நெல்லை, அம்பை, கல்லிடைக்குறிச்சி பெருமாள் ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசி - சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள பெருமாள் ஆலயங்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
திருநெல்வேலி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 108 திவ்ய தேசங்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள பெருமாள் ஆலயங்களில் பக்தர்கள் வழிபட்டனர்.
அம்பாசமுத்திரம் சத்யபாமா ருக்மணி சமேத வேணுகோபால் கிருஷ்ணசுவாமி கோயில், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீதேவி, பூதேவி புருஷோத்தம்மன் கோயில், கல்லிடைக்குறிச்சி ஆதிவராக பெருமாள் கோயில், பிரம்மதேசம் சத்யபாமா ருக்மணி சமேத வேணுகோபால் கிருஷ்ணசாமி கோயில்களில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அபூர்வ பெருமாள்
லட்சுமி நாராயண பெருமாள் கோவிவ் இது ஏறத்தாழ 1000 வருடம் பழமை வாய்ந்தது. இது புதன், சுக்ரனுக்குரிய பரிகார தலமாக உள்ளது. இத்திருக்கோவில் முதலில் சிவன் கோவிலாக இருந்ததாகவும், எனவேதான் வில்வ மரம் தல விருட்சமாக இருக்கின்றது என்கின்றனர். இங்குள்ள ஆஞ்சநேயர் அஞ்சலி ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகின்றார். இவரது தலை மீது சிவலிங்கத்தை சுமந்தபடி காட்சி தருகின்றார். இது வேறு எங்கும் காண முடியாத அபூர்வமான காட்சியாகும். இது மிகவும் சிறப்பானதும், சக்தி வாய்ந்ததாகவும் கருதப்படுகின்றது.
புதன், சுக்கிரன் பரிகார தலம்
இது புதன் சுக்ர பரிகார தலம் என்பதால் இங்கு வந்து வழிபட்டால், கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருப்பவர்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியுடன் குடும்ப வாழ்க்கை நடைபெறும் என்பது திண்ணம் என்கின்றனர். வேறு எங்கும் இல்லாதபடி, மூலஸ்தானத்தில் பெருமாள் மடியிலே தன் மனைவியான மஹாலக்ஷ்மியை வைத்திருப்பது இருவரது அருளும் நல்ல குடும்ப அமைப்பைக் கொடுக்கும்.
புதன் தோஷம் உள்ளவர்கள் பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழி படவேண்டும். சுக்ர தோஷம் உள்ளோர் மஹாலஷ்மிக்கு குங்கும அபிஷேகம் செய்து வணங்கி வேண்டவும்
நதிகள் சூழ்ந்த கோவில்
தமிழகத்திலுள்ள பழமையான வைணவ கோயில்களில் மன்னார் கோயிலும் ஒன்று. ஆதியில் இந்தத் தலத்தை வேதபுரி என்றும் இடைக் காலத்தில் ராஜேந்திர விண்ணகரம் என்றும் அழைத்தார்கள். தற்போது மன்னார் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. திருவரங்கத்தை காவிரி சூழ்ந்திருப்பதைப் போல வேதபுரியின் தென்புரத்தில் ஜீவநதியாம் தாமிரபரணியும் வடபுறத்தில் கடனா நதியும் சூழ அழகிய தலமாக மாறியிருக்கிறது. கருவறையில் வேதநாராயணப் பெருமாள் சேவை சாதிக்கிறார்.
நோய்கள் தீர்க்கும் பெருமாள்
இந்தக் கோயிலை இரட்டை மாடி கோயில் என்றும் கூறுவர். இந்தக் கோயிலில் யானை முடுக்கு, பூனை முடுக்கு என்று இரண்டு பகுதிகள் உள்ளன. இதன் வழியாக பக்தர்கள் நுழைந்து சென்றால் பல வித நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து வடக்கே 3 கி மீ. தொலைவில் உள்ளது. இங்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.