விருச்சிகம், தனுசு, மகரம் - ஏழரை சனியை கஷ்டமின்றி கடக்க பரிகாரம் இருக்கு!
விருச்சிகம், தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு இது ஏழரை சனி காலகட்டமாகும்.
Recommended Video
சென்னை: சனிபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசியில் அமர்கிறார். இரண்டரை ஆண்டுகாலம் அந்த ராசியில் அமர்ந்து நன்மை தீமைகள் கலந்த பலனை தருகிறார். ஏழரை சனி என்று பார்த்தால் விருச்சிக ராசிக்கு பாதச்சனி, தனுசு ராசிக்கு ஜென்மசனி, மகர ராசிக்கு விரைய சனி காலமாகும்.
ஜாதகரின் ஜன்ம ராசிக்கு பன்னிரெண்டாவது ராசி, ஜன்ம ராசி, ஜன்மராசிக்கு இரண்டாவது ராசி ஆகிய ராசிகளில் சனி சஞ்சரிக்கும் பொழுது ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் என்ற கணக்கில் ஏழரை சனி என்று அழைக்கப்படுகிறது.
கிரகங்களில் சனிக்கு மட்டும் சனைச்சரன் என்று பட்டம் அளித்ததிலிருந்து சனியின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம். சனி பிற கிரகங்களை விட மிகவும் மெதுவாக நகர்கிறது. வான் மண்டலம் பன்னிரெண்டு ராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியிலும் சுமார் இரண்டரை ஆண்டு காலம் சனி சஞ்சாரம் செய்கிறார்.
ஏழரை சனி காலம்
கோச்சாரத்தில் ஜாதகரின் ராசிக்கு மூன்று,ஏழு,பதினொன்று ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல பலன்களை தருவார். ராசிக்கு 12-ஆம் இடத்தில் சனி வரும்போது ஏழரைச் சனியின் முதல் கட்டம் ஆரம்பமாகின்றது. அங்கு இரண்டரை வருடம் சஞ்சரிக்கும் சனியை 'விரயச் சனி' எனவும். அடுத்து ஜென்ம ராசியில் இரண்டரை வருடம் 2ஆம் கட்டமாக சஞ்சரிக்கும் சனியை 'ஜென்மச் சனி' என அழைப்பர். அதன் பின் ஜென்ம ராசிக்கு 2ஆமிடத்தில் சனி சஞ்சரிக்கும் இரண்டரை வருட மூன்றாம் கட்டச் சனியை 'பாதச் சனி' என்றும் அழைக்கிறார்கள். இப்படி மூன்று கட்டமாக வரும் சனியின் மொத்த காலம்தான் ஏழரைச் சனியின் காலம் எனப்படும்.
அர்த்தாஷ்டம சனி
ஜன்ம ராசிக்கு ஏழாவது ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது கண்டக சனி என்று அழைக்கப்படுகிறது. ஜன்ம ராசிக்கு எட்டாவது ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது அஷ்டம சனி என்று அழைக்கப்படுகிறது. ஜன்ம ராசிக்கு நான்காவது ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது அர்த்தாஷ்டம சனி என்று அழைக்கப்படுகிறது. மேற்கண்ட ராசிகளை தவிர்த்து ஐந்து, ஒன்பது,பத்து ஆகிய ராசிகளில் பொதுவாக சனி நல்ல பலன்களையே தருவார் என்பது நம்பிக்கை.
சனியால் கஷ்டம்
மேற்கண்டவாறு கணக்கிட்டு பார்க்கும் பொழுது ஜன்ம சனி, கண்டக சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி என நான்கு இடங்களில் பத்து வருடங்கள் வீதம் மூன்று சுற்றுகளில் மொத்தம் முப்பது வருடங்கள் சனியால் கஷ்டம் ஏற்படுகிறது.
இதனால் தான் முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை என்ற பழமொழி பழக்கத்தில் உள்ளது.
ஏழரை சனி
ஒருவரது வாழ்நாளில் நான்கு முறை தனது தாக்கத்தை கொடுக்கும் என்பது நூல்களின் கருத்து. முதல் சுற்று மங்கு சனி எனப்படும். 30 வயதிற்குள் வரும் இந்த ஏழரை சனி காலமாகும். இநத காலகட்டத்தில் அரசால் கஷ்டம் உண்டாகும், பல சோதனைகள் ஏற்படும், படிப்பு தடைபடும், உடல் நலம் கெடும் தீய பலன்களே அதிகம் நடை பெறும்.
மகிழ்ச்சி பொங்கும்
இரண்டாவது சுற்று பொங்கு சனி எனப்படும். 30 வயதில் இருந்து 60 வயதுக்குள் இந்த ஏழரை சனி காலமாகும். இந்த காலகட்டத்தில் திருமணம், வேலைகிடைத்தல், குழந்தை பாக்கியம் கிடைத்தல், வீடு கட்டுதல் போன்ற மங்கள காரியங்கள் நடைபெறும். இதன் இறுதி காலகட்டத்தில் தாய் தந்தைக்கு மரணம் நேரிடலாம்.
மரண சனி
மூன்றாவது சுற்று குங்கு சனி எனப்படும்.60 வயது முதல் 90 வயதிற்குள் இந்த ஏழரைசனியின் பாதிப்பு ஏற்படும். இந்த காலகட்டத்தில் எப்பொழுதும் மன சஞ்சலம், கவலை, துக்கம், துயரம் மிகுந்திருக்கும். ஜாதகப்படி ஆயுள் முடியுமானால் மரணம் உண்டாகலாம். மரண சனி நாங்காவது சுற்று மரண சனி எனப்படும். இந்த காலகட்டத்தில் சுய நினைவு இழத்தல், தன்னிலை இழத்தல், மரணம் உண்டாகுதல் ஆகியவை நடைபெறும்.
சனியின் பாதிப்பு
துலாம் சனிக்கு உச்ச ராசியாகும். அதனால் பாதிப்பு அதிகம் தரமாட்டார் என்றாலும் ஜென்மத்தில் பகை வீட்டிலோ... கோளாறான இடத்திலோ இருந்தால் தன்னை மறந்து ஒரு பிடிபிடித்து விடுவார். ஒருவருடைய ஜாதகத்தில் சனி உச்சம் பெற்றிருந்தால் ஏழரை சனி பாதிப்பு குறையும்.
நன்மை செய்யும் சனிபகவான்
ஒருவரது ஜாதகத்தில் சனி மகரம் அல்லது கும்பத்தில் ஆட்சி பெற்றாலும், ஏழரை சனி கெடுதல் செய்யாது. ஜனன காலத்தில் ஜன்ம லக்னத்திற்கு 3, 6, 10, 11-ல் சனி அமர்ந்தாலும் ஏழரை சனி கெடுதல் குறையும். மகரம் அல்லது கும்ப லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு சனியும் லக்னத்தில் இருந்தால் ஏழரை சனியும் கெடுதல் குறையும், தவிர அவருக்கு சுகமான வாழ்வு கிட்டும். சனி உச்சம் பெற்று துலா ராசியில் இருந்தால் அது கேந்திரம் அல்லது
திரிகோணம் என்று இருந்தால் அவருக்கு கெடுதல் குறையும்.
பரிகாரம்
ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டகச்சனி - சனி மகா தசை நடப்பவர்கள் சனிக்கிழமை சனிபகவானுக்கு எள் தீபம் போடலாம். விநாயகர்,ஆஞ்சநேயரை வணங்கலாம். திருநள்ளாறு, குச்சனூர், திருக்கொள்ளிக்காடு உள்ளிட்ட ஆலயங்களில் சனிபகவானை வணங்கி கெடு பலன்களில் இருந்து தப்பிக்கலாம்.