தீவினைகளை அழிக்கும் வைகுண்ட ஏகாதசி விரதம் - என்ன நன்மைகள் தெரியுமா
மதுரை: வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல் நாளான தசமி தினத்தன்று இரவு பழங்களை மட்டுமே உண்ண வேண்டும். இதனால் மறுநாளான ஏகாதசி நாளன்று உடம்பில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும். விரதம் இருக்கும் போது எந்தவிதமான உடல் உபாதைகளும் இல்லாமல் மனநிறைவோடு இருக்கலாம். விரதத்தை முடித்த பின்பு எளிதில் ஜீரணமாகும் உணவுகளையே உண்ண வேண்டும்.
தாயைக் காட்டிலும் உயர்ந்த தெய்வமில்லை, காசியை மிஞ்சிய புண்ணிய தீர்த்தம் இல்லை. காயத்ரி மந்திரத்தை விட உயர்ந்த மந்திரம் இல்லை. அது போல் ஏகாதசி விரதத்தை விட சிறந்த விரதமும் இல்லை. அந்த அளவுக்கு மற்ற விரதங்களைக் காட்டிலும் ஏகாதசி விரதம் உயர்ந்ததாகும். அதிலும் மார்கழி மாதத்தில் சுக்லபக்ஷ திதியில் வரும் வைகுண்ட ஏகாதசி விரதம் தான் மிக உயர்ந்த விரதம்.
பக்ஷம் என்பது 15 நாட்களைக் கொண்ட ஒரு காலப்பகுதியாகும். ஒரு மாதத்தில் இரண்டு பக்ஷங்கள் வரும். அதில் 15 நாட்கள் சுக்லபக்ஷம் (வளர்பிறை), 15 நாட்கள் கிருஷ்ண பக்ஷம் (தேய்பிறை) வகுக்கப்பட்டுள்ளது. இதில் வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்களில் 11ஆவது நாளாக வருவது ஏகாதசி ஆகும். இதில் மார்கழி மாத வளர்பிறை திதியில் வரும் ஏகாதசியை நாம் வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடி விரதம் இருந்து வருகிறோம்.
வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்தால் கர்மேந்திரியங்கள் 5, ஞானேந்திரியங்கள் 5 மற்றும் மனம் என 11 இந்திரியங்களால் செய்யப்படும் அனைத்து தீவினைகளும் முழுவதும் களைந்து போகும் என்பது ஐதீகம்.
வைகுண்ட ஏகாதசி விரதம் பக்தியிலும், புண்ணியத்திலும் சிறந்த ஒன்றாக விளங்குகிறது. அதனால் தான், "மார்கழி மாத ஏகாதசி விரதம் இருந்து என்னை வழிபடும் அனைவருக்கும் யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கோள்வோம்" என்று பகவான் மஹாவிஷ்ணு அருளியிருக்கிறார். அதனால் தான் பகவத் கீதையிலும் கிருஷ்ணபரமாத்மா, மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன், என்று கூறியிருக்கிறார். இதன் காரணமாகவே, மார்கழி மாத ஏகாதசி விரதம் மகிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த வைகுண்ட ஏகாதசி விரதம் ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் அனைவருமே கடைபிடிக்க வேண்டிய உயர்ந்த விரதமாகும். ஏகாதசி விரதம் இருப்போர், முதல் நாளான தசமி நாளன்று பகல் வேளையில் மட்டும் உண்டுவிட்டு, இரவில் பழங்களை மட்டும் உண்ண வேண்டும். அப்பொழுது தான் விரதம் இருக்கும்பொழுது, உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் விரைவில் வெளியேறிவிடும்.
இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படித்தும், பகவான் திருநாமங்களை சொல்லிக்கொண்டும் இருக்க வேண்டும். மறுநாளான ஏகாதசி நாளன்று அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு, பூஜை செய்து, பகவான் மஹாவிஷ்ணுவின் மந்திரங்களை சொல்லி விரதம் இருந்து வரவேண்டும். பகல் வேளையிலும் தூங்காமல் விழித்திருந்து விரதமிருக்க வேண்டும்.
ஏகாதசி நாளன்று, முடிந்தவரை, முழுமையாக விரதமிருக்க வேண்டும். குளிர்ந்த நீரை மட்டும் குடித்து வரலாம். ஏழு முறை துளசி இலையை சாப்பிட்டு வரலாம். மார்கழி மாதம் குளிரான மாதம் என்பதால், உடம்புக்கு வெப்ப சக்தி கிடைக்க துளசியை சாப்பிட்டு வரலாம். விரதம் இருப்பதால், குடல் உறுப்புகள் காலியாகி ஜீரண மண்டல உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிற்றை சுத்தமாக்குகிறது. நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், நெய், பழங்கள், காய்கனிகள், வேர்க்கடலை, பால், தயிர் போன்றவற்றை முதலில் பகவானுக்கு படைத்துவிட்டு பிறகு உண்ணலாம்.
ஏகாதசிக்கு மறுநாளான துவாதசி தினத்தில், அதிகாலை வேளையில் உணவு அருந்துவதை பாரணை என்று சொல்வதுண்டு. துவாதசி அன்று அதிகாலையில், உப்பு, புளிப்பு சுவைகள் இல்லாத உணவான சுண்டைக்காய், நெல்லிக்கனி, அகத்திக்கீரை இவைகளை சேர்த்து பல்லில் படாமல் 'கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா' என மூன்று முறை பகவான் நாமத்தை சொல்லி, ஆல் இலையில் உணவு சாப்பிட்டு விட்டு விரதத்தை முடிக்க வேண்டும். உணவு உண்பதற்கு முன்பு முதலில் பெரியவர்களுக்கு வழங்க வேண்டும்.
ஏகாதசி விரதத்தை எப்படி முறைப்படி தொடங்குகிறோமோ அதே போல் விரதத்தை முறைப்படி தான் முடிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஏகாதசி விரதம் இருந்ததற்கான பலன் கிடைக்காமல் போய்விடும்.