாக்கு
ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முதல்நாள் நரகாசுரனை கிருஷ்ணர் தனது மனைவி பாமாவின் துணையுடன் வதம் செய்தார் என்கிறது புராணம். இந்த நாளில் தைல ஸ்நானம் செய்து புது வஸ்திரம் அணிந்து உற்சாகமாக கொண்டாடுவோம் என கிருஷ்ணர் நரகாசுரனுக்கு வாக்களித்தார். எனவேதான் பாரம்பரியமாக எண்ணெய் குளியல் நடக்கிறது.
உடல் சூடு குறையும்
சனி நீராடு என்பது பெரியவர்கள் கூறும் முது மொழி. புதன்கிழமை, சனிக்கிழமைகளில் ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பது பாரம்பரியம். உடலுக்கு ஆரோக்கியம். பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் சூட்டை தணிக்கும். சூரிய உதயத்திற்கு பின்பே எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
சூரிய உதயத்திற்கு முன்
தீபாவளிக்கு இந்த சாஸ்திரம் ஒத்து வராது. சூரிய உதயத்திற்கு முன்பே அதிகாலையில் நல்லெண்ணெய் தேய்த்து சுடுநீரில் குளிக்க வேண்டும்.
தீபாவளி நாளில் தலையில், உடம்பில் தேய்க்கும் நல்லெண்ணெயை காய்ச்சுவதே ஒரு கலை அதற்கு தேவையான பொருட்களை முதல்நாளே சேகரித்து வைத்து விடுவார்கள். நல்லெண்ணெய் காய்ச்சுவதற்காக ஒரு வாணலியை தயார் செய்து வைத்து விடுவார்கள். அதிகாலையிலேயே அலாரம் வைத்து எழுந்து வானலியில் நல்லெண்ணெய் ஊற்றி கொஞ்சம் மிளகு, சீரகம், வெள்ளைப்பூண்டு தோலுடன் தட்டிப்போட்டு கூடவே சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து புகையாமல் காய்ச்சி ஆற வைப்பார்கள்.
எண்ணெய் மசாஜ்
வெது வெதுப்பான நல்லெண்ணெயை உச்சந்தலையில் முதலில் வைக்க வேண்டும். உடல் முழுவதும் தேய்த்து விட்டு உள்ளாங்கால்களில் கடைசியாக தேய்க்க வேண்டும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வரிசையாக அமர்ந்து ஒரு கின்னத்தில் எண்ணெய் ஊற்றி உடம்பில் தேய்த்து மசாஜ் செய்து ஊறவைப்பதை பார்ப்பது தனி அழகுதான்.
வெந்நீரில் கங்கை
வெந்நீரை காய்ச்சி அதில் சிறிதளவு சந்தனம், மஞ்சள் போட்டு குளிப்பது பாரம்பரியம். வெந்நீரில் சந்தனம், மஞ்சள் தூள் போடுவதால் அந்த நீரில் கங்கை எழுந்தருளுவதாக ஐதீகம். இதைத்தான் கங்கா ஸ்நானம் என்கின்றனர். எண்ணெய் தேய்த்து அரைமணிநேரம் ஊறிய பின்னர் வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். குளிப்பதற்கு கலப்படம் எதுவும் இல்லாத அரப்பு, சீயக்காய்தான் பயன்படுத்த வேண்டும்.
எண்ணெய் சனி
அனைத்து எண்ணெய்களுக்கும் சனி பகாவான் தான் காரகர் என்றாலும் நல்லெண்ணைதான் சனிக்கு உகந்த எண்ணையாக கருதப்படுகிறது. உடல் கட்டு மற்றும் எலும்பிற்கு காரகன் சனி பகவான் ஆவார். எனவே உடல் கட்டுகோப்பாக இருக்க நல்லெண்ணை குளியல் சிறந்தது என ஆயுர்வேதம் மற்றும் மருத்துவ ஜோதிடம் கூறுகிறது.
நல்லெண்ணெய் மசாஜ்
அது ஏன் வாரத்தில் ஏழு நாட்கள் இருக்க ஆண்களுக்கு புதன் மற்றும் சனிக்கிழமையும் பெண்களுக்கு செவ்வாய் வெள்ளிக்கிழமைகளும் பரிந்துரைக்கபடுகிறது தெரியுமா? சனி பகவானும் புதபகவானும் வாத கிரகம் ஆவார். வெள்ளிக்கிழமைக்கு அதிபதியான சுக்கிரன் கப மற்றும் வாத கிரகமாவர். எலும்பு மற்றும் வாத நோய்களுக்கு நல்லெண்ணை மசாஜ் மற்றும் குளியல் சிறந்தது என மருத்துவ ஜோதிடம் சொல்கிறது.
மன அழுத்தம் போக்கும்
இன்றைக்கு பித்தமும் உடல் சூடும் அதிகரித்து இருக்கிறது. நல்லெண்ணெய் குளியல் பித்தம், உடல் சூட்டை தணிக்கிறது. தோல் வறட்சி நீங்கும். ரத்த ஒட்டம் சீராக இருக்கும். எண்ணெய் குளியல் மன அழுத்தத்தை நீக்கும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. எனவேதான் வாரம் இருமுறை தவறாமல் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்கின்றனர் முன்னோர்கள். எண்ணெயில் பூண்டு, சீரகம், சிவப்பு மிளகாய் சேர்த்து பதமான சூட்டில் இதமாக குளிக்க வேண்டும்.
சனி தோஷம் விலகும்
சனீஸ்வர பகவானுக்கு புதனும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள் என்ற அடிப்படையிலும் சனி புதன் கிழமைகளில் ஆண்களும் வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் எண்ணை தேய்த்து குளிப்பது சிறந்த பயனளிக்கும். நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் இளநரை வராது. சளி, தலைவலி, சைனஸ் தொந்தரவு நீங்கும். ஆரோக்கியமான தூக்கம் கிடைக்கும். சூரியன் மற்றும் செவ்வாயால் ஏற்படும் உடல் உஷ்ணம் நீங்கும். சனியினால் ஏற்படும் வாத மற்றும் எலும்பு நோய்கள் நீங்கும். புதனால் ஏற்படும் சரும நோய்கள் மற்றும் நரம்பு நோய்கள் நீங்கும். சுக்கிரனின் காரகமான முடி கொட்டுவது நின்று நன்கு வளரும். சனி தோஷம் விலகும்.
லட்சுமி கடாட்சம் உண்டு
இன்று அகம்பாவத்தினால் எண்ணெய் குளியல் செய்யாதவர்களுக்கு நரகம் கிடைக்கும் என சாஸ்திரம் கூறுகிறது. வீட்டில் பூஜைகள் முடிந்து புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடித்து பின்னர் பலகாரம் சாப்பிட வேண்டும். மாலையில் லட்சுமி பூஜை செய்ய ஆண்டு முழுவதும் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.