ஏழைகளுக்கு தானம் கொடுங்க பணம் தானா தேடி வரும் - 12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்
மேஷம் முதல் மீனம் ராசிக்காரர்கள் தானம் செய்தவன் மூலம் அவர்களுக்கு பணவரவு அதிகரிக்கும். செல்வ வளம் பெருகும். மகிழ்ச்சியும் நிம்மதியும் கூடும்.
மதுரை: வழிபாடு இறைவனை அடைய எளிய வழி. பாதங்களை சரணடைவதன் மூலம் இறைவனின் மனதை அடையலாம். தானம் செய்வதும் இறைவனை அடையும் வழி. அன்னதானம், ஆடை தானம், ஏழை எளியவர்களுக்கு செய்யும் தானம் இறைவனுக்கு பிடிக்கும். இதன் மூலம் செல்வத்தையும், மகிழ்ச்சியையும் வாரி வழங்குவார்.
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளையும் நவ கிரகங்கள் ஆட்சி செய்கின்றன. இந்த ராசிக்காரங்கள் தங்களின் கிரகத்திற்கு ஏற்ப தானம் செய்தால் பலன் கிடைக்கும்.
தயிர்சாதம், சர்க்கரைப்பொங்கல், சுண்டல், சாம்பார் சாதம் என உணவு வகைகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பொருட்களையும் தானமாக தருவதன் மூலம் இறைவனை மகிழ்ச்சியடையச் செய்ய முடியும். எந்த நாளில் என்ன தானம் கொடுத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த மாதிரியான பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
கருட புராணம்: கணவன் மனைவிக்கு துரோகம் செய்தால் நரகத்தில் என்ன தண்டனை தெரியுமா
மேஷம்
செவ்வாய் பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்கள் சுண்டக்கடலை தானமாக கொடுக்க வேண்டும். தங்க நிற முறைய பொருட்களை தானமாக தருவது நல்லது. மஞ்சள், கடலைப்பருப்பை தானமாக தருவதன் மூலம் செல்வ வளம் பெருகும். குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். சிவன்கோவில்களுக்கு சென்று வரும்போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை தானம் செய்தால் விரைவில் செல்வம் சேரும்.
ரிஷபம்
சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்கள் தேனை தானமாக தரலாம். செவ்வாய் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்வதன் மூலம் செல்வம் பெருகும். ஏழை பெண்களின் திருமணத்துக்கு முடிந்த பொருட்களை தானம் செய்வதன் மூலம் தடையில்லாத முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
புத பகவானை ராசி நாதனாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்கள் தவறாமல் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்து வெண் பொங்கல் சமைத்து முடிந்த அளவுக்கு ஏழைகளுக்கு தானம் கொடுங்கள். அனைத்து விதமான செல்வமும் தேடி வரும். ஏழை மாணவர்களுக்கு கல்விக்கு பணம் தானம் கொடுப்பதும் நன்மை தரும். கோவிலுக்கு நெய் தீபம் ஏற்ற நெய் வாங்கி தரலாம். பழங்கள், தயிர் வாங்கித்தர வீட்டில் பணம் குவியும்.
கடகம்
சந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்கள் பசுமாட்டுக்கு கீரை உள்ளிட்ட பொருட்களை தானமாக கொடுப்பதன் மூலம் குடும்பத்தில் வறுமையை விரட்டும். செல்வம் வளம் பெருக உதவும். ஏழை நோயாளிகளுக்கு மருந்து வாங்கி தானம் கொடுத்தால் நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.
பால், தண்ணீர் தானம் செய்ய வற்றாத செல்வம் பெருகும்.
சிம்மம்
சூரியனை ராசி நாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் ஞாயிறு கிழமைகளில் தாமிரம், கோதுமை தானமாக தரலாம். ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் உங்கள் மனதில் அமைதி ஏற்படும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதை கேட்டு வாங்கிக்கொடுக்க புண்ணியம் அதிகரிக்கும். குங்குமப்பூ தானம் தர நன்மைகள் கூடும்.
கன்னி
புத பகவானை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்கள் பசுவிற்கு அகத்திக்கீரை தானமாக தரலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும். மேலும் ஏழை மாணவர்களுக்கு நோட்டு, பென்சில், பேனா வாங்கிக் கொடுக்க முன்னேற்றம் அதிகரிக்கும்.
துலாம்
சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்கள் பசு நெய்யை தானமாக வாங்கிக் கொடுக்கலாம். விநாயக வழிபாடு கைகொடுக்கும். ஏழை எளியோர்களுக்கு வெண் பொங்கல் தானம் கொடுப்பதன் மூலம் புதிய சொத்துக்கள் சேரும். மேலும் ஆதரவற்ற இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு படிப்பு உதவித்தொகை தானமாக கொடுப்பது வாரிசுகளுக்கு நல்லது.
விருச்சிகம்
செவ்வாய் பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே.. இயன்ற அளவு மாற்றுத்திறனாளிகளுக்கு தானம் செய்ய செல்வம் சேரும். கடன்கள் தீர லட்சுமி நரசிம்மரை வழிபட்டு பானகம் தானம் செய்யலாம். அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் தானம் செய்தால் பண வரவு அதிகரிக்கும். ஆரஞ்சு நிற பொருட்களை அதிகம் தானமாக தரலாம். குங்குமம் தானமாக தர நன்மைகள் நடைபெறும்.
தனுசு
குருபகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே.. குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து பிறகு பக்தர்களுக்கும் தானம் செய்யலாம். வாரம் ஒரு முறை செவ்வாய் அல்லது வெள்ளியில் துர்க்கை அம்மனுக்கு மலர் தானம் செய்யலாம். மேலும் செவ்வாய்க் கிழமைகளில் முருகனை வழிபட்டு சாம்பார் சாதம் தானம் செய்தால் வாழ்வு செழிக்கும். வயதான பெண்களுக்கு கொண்டைக்கடலையால் செய்த உணவு தானம் செய்தால் நல்லது. மஞ்சள் தானமாக தர நன்மைகள் நடைபெறும்.
மகரம்:
சனி பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே... ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும். வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கி தரலாம். கோவில்களில் சீரமைப்பு பணிகளுக்கு நிதி உதவி கொடுக்கலாம். ஏழைகளுக்கு செருப்பு தானமாக வாங்கி தர வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். செல்வ வளம் பெருகும்.
கும்பம்
சனி பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டினை மறக்காமல் செய்ய செல்வ வளம் பெருகும். ஏழைகளுக்கு கதம்ப உணவை அடிக்கடி தானமாக கொடுக்க வேண்டும். இதனால் உங்களுக்கு வரும் பண வரவு இரட்டிப்பாகும். மேலும் ஏழை நோயாளிகளுக் மருந்து மாத்திரி வாங்கி கொடுக்கலாம். ஏழைகளுக்கு செருப்பு வாங்கித்தருவதன் மூலம் செல்வ வளம் பெருகும்.
மீனம்
குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே... நீங்கள் பிங்க் நிற ஆடைகளை தானமாக தரலாம். வெல்லம் தானமாக கொடுக்கலாம். ரூபி நிற பொருட்களை கொடுத்தால் செல்வ வளம் பெருகும். பவுர்ணமி நாட்களில் சிவ தரிசனம் செய்வது நல்லது. ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம் அதிகரிக்கும். மேலும் நல்லெண்ணை தீபம் தானம் செய்யலாம். அய்யப்ப பக்தர்களுக்கு உதவினால் கூடுதல் நன்மை உண்டாகும்.