திருப்பதியில் தீபாவளி ஆஸ்தானம்: ஏழுமலையான் கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பு
தீபாவளியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு பூஜை, அர்ச்சனை செய்து, பஞ்சாங்கம் வாசிக்கப்படும்.
திருப்பதி : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வெங்கடாசலபதி சன்னதிக்கு முன்பு உள்ள தங்க வாசலுக்கு அருகே கண்டா மண்டபத்தில் ஆஸ்தான பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி நடைபெறுவதன் காரணமாக வழக்கமாக நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் ஆகியவற்றை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
சைவ மற்றும் வைணவ பக்தர்களால் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்ததாக பெரிதும் போற்றி வணங்கப்படும் ஆலயம் திருப்பதி ஏழுமலையான் கோவில். இங்கு ஆண்டுதோறும் உகாதி வருடப்பிறப்பு தினத்தன்றும், தீபாவளி தினத்தன்றும் காலையில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்நிகழ்ச்சியை காண்பதற்கு அதிக அளவில் பக்தர்கள் வருவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்றின் தாக்கத்தால் உகாதி தினத்தன்று பக்தர்கள் யாரும் இல்லாமல் கோவில் ஊழியர்கள் இருக்க அவர்கள் முன்னிலையில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருமலையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் வரும் நரக சதுர்த்தசி அன்று தீபாவளி ஆஸ்தானத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. நவம்பர் 14ஆம் தேதியன்று தீபாவளிப்பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான கோவிலிலும் வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
14ஆம் தேதி சனிக்கிழமை காலை 7 மணியில் இருந்து காலை 9 மணி வரை, ஏழுமலையான் சந்நிதி முன்புறம் உள்ள தங்க வாசலுக்கு அருகிலுள்ள கண்டா மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட சர்வ பூபால வாகனத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்பசாமி எழுந்தருளுவார். அதைத் தொடர்ந்து, சிறப்பு பூஜை, அபிஷேகம், அர்ச்சனை செய்யப்பட்டு, பின்னர் ஆஸ்தான பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் அனைத்து தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு, வழக்கமாக நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் போன்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
தீபாவளி நாளன்று மாலை 5 மணியளவில் சகஸ்ர தீப அலங்கார சேவைக்கு பின்பு, ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமிகள் நான்கு மாட வீதிகளிலும் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.