சாம்பல் புதனுடன் கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் தொடங்கியது - ஏப்ரல் 12ல் ஈஸ்டர்
கிறிஸ்தவர்களின் நாற்பது நாட்கள் தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் தொடங்குகிறது. கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன
சென்னை: கிறிஸ்தவர்களின் நாற்பது நாட்கள் தவக்காலம் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நாட்களில் ஆடம்பரங்களை தவிர்த்து விடுவார்கள். திருமணங்கள் உள்ளிட்ட சிறப்பு கொண்டாட்டங்களை தவிர்த்து நாற்பது நாட்கள் நோன்பு இருப்பார்கள். இந்த ஆண்டிற்காக ஈஸ்டர் பண்டிகை தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் தொடங்கியுள்ளது. தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் சாம்பல் புதன் தொடங்கி ஈஸ்டர் வரை தவக்காலம் கடைபிடிப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதி ஈஸ்டர் வரை நடைபெறுகிறது. தவக்காலத்தின் தொடக்க நாளாகிய இன்று அனைத்து ஆலயங்களிலும் சிறப்புத் திருப்பலிகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. கிறிஸ்தவர்கள் நெற்றியில் பாதிரியார்கள் சாம்பலால் மனந்திரும்பி நற்செய்தியை நம்பு என்று சொல்லி சிலுவை அடையாளமிட்டனர்.
இதற்கான சாம்பல் கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறன்று வழங்கப்பட்ட குருத்தோலைகளை ஆலயத்தில் கொண்டு கொடுக்கப்பட்டு அவை எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். அந்த சாம்பலே கிறிஸ்தவர்கள் நெற்றியில் சிலுவையாக பூசப்படுகிறது.
நாற்பது நாட்கள் நோன்பு
கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகை ஒன்றாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3ம் நாள் உயிர்த்தெழுவதை கொண்டாடும் வகையில் உயிர்ப்பு பெருவிழாவாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை வருகிற ஏப்ரல் மாதம் 12ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த பண்டிகைக்கு முன் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் விதமாக கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பு இருந்து தவக்காலத்தை அனுசரிப்பது வழக்கம். அதன்படி இன்று கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்குகிறது.
கிறிஸ்தவர்கள் தவக்காலம்
இந்த நாற்பது நாட்கள் தவக்காலத்தின் போது பல்வேறு பக்தி வழிபாடுகள் நடைபெறும். ஆடம்பர செலவுகளை தவிர்த்தல், சுபநிகழ்ச்சிகள் நடத்தப்படுவதை தவிர்த்தல், நோன்பு இருத்தல். அசைவ உணவு தவிர்த்தல் போன்ற வகையில் தங்கள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள்.
பாதை யாத்திரை
வெள்ளிக்கிழமைதோறும் சிலுவைப் பாதை ஜெப வழிபாடு நடைபெறும். மற்றும் திருத்தலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்ளுதல், பாதயாத்திரை மேற்கொள்ளுதல், ஆலயங்களில் நற்செய்தி பெருவிழா, தியானம் போன்றவை நடைபெறும்.
கிறிஸ்தவர்கள் நெற்றியில் சாம்பல்
சாம்பல் புதன் வழிபாட்டின்போது ஆயர், பங்குத்தந்தையர்கள், அருட்பணியாளர்கள் கிறிஸ்தவ மக்களின் நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு, மனந்திரும்பு, நற்செய்தியை நம்பு என்று கூறி வழிபடுவார்கள். இதற்கான சாம்பல் கடந்த ஆண்டு நடந்த தவக்கால குருத்தோலை பவனியின்போது வழங்கப்பட்ட குருத்து ஓலைகளை சேகரித்து எரித்து சாம்பல் தயாரித்து வைத்திருப்பார்கள்.
பெரிய வியாழன்
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. புனித வாரத்துக்கு முந்தைய 40 நாட்கள் தான் தவக்காலம் ஆகும். சிலுவையில் இயேசு மரிப்பதற்கு முதல்நாள் பெரிய வியாழனாக அனுசரிக்கப்படும். அந்த நாளில் இயேசு தனது சீடர்களின் பாதங்களை கழுவி, அவர்களுடன் உணவருந்தியதை நினைவுபடுத்தும் விதமாக பாதம் கழுவும் சடங்கு நடைபெறும்.
சிலுவை பாதை வழிபாடு
இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படும். தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் நோன்பு இருப்பார்கள். தினந்தோறும் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வீடுகளில் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் வகையில் சிலுவைப்பாதை வழிபாடும் நடைபெறும்.
ஏழைகளுக்கு தானம்
கிறிஸ்தவர்களின் வீடுகளில் தவக்காலத்தில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது. ஆனால் ஏழை, எளியவர்களுக்கு இந்த தவக்காலத்தில் தானம், தர்மம் வழங்குவார்கள். ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், அவர்களை வீடுகளுக்கு அழைத்து வந்து உணவு, உடையும் வழங்குவார்கள். ஆலயங்களில் தவக்காலத்தில் வசூலிக்கப்படும் சிறப்பு காணிக்கை ஏழைகளுக்கு தானம் வழங்க பயன்படுத்தப்படும்.