ஷாக்கடிக்குது சோனா... எந்த ராசிக்காரங்களுக்கு எல்லாம் இப்ப கரண்ட் ஷாக் அடிக்கும் தெரியுமா
இடி தாக்கி பாதிப்பு, கரண்டு ஷாக் அடித்தது ஏசியின் மின் கசிவு தீ விபத்து என்ற செய்தியை சமீபகாலமாக அதிகம் படித்திருப்போம். மிதுன ராசியில் செவ்வாய் ராகு சேர்க்கை அதன் பலனை காட்ட ஆரம்பித்துள்ளது.
சென்னை: ஒரு சிலர் கரண்ட் பாக்ஸில் கை வைத்தாலே எந்த பாதிப்பும் ஏற்படாது கரண்ட் கட் ஆகிவிடும். ஆனால் ஒரு சிலர் சாதாரணமாக சுவிட்ச் பாக்ஸில் கை வைக்கும் போது ஷாக்கடித்து தூக்கியடிக்கும், சிலருக்கு கையே கட் ஆகிவிடும். இதற்கு காரணம் நேரம்தான் கிரகங்களின் சேர்க்கை, தசாபுத்திதான். எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் இப்போ கரண்ட் ஷாக் அடிக்கும். மின்சாதனங்களினால் யாருக்கு ஆபத்து வரும் என்று பார்க்கலாம்.
மிதுன ராசியில் தற்போது செவ்வாயும், ராகுவும் சேர்ந்து இருக்கும் இந்த தருணத்தில் பல இடங்களில் மின்கசிவினால் தீ விபத்தும் உயிரிழப்பும் ஏற்படுகிறது. யாருடைய ஜாதகத்தில் செவ்வாயும் ராகுவும் இணைந்து இருக்கிறார்களோ அந்த கிரகங்களின் தசாபுத்தி நடைபெறும் போது மின் சாதனங்களினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதே போல கோச்சார ரீதியாக சனிபகவான் நான்கு, எட்டு, பனிரெண்டாம் இடங்களில் சஞ்சரிக்கும் போது மின்சாரங்களினால் ஆபத்து, ஏசியில் மின்கசிவினால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
செவ்வாயின் காரகம்
நம் உடலில் ரத்தத்திற்கும், வெப்பத்திற்கும் காரணமாகவும், காரகமாகவும் இருப்பவர் செவ்வாய். மின் சாதனங்கள், செங்கல் சூளை, நெருப்பு போன்றவை செவ்வாய் ஆட்சிக்கு உட்பட்டவை. இவரின் தசையோ, இவர் சம்பந்தப்படும் வேறு கிரக தசையோ நடக்கும்போது ரத்த சோகை, தோல் நோய், கட்டிகள், கொப்பளம், தீக்காயம், மின்சாதனங்களினால் விபத்து, வெட்டுக்காயம், விபத்தினால் ரத்த சேதம், மயக்கம், சோர்வு, அசதி ஏற்படும்.
நோய்கள் பாதிப்பு
ஜாதகத்தில் பலமற்ற ஆதிபத்யம் பெற்று தசை நடத்தினால் அடிக்கடி கீழே விழுந்து அடிபடும். வாகனங்களில் செல்லும் போது விபத்துகளை சந்திக்க நேரிடும். ரத்தக்காயங்கள், வெட்டுக்காயங்கள், ரத்த சம்பந்தமான நோய், தலையில் அடிபடுதல் போன்றவற்றை ஏற்படுத்துவார்
விபத்தினால் பாதிப்பு
ஜாதகத்தில் எட்டாம் வீட்டில் செவ்வாய் உடன் ராகுஅமையப் பெற்றால் இருதய கோளாறு கண்களில் பாதிப்பு, எலும்புருக்கி நோய், உஷ்ண நோய்கள் உண்டாகும். ராகு செவ்வாய் சேர்க்கை பலமிழந்திருந்தால் கடன் தொல்லை, விபத்து, தாழ்வு மனப்பான்மை, தற்கொலை மனப்பான்மை ஏற்படும்.
ஏசியில் மின்கசிவு
ஒருவரின் ஜாதகத்தில் பலமற்ற நிலையில் செவ்வாய் உடன் ராகு சேர்க்கை பெற்று அமர்ந்திருந்தால் செவ்வாய் திசை ராகு புத்தி காலத்தில் மின்சாதனங்களினால் விபத்து ஏற்படலாம். அதே போல ராகு திசை, செவ்வாய் புத்தி காலத்தில் மின்சாதனங்களினால் விபத்து ஏற்படும். ஏசியில் மின் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படும்.
ஷாக் அடிக்கிற விசயம்
விருச்சிக ராசியில் எந்த கிரகம் அமர்ந்திருக்கிறதோ அந்த கிரகத்தின் தசா புத்தி நடக்கும் போது கரண்ட் விசயத்தில கவனம் தேவை. ஏனென்றால் கரண்டுலதான் உங்களுக்கு கண்டம் இருக்கும். அதேபோல லக்னத்திற்கு 8ல் செவ்வாய் அமையப்பெற்றவர்களுக்கு மின் சாதனங்களினால் விபத்து ஏற்படும்.
ராகுவினால் ஷாக்
கும்ப ராசியில் ராகு அமையப்பெற்றவர்களுக்கும், சனி ராகு சேர்க்கை பெற்றவர்களுக்கும், ஏழரை சனி காலம், சனி திசை, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி, விரைய சனி காலங்களில் மின் சாதனங்களை கையாளும் போது கவனம் தேவை.
இந்த ராசிக்காரங்க கவனம்
கோச்சார ரீதியாக இப்போது சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷபத்திற்கு அஷ்டமத்து சனி நடக்கிறது. கன்னி ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனியும் மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் விரைய சனியும் நடக்கிறது. எனவே இந்த மூன்று ராசிக்காரர்களும் கவனமாக இருக்கவும். ஏசி மிசின்களை பழுது பார்த்து பத்திரமாக பயன்படுத்துங்கள்.
பரிகாரம் என்ன தெரியுமா?
ஜாதகத்தில் செவ்வாய் ராகு சேர்க்கை பெற்றவர்கள், செவ்வாய் தசை ராகு புத்தி நடப்பவர்கள், ராகு திசை செவ்வாய் புத்தி நடப்பவர்கள் செவ்வாய் கிழமையன்று ராகு காலத்தில் துர்க்கையை வழிபட வேண்டும். தேய்பிறை அஷ்டமி நாட்களில் கால பைரவரை செவ்வரளி மாலை சூட்டி விளக்கேற்றி வழிபட வேண்டும். இது ஒரு எச்சரிக்கை பதிவுதான் மூன்று ராசிக்காரர்கள் தவிர நமக்கு நல்லாத்தானே இருக்கு ஷாக்கடிக்குதா பார்க்கலாமே என்று ஆர்வத்தில் கரண்டு பெட்டியில யாரும் கை வைக்க வேண்டாம். அப்புறம் ஷாக் அடித்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல மக்களே. கரண்டுல எப்பவுமே கவனமா இருங்க.