இன்று உலக யோகா தினம் - தியானம் செய்தால் என்ன பலன் தெரியுமா?
மனக்கட்டுப்பாட்டையும், மன ஒருமைப்பாட்டையும், மன அமைதியையும் பெற தியானமும், ஜபமும் பெற உதவுகின்றன. என்று அன்னை சாரதா தேவி கூறியுள்ளார். தியானம் எப்படி செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Recommended Video
சென்னை: ஜூன் 21ஆம் தேதி உலக யோகா தினமாக ஐநா சபையினால் அங்கீகரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் மக்கள் ஒன்றாக இணைந்து யோகா செய்கின்றனர். தியானத்திலும் அமர்ந்து மனதை அமைதி படுத்துகின்றனர். தியானத்தில் பலன் என்ன என்று அன்னை ஸ்ரீசாரதா தேவி கூறியுள்ளார் படியுங்கள்.
நமது பாரம்பரியத்துடன் கலந்திருக்கும் தியானம் தான் அந்த அமைதியை மீட்டுத் தரும் அருமருந்தாக உள்ளது. தினமும் 30 நிமிடங்கள் தியான நிலையில் மனதை வைத்திருந்தால் கிடைக்கும் பலன்கள் எண்ணிலடங்காதவை. இத்தகைய தியானத்தை முறையாகப் பயிலவும், பின்பற்றவும் செய்தால் வாழ்க்கை ஒரு அமைதியான பயணமாகவே இருக்கும்.
தியான வழிமுறையில், உடல்-மனம் ஆகியவற்றிற்கு ஒருங்கிணைந்த பயிற்சியளிப்பதன் மூலம் மன ரீதியான நோய்கள் வராமல் மூளையைப் பாதுகாக்க முடியும். மனம் நிறைந்த தியானப் பயிற்சி நமது உணர்ச்சிகள் மற்றும் மனநிலையை மேம்படுத்த உதவுவதால், நம்மால் இரவில் நிம்மதியாகத் தூங்க முடிகிறது.
தியானம் செய்ய தொடங்கும் முறை
தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். காலை 5 மணி, மாலை 7 மணி. முடிந்தவரை இதே நேரத்தில் தினமும் தியானத்தில் அமர வேண்டும். உங்கள் இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அது உங்கள் குலதெய்வமாகவோ, உங்களுக்கு பிடித்த வேறு தெய்வமாகவோ இருக்கலாம். வீட்டின் ஒரு இடத்தை தியானத்திற்காக தேர்ந்தெடுங்கள். அது பூஜை அறையாகவோ, வேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம். பூஜை அறை இல்லையென்றால், இஷ்ட தெய்வத்தை வைப்பதற்கு ஒரு சிறு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.
மனம் மூலம் பிரார்த்தனை
தியானம் அமரும் இடத்தில் ஆசனத்தை விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து, மற்றும் முதுகெழும்பு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடிக் கொள்ளவும். சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், மேகங்கள் எதுவும் இல்லாத பரந்த எல்லையற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். இது உங்கள் உடலையும், உள்ளத்தையும் தளர்த்தி அமைதிப்படுத்தும்.
இப்போது உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லவும். பன்னிரண்டு இதழ்கள் கொண்ட சிவப்புத் தாமரையை அங்கு கற்பனை செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் அங்கு அமர்ந்திருப்பதாக எண்ணவும். இப்போது இஷ்ட தெய்வத்திடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்யவும். நல்ல உடல், அமைதியான மனம், நம்பிக்கை, பக்தி, விவேகம், பற்றின்மை ஆகியவற்றுக்காக பிரார்த்திக்கவும்.
இஷ்ட தெய்வத்திடம் பிரார்த்தனை
ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் இஷ்ட தெய்வத்தை தியானிக்கவும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து இஷ்ட தெய்வத்திடம் நிறுத்தவும். பின்பு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜபம் செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் ராமராக இருந்தால் 'ராம,ராம' என்று தொடர்ந்து ஜபம் செய்யவும். குறைந்த பட்சம் 108 முறையாவது ஜபம் செய்ய வேண்டும். அதிகமாக செய்ய விரும்பினால் அது 108 ன் மடங்காக இருக்கட்டும். இப்போது மானசீக பூஜை செய்யலாம். சந்தனம், பூ, ஊதுபத்தி, தீபம், நைவேத்தியம் ஆகிய ஐந்து பூஜை பொருட்களால் செய்யப்படுகின்ற பூஜையாக அது இருக்கட்டும். முடிவாக தியானத்தின் பலன்களை இஷ்ட தெய்வத்தின் திருவடிகளில் சமர்ப்பிக்கவும்.
தியானத்தின் பலன்
மனக்கட்டுப்பாட்டையும், மன ஒருமைப்பாட்டையும், மன அமைதியையும் பெற தியானமும், ஜபமும் பெற உதவுகின்றன. பொதுவாக இவை இரண்டும் சேர்ந்தே செல்கின்றன. இருந்தாலும் தியானம் ஆழ்ந்து செல்லும் போது ஜபம் தானாகவே நின்று விடும். மன ஒருமைப்பாடு இல்லாமல் இருந்தால் ஜபம் அதிக எண்ணிக்கையில் செய்யப்படும் போது அது அமைதியையும், மன ஒருமைப்பாட்டையும் பெற உதவும் என்று அன்னை ஸ்ரீசாரதா தேவி கூறியுள்ளார்.