நோய் குணமாகவில்லையா? வைத்தீஸ்வரன் கோயிலுக்கு போங்க!
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: நாளை செவ்வாய் கிழமையும் சிவராத்திரியும் சேர்ந்து வருகிறது. நீண்ட நாட்களாக நோயால் அவதியுருபவர்கள் நாளை வைத்யநாதர் எனும் வைத்தீஸ்வரனுக்கு விரதமிருப்பது விஷேஷமாகும். சில குடும்பங்களுக்கு இந்த கோயில் குலதெய்வ கோயிலாக அமைந்திருப்பதால் மாசி செவ்வாய் கிழமைகளில் குடும்பத்தோடு இங்கு வந்து மாவிளக்கு போடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும்:
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது பழமொழி. உடல் ஆரோக்கியம்தான் மற்ற எல்லாச் செல்வங்களைவிடவும் சிறந்தது. இன்னும் சொல்லப்போனால் மற்ற செல்வங்களைப் பெறவும், பெற்ற செல்வத்தை அனுபவிக்கவும் ஆரோக்கியம் இன்றியமையாததாய் திகழ்கிறது.எவ்வளவு பெரிய பணக்காரர்கள் என்றாலும், உயர்பதவி வகிப்பவர்கள் ஆனாலும், கல்வி ஞானம் உடையோர் நாவன்மைமிக்கோர், உழைப்பாளிகள் போன்றோருக்கு ஆரோக்கியம் இல்லையெனில் அவர்களது கல்வியும், உழைப்பும், நாவன்மையும் இவ்வுலகுக்கு பயன்படாமலேயே போய்விடும். இவ்வுலகில் ஆரோக்கியம் இல்லையெனில் திறம்பட செயலாற்ற முடியாது. "சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்" என்பார்கள். எனவே நோயற்ற வாழ்வுக்கு ஆன்மிகமும் ஜோதிடமும் காட்டும் வழிகளை அறிய முயலுவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
ஜோதிடத்தில் நோய் தீர்க்கும் அமைப்பு:
ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாமிடம் ரோக ஸ்தானம் எனப்படும். இந்த ஆறாமிடம் மூலம் குறிப்பிட்ட ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதை அறியலாம். ஆறாமிடத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள் மூலமும், ஆறாமிடத்தை பார்வை செய்யும் கிரகங்கள் மூலமும், அந்த ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதையும் அறிய இயலும். இந்த நோய்களின் தாக்குதல் எப்போது பலமாக தன் இயல்பைக் காட்டும், எந்த காலக் கட்டங்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதையும் அறியலாம்.
ஜாதகத்தில் ஆறாம் இடத்தை வைத்து ஒரு மனிதன் அனுபவிக்கும் நோய் , எதிரி மற்றும் கடன் இவற்றை அறிய முடியும். மேலும் சிறை தண்டனை கூட இந்த இடத்தை வைத்து கூற முடியும். ஆறாம் வீட்டில் பாவகிரகங்கள் இருந்தால் ஒரு மனிதனுக்கு எதிரிகள் குறைவாக இருப்பார்கள். அதுவே சுப கிரகம் அங்கே இருந்தால் அனேக எதிரிகளை எதிர்கொள்ளும் நிலை கொடுக்கும்.
ஜென்ன ஜாதகத்திற்க்கு ஆறாம்வீட்டிற்க்கு பன்னிரெண்டாம் பாவத்தையும் அதன் கிரஹங்களையும் கொண்டு நோய் தீர்க்கும் அமைப்பை அறியலாம். அதேபோல காலபுருஷனுக்கு ஆறாம் வீடான கன்னி ராசிக்கு பன்னிரெண்டாம் பாவமான சிம்மம் மற்றும் அதன் திரிகோண ராசிகளான மேஷம், தனுசு ஆகிய ராசிகளும் அதன் அதிபதிளும் நோய் தீர்க்கும் அமைப்பை கூறுவார்கள்.
காலபுருஷனுக்கு லக்னமான மேஷ ராசியில் செவ்வாய் ஆட்சி பெறுவது, சுப கிரஹ்ங்கள் இருப்பது மற்றும் சுப கிரஹங்களின் பார்வை பெறுவது ஆகியவை ஜாதகருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் அமைப்பாகும்.
காலபுருஷனுக்கு தர்ம திரிகோண ராசிகளில் அமைந்துள்ள நக்ஷதிரங்கள் முறையே கேது, சுக்கிரன், சூரியன் ஆகிய கிரஹஙளின் சாரஙளை பெற்றிருக்கும். கேது மருத்துவத்திற்க்கும் ஆன்மிகத்திற்க்கும் காரக கிரகம் ஆகும். சுக்கிரன் நோய் குணமடைவதற்க்கும் சுகமளிப்பத்ற்க்கும் காரகர் ஆகும். சூரியன் ஆத்ம காரகர் ஆகும். எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தந்து நோய் வராமல் காப்பதற்க்கும் நோய் குணமாவதற்க்கும் சூரிய பகவானின் அருள் மிக முக்கியமானதாகும்.
நோய் தீர்க்கும் மருத்துவதிற்க்கான கிரஹங்கள்:
ஒருவருக்கு நோய் விரைவில் குணமாக மருத்துவத்தொடு தொடர்புடைய கீழ்க்கண்ட கிரகங்கள் வலுவாக ஜாதகத்தில் அமைந்திருக்கவேண்டும்.
1.ஆரோக்கியத்திற்குரிய கிரகம் சூரியன். சூரியனை ஆத்ம காரகன் என ஜோதிடம் போற்றுகிறது. ஆரோக்கியத்திற்கு ஆதித்தனை வணங்கு என்பது ஜோதிடப் பழமொழி.
2.இரத்தம், அறுவைச் சிகிச்சை இவற்றிற்கு காரகத்துவம் பெற்ற செவ்வாய்.
3.மருத்துவம் மற்றும் மருந்துக்களுக்கு காரக கிரகமான புதன். மேலும் பொதுவாகவே கல்விக்கு காரகனான புதனை வித்யாகாரகன் என போற்றுகிறது பாரம்பரிய ஜோதிடம். ஜோதிடத்திற்க்கும் புதன் காரகன் என்பது குறிப்பிடத்தக்கது.
4. கேதுவை மருத்துவ கிரகம் என்று சாஸ்திரம் சொல்கிறது. கேது மணி, மந்திர ஔஷதங்களுக்கு காரக கிரகமாகும்.
5.ராகு மேற்கண்ட மருத்துவக் கிரகங்களுடன் தொடர்புகொள்ளும்போது அத்துறையில் தீவிரமான ஈடுபாடுகொள்ள வைக்கிறது.ராகு மறைந்து இருக்கின்ற பொருள், உள் விஷயங்கள் மற்றும் விஷம், ரசாயனம் ஆகியவற்றை குறிக்கின்ற கிரகம்.
6. மருந்து, மாத்திரைகள், விஷம் சம்பந்தப்பட்டவைதான். ஒரு ரசாயனம் மருந்து மற்றொரு ரசாயனத்துடன் சேரும்போது அது நோய் தீர்க்கும் மருந்தாகிறது. நாம் சாப்பிடுகிற ஒவ்வொரு மருந்தும் விஷத்தமையுடையதுதான். அதனால்தான் அந்த மருந்து அளவு மீறிப்போகும்போது வேறு விதமான உப, துணை நோய்களை ஏற்படுத்துகிறது. ஆகையால்தான் நிழல் கிரகங்கள் என்று சொல்லக்கூடிய ராகுகேது மருத்துவத்திற்கும், ரசாயனத்திற்கும், வேதிப்பொருள்களுக்கும் உரிமை உடையவர்களாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
அங்காரகனும் மருத்துவ சிகித்ச்சையும்:
ஜாதகத்தில் நோய் தீரும் அமைப்பிருந்துவிட்டாலும் மருத்துவ சிகித்ச்சைக்கு
தெய்வ அருளும் வேண்டுமல்லவா? எந்த தெய்வத்தை வணங்கினால் நோய் தீரும்? வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள அருள்மிகு வைத்யநாதஸ்வாமிதாங்க!
வைத்தீஸ்வரன் கோவில்:
காவிரி ஆற்றின் வடகரைப் பகுதியில் இருக்கும் சைவத்தலங்களில் முக்கியமான தலங்களில் ஒன்று திருப்புள்ளிருக்கு வேளூர். அதன் இன்றையப் பெயர் வைத்தீஸ்வரன் கோவில். பெயரிலிருந்தே வைத்தியத்தோடு தொடர்புடய ஸ்தலம் என அறியலாம்.இது செவ்வாய் கிரகத்திற்கான ஸ்தலம் ஆகும். சிவபெருமான் வைத்தியநாதராக வீற்றிருந்து வினைதீர்க்கும் தலம் தான், 'புள் இருக்கு வேளூர்’ எனும் வைத்தீஸ்வரன் கோவில். இறைவன் நாலாயிரத்து நானூற்று நாற்பத்தெட்டு வியாதிகளையும் தீர்க்கத் திருவுள்ளம் கொண்டு அருள்பாலிக்கும் தலம் இதுவாகும்.
அங்கே உறையும் சிவனாரின் பெயர் வைத்தியநாத சுவாமி. அம்மனின் பெயர் தையல்நாயகி அம்மன். ஸ்தல விருட்சம் வேம்பு. அதாவது வேப்பமரம். நான்கு கோபுரங்களுடனும் உயர்ந்த மதில்களோடும் கூடிய கோயில். மேற்கு நோக்கிய இறைவன் சந்நிதி கொண்டது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது.
இந்தத் தலத்தில் பதினெட்டு தீர்த்தங்கள் இருக்கின்றன. இருப்பினும் அம்பாள் சன்னிதிக்கு எதிரே, திருக்கோவில் வளாகத்தின் உள்ளேயே, சுற்றிலும் அழகிய மண்டபங்களுடன் காட்சிதரும் 'சித்தாமிர்த தீர்த்தம்’ என்னும் திருக்குளம் சிறப்பு பெற்றதாக திகழ்கிறது.
செவ்வாயின் நாயகன் அங்காரகனுக்கு தீரா நோய் வந்த போது, ”வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று, அங்குள்ள சித்தாமிர்தத்தில் குளித்து வைத்தீஸ்வரனை வணங்கினால் நோய் குணமாகும்” என்ற அசரீரி வாக்கைக் கேட்டு, அங்கு சென்று வழிப்ட்டதால் நோய் குணமானதாம், இந்த வைத்தியத்திற்கு சுவாமி தைல மருந்து தயார் செய்யும் போது அம்பாள் தைல பாத்திரம் கொண்டு வந்த படியால், அம்மாளுக்கு தைலநாயகி என்ற பெயர் வந்தது. இறைவனுக்கு இங்கே வைத்தியநாதன் என்று பெயர்வந்ததற்கு முக்கிய காரணமே அந்நிகழ்வுதான்!
நோய் நீங்க இத்திருத்தலம் வரும் பக்தர்களுக்கு விபூதியும், திருச்சாந்துருண்டையும் வழங்கப்படுகிறது. சுக்ல பட்சத்தில் ஒரு நன்னாளில் அங்க சந்தான குளத்தின் மையத்தில் உள்ள மண்ணை எடுத்து, புதுப்பாத்திரத்தில் வைத்து விபூதி குண்டத்தில் உள்ள விபூதியையும், சித்தாமிர்த தீர்த்தத்தையும் கலந்து வில்வ இலை, வேம்பு இலை மற்றும் சந்தனக் குழம்பினையும் சேர்த்து அரைத்து மாத்திரைகளாகத் தயார் செய்கின்றனர். இதனை அம்பிகை திருவடியில் வைத்து மந்திரம் சொல்லி உரு ஏற்றி நோய் பாதிப்புள்ள பக்தர்களுக்கு கொடுக்கிறார்கள். எந்த தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
இந்தத் திருக்கோவிலுக்கு வந்து மனமுருக தையல் நாயகியையும், வைத்திய நாதரையும் வணங்கி விட்டு, இந்த இக்கோவிலில் உறையும் சிவபெருமானை மனமுருகி வேண்டி மண் சாந்துருண்டை மாத்திரையை நம்பிக்கையுடன் பெற்றுச் சென்று சாப்பிடுபவர்களுக்கு, எப்பேர்ப்பட்ட நோய் இருந்தாலும் குணமாகும் என்பது மக்களின் நம்பிக்கை. ஆகவே நோய்களால் வாடுபவர்கள், இத்தலத்திற்கு சென்று வரலாம்.