விநாயகர் சதுர்த்தி 2019: களிமண், மாட்டுச்சாணம் விதை விநாயகர் #GaneshChaturthi
பிடித்து வைத்தால் பிள்ளையார் என விநாயகரை போற்றுவார்கள். விநாயகர் அவ்வளவு எளிமையானவர். களிமண், மாட்டுச்சாணம் என சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் இந்த ஆண்டு பிள்ளையாரை உருவாக்கி வருகின்றனர்.
Recommended Video
மதுரை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாரம்பரிய கலைகளையும், விவசாயத்தின் மகத்துவத்தையும் பறைசாற்றும் வகையில் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. பிடித்து வைத்தால் பிள்ளையார் என விநாயகரை போற்றுவார்கள். விநாயகர் அவ்வளவு எளிமையானவர். களிமண், மாட்டுச்சாணம் என சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் இந்த ஆண்டு பிள்ளையாரை உருவாக்கி வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற செப்டம்பர் இரண்டாம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு முக்கியத்துவம் பெற்று வருகிறது.
இந்து அமைப்புகள் சார்பில் மட்டுமன்றி தனியார் அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது வடிவங்களில் விநாயகர் சிலைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
ரசாயன பொருட்களுக்குத் தடை
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒரு அடிமுதல் 12 அடி வரையிலும் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்படுகின்றன. இரசாயனம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதால் நீர்நிலைகள் மோசமடைவதுடன் சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுகிறது. எனவே, சிலை தயாரிப்புக்கு அரசு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. ரசாயன பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் காகிதம் கூழை பயன்படுத்தியே இந்த சிலைகள் உருவாக்கப்படுகின்றன.
மாட்டு சாணத்தில் விநாயகர்
வீடுகளில் சாமி கும்பிடும் போது மாட்டுச்சாணத்தையும் மஞ்சளையும் பிடித்து வைத்து பிள்ளையாராக வணங்குவார்கள். இந்த ஆண்டு மாட்டுச்சாணத்தில் தயாரிக்கப்பட்ட சிலைகள் வரவேற்பை பெற்று வருகின்றன.
சுற்றுச்சூழல் விநாயகர்
மாசு ஏற்படாத வகையில் இரசாயன வர்ணம் பூசப்படாத, களிமண், கிழங்கு மாவு, மரவள்ளிக்கிழங்கில் இருந்தும், ஜவ்வரிசி கழிவுகள் போன்றவற்றில் இருந்தும் சிலைகளை தயாரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில் இரசாயன பொருட்கள் இல்லாமல் நாட்டு மாட்டில் கிடைக்கும் சாணத்தை கொண்டு விருதுநகரில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
விதையோடு கூடிய விநாயகர்
இந்நிலையில் சுற்றுச்சூழலுக்கு எந்த மாசும் ஏற்படாத வகையில் நாட்டு மாட்டில் இருந்து கிடைக்கும் சாணத்தால் ஆன சிலைகளை செய்து வருகிறார் விருதுநகரை சேர்ந்த சங்கர் என்ற இளைஞர். மாட்டுச் சாணத்துடன் முல்தான் மட்டி பவுடர் கலந்து சிறிய அளவிலான சிலைகளை தயாரித்து வரும் சங்கர், கூடவே விதையையும் வைக்கிறார். விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் அதனை நீர்நிலைகளில் கரைப்பதால் சுற்றுச்சூழல் மாசும் ஏற்படாது. அதோடு அதில் உள்ள விதையில் இருந்து ஏதாவது செடி உருவாகிவிடும் என்கிறார் சங்கர்.
தண்ணீரில் எளிதில் கரையும்
மதுரை மாட்டுத்தாவணி அருகே ராஜஸ்தானில் இருந்து வந்த ஒரு குடும்பத்தினர் அழகாக பல வடிவங்களில் சிலைகளை செய்து வர்ணம் தீட்டுகின்றனர். இந்த சிலைகள் மாவில் தயாரிக்கப்பட்டவை என்று சுற்றுச்சூழலுக்கு மாற்று ஏற்படாத சிலைகள் என்று கூறும் தயாரிப்பாளர்கள், இந்த சிலைகள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவை என்று கூறுகின்றனர்.
தொழிலாளர்கள் வேதனை
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்
சென்ற ஆண்டு விநாயகர் சிலை செய்யும் பணி குறைந்து காணப்பட்டாலும் வருமானம் சுமாராக இருந்தது. கடந்த ஆண்டு விழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு கல்வீச்சு, கடை உடைப்பு,கார் ஏரிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் ஏற்பட்டது. அதே போல் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வரும் 2 ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததால் ஏராளமானோர் விநாயகர் சிலை வாங்க முன்வரவில்லை. மேலும் 20க்கும் குறைவான விநாயகர் சிலையை குறிப்பிட்ட நபருக்கு மட்டுமே செய்து வருவதால் தொழிலாளர்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.