தைப்பூசம்: தமிழ் கடவுள் முருகன் ஆலயங்களில் கோலாகலம் - ஆடி வந்த காவடிகள்
தை பூசத்தை முன்னிட்டு தமிழ்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சென்னை: தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் தைப்பூசம் மிக முக்கியமான விழாவாகும். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தைப்பூசம் இன்று கோலகலமாக கொண்டாடப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்தும் அலகு குத்தியும் தைப்பூச திருவிழாவை கொண்டாடுகின்றனர்.
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை என முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
முருகனுக்கு வேல் கொடுத்த தினம்
சிவன், சூரியனின் அம்சம். அம்பிகை, சந்திரனின் அம்சம் ஆவார்கள். இவர்கள் இருவரும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் போது ஆற்றல் உச்சம் பெறும். அதுவே தைப்பூசமாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத் தினத்தன்று தான் அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு அம்பிகை வேல் வழங்கினார். எனவே தான் முருகனின் அருளைப்பெற விரும்புபவர்கள் தைப்பூச தினத்தன்று விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள்.
நோய்கள் விலகும்
தைப்பூசத்தன்று முருகனை நினைத்து விரதம் இருந்தால், குடும்பத்தில் செல்வம் பெருகும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமையும், பாசமும் அதிகரிக்கும். நோய்கள் ஏதேனும் இருந்தால் விலகி விடும்.
ஒற்றுமை தரும் முருகன் வழிபாடு
முருகன் தமிழ்க் கடவுள். தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். இதனால் தான் தைப்பூச தினத்தன்று முருகப்பெருமானை வழிபாடு செய்வது முக்கிய இடம் பிடித்துள்ளது. மேலும் இந்த நன்னாளில் சுப காரியங்கள், செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.
காவடி எடுத்த பக்தர்கள்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு வந்துள்ளனர். நேற்றைய தினம் முருகப்பெருமான் திருக்கல்யாணத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தைப்பூசத்தையொட்டி இன்று காலையிலேயே தோரோட்டம் நடைபெறுவதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பாதையாத்திரை பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச விழா நடைபெறுவதையொட்டி பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் குவிந்துள்ளனர்.சந்திரகிரகணத்தை முன்னிட்டு மாலையில் சுவாமிக்கு பட்டுசாத்தி நடை அடைக்கப்படுகிறது. இரவு 8.50 மணிக்கு சந்திர கிரகணம் முடிந்த பிறகு இரவு 9.30 மணிக்கு கோயில் நடைதிறக்கப்படுகிறது. ராக்கால அபிஷேகம், தீபாராதனை, ஏகாந்தம், பள்ளியறை தீபாராதனையை தொடர்ந்து கோயில் நடை சாத்தப்படுகிறது.
காவடி எடுத்து வரும் பக்தர்கள்
திருப்பரங்குன்றம், சுவாமிமலை, பழமுதிர்சோலை, திருத்தணி, மருதமலை, சென்னையில் வடபழனி, கந்தக்கோட்டம், திருப்போரூர் கந்தசாமி ஆலயங்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். சிங்கப்பூர், மலேசியா, இலங்கை என தமிழர்கள் வசிக்கும் நாடுகளிலும் உலகம் முழுவதும் தமிழ்கடவுள் முருகன் ஆலயங்களில் தைப்பூசம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.