துர்க்காஷ்டமி 2018: துன்பங்கள் தீர துர்க்கை அன்னையை வழிபடுவோம்
அஷ்டமியில் துர்க்கை வழிபாடு செய்வது சிறந்தது. துர்க்காஷ்டமி அன்று துயரங்கள் விலக நாம் துர்க்கையை வழிபடுவது அவசியமாகும்.
Recommended Video
சென்னை: துர்க்காஷ்டமி நாளில் தன்னம்பிக்கை பெருகவும், எடுத்த காரியத்தில் வெற்றி பெறவும் துர்க்கையை வழிபட வேண்டும்.
தேவையில்லாத கவலைகள், குடும்பத்தார் இடையே இருந்த மனக்கசப்புகள் ஆகியவற்றை போக்கும் வலிமை கொண்டது துர்க்காஷ்டமி வழிபாடு.
அம்பிகையைக் கொண்டாட உகந்த நாட்கள் நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் வரும் அஷ்டமி திதியில் துர்க்காஷ்டமி விழா கொண்டாடப்படுகிறது. ஒன்பது இரவுகள் அம்பிகையை நோக்கி விரதம் இருந்து வழிபட வேண்டியதெல்லாம் ஈடேறும் என்பது நம்பிக்கை. இந்த வருடத்திற்கான துர்க்காஷ்டமி இன்று புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.
புரட்டாசி மாதம் வரும் அஷ்டமி தினத்தன்று வீடுகளில் துர்க்கை அம்மனை நினைத்து வழிபடுதல் உடல் ஆரோக்கியத்தையும், மன மகிழ்ச்சியையும் தரும். துர்க்காஷ்டமி நாளில் தன்னம்பிக்கை பெருகவும், எடுத்த காரியத்தில் வெற்றி பெறவும் துர்க்கையை வழிபடுதல் வேண்டும். செம்பருத்தி மற்றும் செவ்வரளி மாலை சூட்டி துர்க்கை அம்மனை வழிபடுதல் கூடுதல் பலன்களைத் தரும். மேலும் துர்க்கைக்கு உரிய படல்களை மனமுருகிப் பாடித் துதிப்போருக்கு கஷ்டங்கள் அகலும் வாழ்க்கை வளமாகும் என்பது ஐதீகம்.
அம்பிகை அவதாரம்
சிவபெருமானை விட தானே உயர்ந்தவர் என்ற மமதை தட்சனிடம் ஏற்பட்டது. எனவே அவன் சிவனை அழைக்காமல் யாகம் ஒன்றை நடத்தினான். இதை அறிந்ததும் அம்பிகை ஆவேசம் அடைந்தாள்.
மற்றவரை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நடத்தப்படும் யாகத்தை அழிக்க வேண்டும் என்று அம்பாள் முடிவு செய்தாள். எனவே அவள் சக தேவதைகளுடன் இந்த உலகில் மிகவும் உக்கிரமாக அவதரித்தாள். அப்போது அவள் பத்ரகாளி அவதாரம் ஏற்றாள். அந்த அவதார தினம் துர்க்காஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. இன்று துர்க்காஷ்டமி தினமாகும்.
காளி அவதாரம்
ஸ்ரீதுர்கா தேவியை பூஜை செய்யவும் துர்கா ஸ்தோத்ரம் சொல்லவும், சண்டீஹோமம் முதலான ஹோமங்கள் செய்யவும் மிகச்சிறந்த நாள். அம்மனை ஆராத்திக்கும் ஸ்ரீவித்யா மார்கத்தில் முக்கியமாக பத்து விதமான அம்மனின் வடிவங்கள் உபாசிக்க சிறந்தவைகளாகக் கூறப்பட்டுள்ளன.
அவைகள் தமா மகாவித்யைகள் எனப்படும். அவைகளுக்குள் முதலாவதாக காளி என்னும் ஸ்வரூபம் கூறப்பட்டுள்ளது. அதாவது பத்து விதமான அம்மனுக்கும் தலைவியாக காளி கூறப்படுகிறாள். ஆகவே காளியை பூஜிப்பவர்கள் உபாசிப்பவர்கள் தமா மகாவித்யா என்னும் பத்து வித அம்மனின் வடிவங்களையும் பூஜித்த பலனைப் பெறுவார்கள்.
சக்தியின் எல்லையற்ற வடிவம்
சக்தியின் எல்லையற்ற ஆற்றலின் வடிவம் துர்க்கை. துர்க்காஷ்டமி என்பது அஷ்டமியின் சிறப்பு. ஒருவருக்கு நவராத்திரி நாட்களில் பூஜை நடத்துவதற்குப் போதிய வசதி இல்லாமலிருந்தால் அவர் நவராத்திரி எட்டாவது தினமான அஷ்டமி தினம் அவசியம் பூஜிக்க வேண்டும். ஏனென்றால் தட்சனின் யாகத்தை அழித்த துர்காதேவி அஷ்டமி தினத்தன்று தோன்றினார். எனவே அன்று பூஜைகளை சிறப்பாகச் செய்ய வேண்டும்.
அதுமட்டுமல்ல கம்சனை அழிக்க கிருஷ்ணன் அவதரித்த அதே அஷ்டமி தினத்தன்று தான் மகா மாயையான துர்க்கையும் நந்தகோபாலன் இல்லத்தில் அவதரித்தாள். ஆகவே துர்க்காஷ்டமி மிகுந்த விசேஷமுடையது. இந்த சிறப்பான தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
சக்தியற்றவர்களாக இருப்போர் நவராத்திரி விரதத்தில் பூஜை செய்வதற்கு மிகவும் முக்கியமான நாட்கள் சப்தமி, அஷ்டமி, நவமி தினங்களாகும். இந்த மூன்று நாட்களும் விரதத்தோடு பூஜித்தால் ஒன்பது நாட்கள் பூஜித்த பலன் கிடைக்கும். நவராத்திரி விரதம் இருப்பவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நல்ல பயன் அடைவார்கள்.