குடும்பத்தில் எல்லோருக்கும் ஏழரையா? - பயப்படாதீங்க, பரிகாரம் இருக்கு! #சனிப்பெயர்ச்சி
ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி, குழந்தைகள் இருந்தால் அனைவருக்குமே ஏழரை நாட்டு சனி பிடித்தால் அதற்கான பரிகாரம் திருச்செந்தூர் முருகனை சரணடைவதே.
சென்னை: ஒரு குடும்பத்தில் இரண்டு அல்லது 3 பேருக்கு ஏழரை சனி பிடித்தால் அவர்களுக்கு நல்ல பரிகாரம் உள்ளது. திருச்செந்தூர் முருகனை சரணடைவது பாதிப்பை தடுக்கும்.
நல்லவர்களுக்கு சோதனையை கொடுத்தாலும் இறுதியில் நன்மையே செய்வார் சனிபகவான். சனிபகவான் நீதி தேவர், நியாயவான் என்று கூறியிருக்கிறோம். இவரிடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி பிடித்தே தீரும்.
ஜாதகரின் ஜன்ம ராசிக்கு பன்னிரெண்டாவது ராசி, ஜன்ம ராசி, ஜன்மராசிக்கு இரண்டாவது ராசி ஆகிய ராசிகளில் சனி சஞ்சரிக்கும் பொழுது ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் என்ற கணக்கில் ஏழரை சனி என்று அழைக்கப்படுகிறது.
ஏழரை சனி என்ன செய்யும்
இந்த சனி பெயர்ச்சியால் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பாதசனி. தனுசு ராசிக்காரர்களுக்கு ஜென்மசனி. மகரம் ராசிக்காரர்களுக்கு விரயச்சனியாக தொடங்குகிறது. குழந்தைகளுக்கு ஏழரை சனி நடக்கும்போது தாய்க்கு உடல்நலம் பாதிப்பு, குழந்தை படும் சிரமத்தால் மனக்கவலை, தந்தைக்கு அதிக செலவுகள், குழந்தையால் உண்டாகும் செலவாகவும் இருக்கலாம்.
திருமணத்தில் பொருத்தம்
கணவன்-மனைவி இருவரும் ஒரே ராசியாக இருக்கக் கூடாது, நட்சத்திரமாக இருக்கக் கூடாது என்பதால்தான் திருமணத்திற்கு முன்னரே பொருத்தம் பார்த்து மணமுடிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.
காதல் திருமணம் செய்பவர்கள் அதிலும், அந்த தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தையும் அதே ராசியில் பிறந்து விட்டால், ஒரே குடும்பத்தில் 3 பேர் ராசிக்காரர்களாக அமைந்து விடுகின்றனர்.
ஒரே குடும்பத்தில் சனி பாதிப்பு
ஒரு வீட்டில் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டம சனி ஒரே நேரத்தில் பாதிப்பு ஏற்படும். அதேபோல விருச்சிகம், தனுசு, மகரம் என அடுத்தடுத்த ராசிக்காரர்களாக ஒரே வீட்டில் இருந்தாலும் இப்போது ஏழரை சனி காலமாகும். இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவர். அதனால் திடீர் விபத்துகள், இழப்புகள் ஏற்படும்.
திருச்செந்தூர் முருகன்
ஒரே குடும்பத்தில் 3 பேரும் ஒரே ராசிக்காரர்களாக இருக்கும் பட்சத்தில் ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவதே சிறந்த பரிகாரம். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் போது அனைவரும் ஒரே வாகனத்தில் பயணம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
வெளியூர், வெளிநாடு பயணம்
ஒரு வீட்டில் இரண்டிற்கும் மேற்பட்டவர்களுக்கு ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடந்தால் குடும்பத்தில் இருந்து ஒருவர் தற்காலிகமாக பிரிந்து இருப்பது நல்லது. மகன், மகளை படிப்பிற்காக விடுதியில் சேர்க்கலாம். கணவன் அல்லது மனைவி பணியிட மாற்றம் செய்து கொள்ளலாம். இதனால் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
அனுமனை சரணடைவதும் குடும்பத்தில் சந்தோசத்தை அதிகரிக்கும்.