வைகுண்ட ஏகாதசியில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பது ஏன் தெரியுமா
மார்கழி மாதத்தில் பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து, இராப்பத்து உற்சவமாக சிறப்பாக நடைபெறும்.
மதுரை: மார்கழி மாதத்தில் பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து, இராப்பத்து உற்சவமாக சிறப்பாக நடைபெறும். இராப்பத்தின் முதல் நாள் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. காலம் காலமாக மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி நாளில் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுவதற்கான காரணத்தை பார்க்கலாம்.
வைகுண்ட ஏகாதசி விரதம் பக்தியிலும், புண்ணியத்திலும் சிறந்த ஒன்றாக விளங்குகிறது. அதனால் தான், "மார்கழி மாத ஏகாதசி விரதம் இருந்து என்னை வழிபடும் அனைவருக்கும் யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கோள்வோம்" என்று பகவான் மஹாவிஷ்ணு அருளியிருக்கிறார். அதனால் தான் பகவத் கீதையிலும் கிருஷ்ணபரமாத்மா, மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன், என்று கூறியிருக்கிறார். இதன் காரணமாகவே, மார்கழி மாத ஏகாதசி விரதம் மகிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஏகாதசி நாளன்று அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு, பூஜை செய்து, பகவான் மஹாவிஷ்ணுவின் மந்திரங்களை சொல்லி விரதம் இருந்து வரவேண்டும். பகல் வேளையிலும் தூங்காமல் விழித்திருந்து விரதமிருக்க வேண்டும்.
ஏகாதசி நாளன்று, முடிந்தவரை, முழுமையாக விரதமிருக்க வேண்டும். குளிர்ந்த நீரை மட்டும் குடிக்கலாம். பசி உணர்வு ஏற்பட்டால் ஏழு முறை துளசி இலையையும் துளசி தீர்த்தத்தையும் சாப்பிட்டு வரலாம்.
மார்கழி மாதத்தில் பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து, இராப்பத்து உற்சவமாக சிறப்பாக நடைபெறும். இராப்பத்தின் முதல் நாள் பரமபத வாசல் சந்நிதி திறப்பு விழா நடைபெறுகிறது. இன்றைய தினம் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே குளித்து பெருமாள் கோவிலுக்கு சென்று சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளிய பெருமாளை தரிசனம் செய்திருக்கின்றனர். இப்படி மார்கழி மாதத்தில் சொர்க்கவாசல் வழியாக அனைத்து மக்களும் சென்று சாமி தரிசனம் செய்ய காரணமே நம்மாழ்வார்தானாம்.
கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டத்திற்கு சென்றோர் யாரும் இல்லாததால் வைகுண்டத்தின் வாசல் மூடப்பட்டு இருந்தது. நம்மாழ்வார் முக்தி அடைந்த அன்று, அது திறக்கப்பட்டது. இதனை அறிந்த நம்மாழ்வார், பெருமாளிடம் 'எனக்கு மட்டும் வைகுண்ட வாசலைத் திறந்தால் போதாது. என்னைத் தொடர்ந்து தங்கள் மீது பக்தி செலுத்தும் எல்லா பக்தர்களுக்காகவும் வைகுண்டவாசல் திறக்கப்பட வேண்டும்' என்று வேண்டினார்.
பெருமாள், நம்மாழ்வாரின் வேண்டுகோளை ஏற்று மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியில் சொர்க்க வாசல் திறக்க வழி செய்தார். அந்த நாள்தான் வைகுண்ட ஏகாதசியாக, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியாக அனுசரிக்கப்படுகிறது. பெருமாள் கோவில்களில் வடக்குபுறத்தில் பரமபத வாசல் இதற்காகவே வைத்திருக்கின்றனர். பிற நாட்களில் இந்த வாசல் மூடப்பட்டிருக்கும். வைகுண்ட ஏகாதசி நாளில் திறக்கப்படுகிறது.
மார்கழி மாதம் குளிரான மாதம் என்பதால், உடம்புக்கு வெப்ப சக்தி கிடைக்க துளசியை சாப்பிட்டு வரலாம். விரதம் இருப்பதால், குடல் உறுப்புகள் காலியாகி ஜீரண மண்டல உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிற்றை சுத்தமாக்குகிறது.
நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், நெய், பழங்கள், காய்கனிகள், வேர்க்கடலை, பால், தயிர் போன்றவற்றை முதலில் பகவானுக்கு படைத்துவிட்டு பிறகு சாப்பிடலாம்.
ஏகாதசி விரதத்தை எப்படி முறைப்படி தொடங்குகிறோமோ அதே போல் விரதத்தை முறைப்படி தான் முடிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஏகாதசி விரதம் இருந்ததற்கான பலன் கிடைக்காமல் போய்விடும் எனவே இன்றைய தினம் முறையோடு விரதம் இருந்து நாளை துவாதசி நாளில் விரதம் முடிந்து அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டக்காய் சாப்பிட்டு பெருமாளை தரிசனம் செய்யலாம்.