விருச்சிகத்திற்கு இடப்பெயர்ச்சியான குரு - பக்தர்கள் பரிகாரம்
குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு குரு பரிகார தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சென்னை: குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு நேற்று இரவு 10.05 மணிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். குருப்பெயர்ச்சியையொட்டி குரு பகவான் தலங்களில் பரிகார யாக பூஜைகள் நடைபெற்றன.
மனித வாழ்க்கையின் ஏற்றம் - இறக்கம் எல்லாமே பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அமைகின்றன. பூர்வ புண்ணியத்திற்கான பலன்களை அளிப்போர் நவகிரகங்கள் எனப் போற்றப் பெறும் நவநாயகர்களே ஆவர். இந்த ஒன்பது கிரகங்களில் ஐந்தாவதாக, நடு நாயகராகத் திகழ்பவர் குரு பகவான். தேவர்களின் குருவாகிய குருபகவான் பூரணமான சுபகிரகம் ஆவார். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. அதனால் தான் 'குரு பார்க்க கோடி நன்மை’, குரு பார்வை தோஷ நிவர்த்தி’ என்றெல்லாம் குருபகவானின் அருள்திறம் போற்றப் பெறுகின்றது.
குருபகவான் ராசி மண்டலத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் காலம் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். அதாவது, ஒரு ராசியைக் கடக்க ஓர் ஆண்டு ஆகிறது. கடந்த ஓராண்டு காலம் துலாம் ராசியில் சஞ்சரித்த குருபகவான் வாக்கியப்பஞ்சாங்கப்படி விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனையொட்டி குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
சிறப்பு அபிஷேகம்
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் குரு பீடத்தில் குருபகவான் பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்யும் வகையில் அனுக்கிரக தக்ஷிணாமூர்த்தியாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும். மேற்கண்ட அனுக்கிரக குருபகவானுக்கு குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று பரிகாரம் செய்து வழிபட்டனர்.
ஆலங்குடி குருபகவான்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. நவக்கிரக தலங்களில் குருபகவானுக்கு உரிய பரிகார தலமாக போற்றப்படும் இக்கோவிலில் நேற்று இரவு 10.05 மணிக்கு குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்த நேரத்தில், தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த தட்சிணாமூர்த்திக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. குருப்பெயர்ச்சியை தொடர்ந்து 2வது கட்ட லட்சார்ச்சனை விழா 8ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
குருபகவான் தரிசனம்
திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலத்தில் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியாக தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படும் குருபகவான் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
பக்தர்கள் வழிபாடு
குருப்பெயர்ச்சியான நேரத்தில் மூலவர், உற்சவர் மற்றும் கோபுரம் ஆகியவற்றிக்கு ஒரே நேரத்தில் சிறப்பு மகா தீபாராதனைகள் நடந்தது. குருப்பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்கள் நேற்று நீண்டவரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் திட்டை, சென்னை பாடி திருவலிதாயம் உள்ளிட்ட கோயில்களிலும் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்றது.