துலாம் ராசியில் குரு உடன் கூட்டணி சேர்ந்த சுக்கிரன் - 12 ராசிக்கும் பலன்கள்
துலாம் ராசியில் குருபகவானுடன் சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்ந்து உள்ளார். குரு சுக்கிரன் இணைவு மூலம் 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் என்ன என்று பார்க்கலாம்.
சென்னை: நவகிரகங்களில் குருவும் சுக்கிரனும் எதிர் எதிர் துருவங்கள். குரு,தேவர்களுக்கு குருவாக திகழ்பவர். சுக்கிரன் அசுரர்களுக்கு குருவானவர். வேத மந்திரங்களுக்கு எல்லாம் உரியவர் குரு. மாய மந்திரங்களுக்கும் தந்திர வித்தைகளுக்கும் மாந்திரீக தாந்த்ரீக, வசிய மந்திரங்களுக்கு உரியவர் சுக்கிரன். இந்த குருவும் சுக்கிரனும் துலாம் ராசியில் இணைந்துள்ளனர். இந்த கூட்டணி அக்டோபர் 11 வரை நீடிக்கும். 12 ராசிக்காரர்களுக்கும் இதனால் என்ன பலன் என்று பார்க்கலாம்.
நவக்கிரகங்களில் சுப கிரகமாக திகழ்பவர் குரு பகவான். இவரது பார்வையே ஒருவரை உயர்வான இடத்திற்குக் கொண்டு போய் வைத்துவிடும். குரு பகவான் ஒருவரது ஜாதகத்தில் யோகம் பெற்று அமைந்திருந்தால், வறுமையில் இருப்பவனும் கூட ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் நிலைக்கு உயர்த்தப்படுவான். குரு யோகம் பெற்றால், வணங்காதவர்களை கூட இருகரம் கூப்பி வணங்க வைத்துவிடும். கட்டுமஸ்தான உடல்வாகு தரக்கூடியவர் குரு. நிரந்தரமான வெற்றி மகுடத்தை சூட்ட வைப்பவர். மறைந்த பின்பும் சிலையாக இருந்து மரியாதை செய்ய வைப்பவர். விசுவாசம் மிக்க உறவுகள் மனைவி, குழந்தைகள் கொடுப்பார். உயிரை கொடுக்கும் நண்பர்களை தருபவர். வழக்குகள் சாதகமாக அமைய வைப்பது குருவே. அரண்மனை போன்ற வீடு அமைவதும், அதனை அனுபவிக்கும் பாக்கியம் தருவதும் குரு தான்.
சுக்கிரன் இல்லாமல் சந்தோஷம் என்பது ஒருவருக்கு கனவிலும் கிடையாது. சுக்கிர பகவான் அசுரர்களுக்கு குருவாக இருப்பவர். இவருடைய பெயர் சுக்கிரசாரியார் என்றும், பார்க்கவன் என்றும் அழைக்கப்படுகிறார். சிவபெருமானை நினைத்து தவம் செய்து, அமிர்த சஞ்சீவி என்ற மந்திரத்தை கற்றார். இந்த மந்திரத்திற்கு ஒரு முக்கிய ஆற்றல் இருக்கிறது. அது என்னவென்றால், இறந்தவர்களுக்கு மீண்டும் உயிர் தரும் ஆற்றல் வாய்ந்த மந்திரம் அது. சுக்கிரபகவானின் நல்ல குணத்தை கண்டுதான் சிவபெருமான் இந்த மந்திரத்தை சொல்லிகொடுத்தார். இவருடைய வாகனம் கருடன். பெருமாளுக்கு உகந்த கருடவாகனம் பெற்றவர். பார்ப்பதற்கு வெள்ளை உருவமாக இருப்பதால் இவர் வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறார்
குரு, சுக்கிரன் உச்சம், நீசம்
குருவுக்கு சொந்த ராசியான மீனம், தனுசு ஆகிய வீடுகள் ஆட்சி நிலையில் இருந்தாலும், சந்திரனின் ஆட்சி ராசியான கடகத்தில்தான் உச்சம் அடைவார். மகர ராசியில் நீசமாகவும் இருக்கிறார். தனக்கு பகையான சுக்கிரன் ஆட்சி செய்யும் ரிஷபம், துலாம் ராசியில் பகையாகவே இருக்கிறார்.
சுக்கிரனின் சொந்த ராசிகளான ரிஷபம், துலாம் ராசிகளில் ஆட்சி நிலையில் இருந்தாலும், புதனின் ராசியான மிதுனத்தில் நட்பாகவும், கன்னி ராசியில் நீசமும் அடைகிறார். பகை கொண்ட கிரகமான குரு, ஆட்சி செய்யும் தனுசு ராசியில் நட்பாகவும் மீனத்தில் உச்சமாகவும் இருக்கிறார். எதிரியின் வீட்டில் உச்சம் அடையும் ஒரே கிரகம் சுக்கிரன்தான்.
யாருக்கு என்ன பலன்
ஜோதிட சாஸ்திரத்தில் பகையாக இருக்கும் குருவும் சுக்கிரனும் இணைந்து கேந்திர ஸ்தானமான 1, 4, 7 மற்றும் 10 ஆகிய இடங்களில் நின்று இருந்தால், சுப பலனை தருகிறார். குருவும் சுக்கிரனும் 5, 9, 11ஆம் இடங்களில் நின்று இருந்தால் அவரவர் உரிய சுப பலனைத் தருவார்கள். குரு, சுக்கிரன் இணைந்து 3, 6, 8 மற்றும் 12 ஆகிய இடங்களான மறைவு ஸ்தானங்களில் நின்று இருந்தால், கால் பங்கு மட்டுமே சுப பலனைத் தருகிறார்கள். இதிலும் பகை, நீசம் என்ற நிலையில் இருந்தால் பெரிய அளவில் யோகம் செய்வது இல்லை.
மேஷம், ரிஷபம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 7வது வீட்டில் குருவும், சுக்கிரனும் இணைந்து அமர்ந்து உள்ளனர். தேவையில்லாத பேச்சுக்களில் நேரத்தை செலவிட வேண்டாம். பணம் விசயமாக யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். ஆன்மீக தலங்களுக்கு புனித பயணம் சென்று வரலாம். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். சமூகத்தில் மதிப்பும், அந்தஸ்தும் உயரும்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு 6வது வீட்டில் குருவுடன் சுக்கிரன் இணைந்துள்ளார். இது ருண ரோக சத்ரு ஸ்தானம். வேலைப்பளு அதிகரிக்கும். தனிமையாக உணர்வீர்கள்.
மிதுனம், கடகம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு மனது முழுக்க காதல் உணர்வுகள் நிரம்பி வழியும். உங்கள் ராசிக்கு 5வது வீட்டில் குருவும், சுக்கிரனும் இணைந்து இருப்பதால் காதலர்கள் இணைந்து இருக்கக் கூடிய காலம் இதுவாகும். ரொமான்ஸ் செய்யும் காலம் என்பதால் இனி உற்சாகம் அதிகரிக்கும். கடக ராசிக்காரர்களுக்கு 4வது வீட்டில் குருவும், சுக்கிரனும் அமர்ந்திருப்பதால் பயணங்களினால் பலன் கிடைக்கும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. காதலர்கள் சில காலம் பொறுத்திருப்பது நல்லது.
சிம்மம், கன்னி
முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டில் குருவும், சுக்கிரனும் இணைந்து அமர்ந்து உள்ளனர். சிறு பயணங்களால் பலன்கள் கிடைக்கும். உங்களைப் பற்றி புறம் பேசுபவர்களை ஒதுக்கித்தள்ளுங்கள். நல்ல புத்தகங்களை படிக்க நேரத்தை செலவிடலாம். கன்னி ராசிக்காரர்களுக்கு இரண்டாவது வீடான லாப ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் அமர்ந்துள்ளதால் குடும்பம், பணம் விசயங்களில் சாதகமான செயல்களால் நன்மைகள் நடக்கும்
துலாம், விருச்சிகம்
துலாம் ராசிக்காரர்களே உங்கள் ராசியில் தனி ஆவர்தனம் செய்து வந்த குரு உடன் காதல் நாயகன் சுக்கிரன் இணைந்துள்ளார். பிரிந்து சென்ற உறவுகள் இணையும் காலம் இது. சிலரது வீட்டில் குவா குவா சத்தம் கேட்கும். சந்தோஷ தருணங்கள் நடைபெறும் காலம் இதுவாகும். விருச்சிக ராசிக்காரர்களே விரைய ஸ்தானமான 12வது வீட்டில் குரு, சுக்கிரன் அமர்ந்துள்ளதால் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். பணத்தை முதலீடு செய்யும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.
தனுசு, மகரம்
தனுசு ரசிக்காரர்களே... லாப ஸ்தானத்தில் குருவும், சுக்கிரனும் இணைந்து அமர்ந்து உள்ளதால் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். தம்பதியரிடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். பழைய நட்புக்களை புதுப்பிப்பீர்கள். மகர ராசிக்காரர்களே... தொழில் ஸ்தானமான 10வது வீட்டில் குருபகவானுடன் சுக்கிரன் இணைந்துள்ளார். சிம்மத்தில் புதன் அமர்ந்து உள்ளதும் சிறப்பான அம்சமாகும். சமூகத்தில் மதிப்பு, அந்தஸ்து உயரும் காலம் இது. இசை, படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
கும்பம், மீனம்
கும்ப ராசிக்காரர்களே 9வது வீட்டில் குருவோடு சுக்கிரன் இணைந்திருப்பது குதூகலமான அமைப்பாகும். வெளிநாட்டு பயணம் நன்மையை தரும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். பிள்ளைகள் செயல்பாடு மனநிறைவை தரும். அவ்வப்போது மூட்டுவலி பிரச்சினைகள் ஏற்படும் கவனம் தேவை. மீனம் ராசிக்காரர்களே எட்டாவது வீட்டில் மறைந்துள்ள குருவோடு சுக்கிரனும் மறைகிறார். முன்னாள் காதல் மீண்டும் துளிர்விடும். உங்களைப் பற்றி பலரும் பலவிதமாக பேசினாலும் கண்டு கொள்ள வேண்டாம். அரசியல் ஆசையை சில காலம் தள்ளிப் போடுவது நல்லது.