நவபாஷாணத்தால் ஆன பழனி தண்டாயுதபாணியை அபகரிக்க திட்டமிட்டவர்களின் கதி என்னவானது தெரியுமா?
பழனியில் நவபாஷாணத்தால் செய்யப்பட்ட மூலவர் தண்டாயுதபாணி சிலையை பலரும் அபகரிக்க திட்டமிட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
சென்னை: பழனியில் உள்ள மூலவர் தண்டாயுதபாணி சித்தர் போகரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டவர். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சித்தர் உருவாக்கிய இந்த சிலையை தமிழகத்தை ஆட்டிப்படைத்த முக்கிய குடும்பத்தினர் அபகரிக்கத் திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போகர் சித்தர்தான் தான் பழநி மலையில் முருகக்கடவுளின் நவபாஷாண சிலையை புலிப்பாணிச் சித்தரின் உதவியுடன் வடிவமைத்தவர். அங்கே இவருக்கு தனிச் சந்நிதியே உண்டு. பழநி மலையை அரூபமாக இருந்து இன்றைக்கும் காத்து வருபவர். நவசித்தர்களை நேரில் பார்க்கும் பாக்கியம் பெற்றவர்.
பழனிமலை முருகனின் கட்டளைக்கு இணங்க, தண்டயுதபாணி சிலையை செய்வதற்கு உதவி புரிந்தவர்கள். புலிப்பாணி உள்ளிட்ட 81 சித்தர்கள். சிலை செய்வதற்குத் தேவையான நவபாஷாண மூலிகைகளை, தமது புலி வாகனத்தில் ஏறிச்சென்று காடுகளில் தேடித் திரிந்து சேகரித்து வந்தவர் என்றும் கூறுகிறார்கள். புலிபாணி சித்தருக்கு பழனி மலை அடிவாரத்தில் சமாதி எழுப்பப்பட்டுள்ளது.
நவபாஷாண தண்டாயுதபாணி
முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான பழனியில் மூலவர் ஆண்டி கோலத்தில் கையில் தண்டம் ஏந்தி தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். 9 ஆண்டுகள் தவவலிமையால் இந்த சிலையை வடிவமைத்தார் போகர் என்கின்றனர். 6 கால அபிஷேகம் செய்யப்படுகிறது. நல்லெண்ணை, பஞ்சாமிர்தம்,விபூதி, பன்னீர் கொண்டு மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது.
நோய் தீர்க்கும் மருந்து
தண்டாயுதபாணியின் உடலில் அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்களை பிரசாதமாக சாப்பிட்டால் அது நோய் தீர்க்கும் அருமருந்தாகும். முருகனின் உடலில் பூசப்பட்ட சந்தனத்தை நெற்றியில் பூசி வர தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. மக்களின் நன்மைக்காக சித்தரால் உருவாக்கப்பட்ட நவபாஷாண சிலையை சுயநலமிகள் சிலர் சுரண்டத் தொடங்கினர்.
நோய் தீர்த்த தண்டாயுதபாணி
சிலையின் உடலை சிறிது சுரண்டி அதில் கிடைத்தப் பொருட்களை சித்த வைத்தியர்களுக்குக் கொடுத்து மருந்து தயாரிக்க உதவினர். பழனியில் இருந்த சில சித்த வைத்தியசாலைகள் திடீர் எனப் பெரும் புகழ் பெற்றன. அந்த சிலையின் மீது ஊற்றப்படும் அபிஷேக நீர் அந்த சிலையின் மீதுள்ள நவபாஷாண பொருள் மீது ஏறி வருவதினால் ரசாயன மாற்றம் அடைந்து அது வியாதிகளை குணப்படுத்தும் தன்மைக் கொண்டதாக மாறி விடுகின்றது என ஆய்வு செய்த பலரும் கூறியுள்ளனர்.
பழனியில் பஞ்சலோக சிலை
கடந்த 2004 ஆம் ஆண்டு பழனியில் உள்ள மூலவர் சிலை சேதமடைந்திருப்பதாக கூறி அதற்கு அபிஷேகம் செய்வதற்கு பதிலாக அபிஷேக மூர்த்தி என்ற பெயரில் பஞ்சலோக சிலையை 221 கிலோ எடையில் செய்து அதனை மூலவரை மறைத்து வைத்தனர். ஒரு கர்ப்ப கிரகத்தில் ஒரு மூலவர் 2 உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மூலவர் சிலையை அபகரித்து கடத்தவே புதிய சிலை வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஜெயலலிதா வளர்ப்பு மகன்
பக்தர்களின் எதிர்ப்பை கண்டு அஞ்சாத அரசு கூட அடுத்தடுத்து விழுந்த அடிகளால் புதிய சிலையை உடனே அறையில் வைத்து பூட்டியது. இதற்குக் காரணமும் அந்த குடும்பம்தான் என்று குற்றம் சாட்டப்பட்டது. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் தனக்கு பிரச்சினைகள் ஏற்படும்போது, மனம் கவலையடையும் போதெல்லாம் பழனிக்கு வந்து தண்டாயுதபாணியை தரிசனம் செய்து விட்டு புலிப்பாணி சித்தரிடம் ஆசி பெறுவது வழக்கம். அவ்வப்போது சிறப்பு யாகம் மற்றும் பூஜைகளை செய்து வந்தார் சுதாகரன்.
பிப்ரவரி 11,2016
கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதியன்று பழனி மலைக்கு சென்று தண்டாயுதபாணியை தரிசித்தார் சசிகலா. அவரது வருகையால் பக்தர்கள் பல மணிநேரம் காக்க வைக்கப்பட்டனர். சரியாக ஓராண்டு கழித்து கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதியன்று சசிகலா முதல்வராக பதவியேற்க வேண்டும் சுதாகரன் ரகசிய பூஜை நடத்தினார். பூஜையின் போது, பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
சசிகலா குடும்பத்திற்கு சோதனை
பூஜைகள், யாகங்கள் செய்த நிலையிலும் பிப்ரவர் 15ஆம் தேதியன்று சசிகலாவும், சுதாகரனும் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்றனர். சசிகலா குடும்பத்தினர் அடுத்தடுத்து சோதனைகளை சந்தித்து வருகின்றனர். இதற்கான காரணத்தை சசிகலா குடும்பத்தினர் மட்டுமே அறிந்த ரகசியம்.
புதிய சிலைக்கு அனுமதி
200 கிலோ எடையில் புதிதாக ஐம்பொன் சிலையை பழனி கர்ப்பக்கிரகத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்தது யார்? ஆகம விதிமுறைகளுக்கு எதிராக ஸ்தபதி முத்தையாவின் சொந்த பட்டறையில் செய்ய அனுமதி வழங்கியது யார்? கற்சிலை வடிக்க மட்டுமே அனுமதி பெற்ற ஸ்தபதி முத்தையாவுக்கு, ஐம்பொன் சிலை வடிக்க அனுமதி அளித்தது யார் என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சோதனை மேல் சோதனை
எது எப்படியோ நவபாஷாண சிலையை அபகரிக்கத் திட்டமிட்டவர்களும், பஞ்சலோக சிலையை செய்ய ஆலோசனை கொடுத்தவர்களும், சிலையை வடிவமைத்த ஸ்தபதி முத்தையா, அறநிலையத்துறை அதிகாரிகள்,என பலரும் சோதனை மேல் சோதனையை சந்தித்து வருகின்றனர். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நினைத்தாலும் அவர்களுக்கு சிறை வாழ்க்கைதான் என்பது சித்தர் வாக்காகிவிட்டது.