தீபாவளி நாளில் லட்சுமி குபேர பூஜை - வாழையாடி வாழையாக செல்வம் தங்க வாழைப்பூ அவசியம்
தந்தேரஸ், லட்சுமி குபேர பூஜை செய்ய செய்ய நல்ல நேரம் கணிக்கப்பட்டுள்ளது. குபேர லட்சுமி பூஜை செய்ய தேவையானவை என்னென்ன என்றும் பார்க்கலாம்.
சென்னை: தீபாவளி பண்டிகை ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் ஒரே நாளில் முடிந்து விடுகிறது. தன திரயோதசி, தீபாவளி, அமாவாசை நாட்களில் லட்சுமி குபேர பூஜை செய்தால் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.
விளம்பி வருஷம் ஐப்பசி 21ஆம் நாள் புதன்கிழமை 07.11.2018 சர்வ அமாவாஸ்யை திதி சுவாதி நக்ஷத்ரம் சித்தியோகம் கூடிய நன் நாளில் மாலை 7.00 முதல் 8.00 மணி வரை அமுத கெளரியில் சுக்ர ஹோராவில் ஸ்ரீமஹாலக்ஷ்மி குபேர பூஜை செய்வது சிறப்பு என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
தீபாவளித் திருநாளின் முதல் நாள் திங்கட்கிழமை தன்வந்திரி திரயோதசியாக கொண்டாடப்படுகிறது. 'தந்தேரஸ்' என வட இந்தியாவில் கொண்டாடுகின்றனர். அன்று இரவு முழுவதும் விளக்கு ஏற்றி வைப்பது எமபயம் தீர்ப்பதாக ஐதீகம்.எனவே அந்த விளக்கு 'எமதீபம்' என்று அழைக்கப்படுகிறது.
அன்றைய தினம் யமராஜன் தன் சகோதரி யமுனையின் வீட்டிற்குச் சென்று ஆசிகள் வழங்கி, பல பரிசுகள் கொடுக்க யமுனையும் மனம் மகிழ்ந்து, தனது சகோதரனுக்குப் பரிசுகளும் இனிப்புகளும் கொடுக்கிறாள். இத் திருநாளில் வடநாட்டுப் பெண்கள், தங்கள் சகோதரர்களைச் சந்தித்து, அவர்களின் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துகிறார்கள். சகோதர பாசத்தை வளர்க்கும் இந்த விழாவை, 'எமனுக்குப் பிடித்த விழா' என்று புராணங்களும் போற்றுகின்றன. திங்கட்கிழமை பிரதோச நேரத்தில் தீபம் ஏற்றி வழிபட யம பயம் போகும்.
[தீபாவளிக்கு நல்லெண்ணெய் குளியல் - உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்க்க நல்ல நேரம்]
தங்கம் வாங்க தன திரயோதசி
தென்னிந்தியர்களுக்கு அட்சய திருதியை போல வட இந்தியர்களுக்கு தன திரயோதசி. அன்று தங்கம் வாங்கினால் செல்வம் கொழிக்கும் என்பது அவர்களது நம்பிக்கை. அப்படி வாங்கும் தங்கத்தை தனலட்சுமியின் முன் வைத்து பூஜை செய்வார்கள். வசதி குறைவானவர்கள் ஒரு வெள்ளி அல்லது, எவர்சில்வர் கரண்டி, சொம்பு, புதிய பாத்திரங்கள், பித்தளை, புடவை வாங்கலாம்.
லட்சுமி குபேர பூஜை செய்வது எப்படி?
ஒரு கலசம் வெள்ளி அல்லது செம்பு சொம்பு அல்லது குடம் எடுத்து அதன் உள்ளே பன்னீர் , ஏலத்தூள், லவங்கம் பட்டை, சந்தனம் அரகஜா, அகில் புனுகு ஜவ்வாது என எவ்வளவு வாசனை திரவியங்கள் என்ன முடியுமோ அத்தனையும் சேர்த்து தண்ணீர் நிரப்பி அதற்கு மேல் தேங்காய் மஞ்சள் பூசி எட்டு மாவிலைகளோடு வைத்து இந்த கலசத்தை ஒரு முக்காலி மேல் அரிசி அல்லது நெல் பரப்பி வைக்கவும்.
கலசத்துக்கு முகம் வைத்து அலங்கரித்து மல்லிகை மாலை தாமரை மலர்களால் அலங்கரிக்கலாம்.பாதுகாப்பான இடமெனில் தங்க நகைகளும் போடலாம்.
கல் உப்பு, வலம்புரி சங்கு
குபேர சக்கரம் அந்த எண்களோடு பச்சரிசி மாவு கொண்டு கோலம் போல் போடவேண்டும். ஒரு கட்டத்தில் உள்ள எண்கள் அளவு காசுகள் வைக்கலாம். குபேரனுக்கு பிடித்த எண் 5. 5 ரூபாய் நாணயங்கள் மொத்தம் 216 காசு தேவைப்படும். சக்கரத்தை உதிரி பூக்களால் அலங்கரிக்கவும். லட்சுமி குபேரன் படம் அல்லது சிலை வைக்கலாம். சந்தனத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வலம்புரி சங்கு கல் உப்பு ஜாடி என லட்சுமி அம்சங்களை வைத்து வழிபடுவது அவசியம்.
வாழைப்பூ அவசியம்
லட்சுமிக்கு 5 வகை கனிகள் வைக்க வேண்டும். செவ்வாழை , பெருநெல்லி, மாதுளை அவசியம் இருக்க வேண்டும். பூஜையில் மல்லி, தாமரை இருப்பதோடு வாழைப்பூ அவசியம் வைக்க வேண்டும். காரணம் இந்த செல்வம் வாழையடி வாழையாக தங்க வேண்டும் என்பதற்காகவே, வாழைப்பூ அவசியம்.
ரவா கேசரி, பாதாம் பால்
குபேரனுக்கு உலர்திராட்சை, முந்திரி, பாதாம், பிஸ்தா, ரவா கேசரி, பாதாம் பால் என வசதிக்கு ஏற்ப நைவேத்தியம் செய்ய வேண்டும்.
மகாலட்சுமிக்கு 108 போற்றி சொல்லி வழிபட்டு குபேர மந்திரம், குபேர முத்திரை வைத்து துதிக்க வேண்டும். நாணயங்களை குபேர லோகத்தில் உள்ள குபேரனுக்கு கேட்கும் வகையில் தட்டில் ஒவ்வொன்றாக எடுத்து போட்டு வழிபடலாம். தூப தீபம் காட்டி பூஜை நிறைவு செய்து பால் , கேசரி போன்ற பிரசாதங்களை விநியோகம் செய்யலாம்.
பணப்பெட்டியில் தீர்த்தம்
அடுத்த நாள் காலை மறு பூசை செய்து மகாலட்சுமி மந்திரம் 108 சொல்லி பூஜை செய்து சிறிது நேரம் விட்டு கலசம் எடுத்து உள்ளே உள்ள தீர்த்தத்தை வீடு முழுக்க தெளித்து சிறு பாட்டில்களில் கசிவு இல்லாமல் அடைத்து பணப்பெட்டியில் பத்திரப்படுத்தவும்.
பூஜை செய்ய நல்ல நேரங்கள்
செல்வத்திற்கு அதிபதி மகாலட்சுமி, செல்வத்தை பாதுகாக்க குபேரனை நிதன திரயோதசி நாளில் குபேர பூஜை செய்ய நல்ல நேரம் திங்கட்கிழமை மாலை 6.05 மணி முதல் 8 மணி வரை ஏற்றது. தீபாவளி நாளில் காலையில் 6.45 மணி முதல் 9 மணி வரை பூஜை செய்யலாம். அமாவாசை நாளில் புதன்கிழமை 07.11.2018 மாலை 7.00 முதல் 8.00 மணி வரை அமுத கெளரியில் சுக்ர ஹோராவில் ஸ்ரீமஹாலக்ஷ்மி குபேர பூஜை செய்வது சிறப்பு.