பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா- லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் தவறி விழுந்த பெண்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயிலில், பங்குனி மாத குண்டத் திருவிழா 15 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் பொதுமக்களும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் குண்டம் இறங்கி வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.
இந்த ஆண்டு திருவிழா கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. தினசரியும் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. குண்டத்துக்கு தேவையான மரங்கள் குறிப்பிட்ட அளவு காடுகளில் வெட்டப்படுவது வழக்கம். இந்த சடங்கிற்கு கரும்பு வெட்டுதல் என்று பெயர்.
முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் இன்று நடைபெற்றது. இதற்காக 11 அடி நீளம் 5 அடி அகலத்தில் குண்டம் அமைக்கப்பட்டது. அம்மன் ஊர்வலத்திற்கு பின் குண்டத்தை சுற்றி சூடம் ஏற்றி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. முதலில் பூசாரி பூக்குளி இறங்கினார். அடுத்ததாக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறுவர், சிறுமியர், இளைஞர்கள், இளம்பெண்கள், பெரியவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் பக்தியுடன் தீக்குண்டத்தில் இறங்கினர்.
காவல்துறையினர், ஊர்க்காவல்படையினர், தீயணைப்பு படையினர், சிறப்பு இலக்கு படையினரும் குண்டம் இறங்கினர். அதிகாலை 3.55 மணி அளவில் தொடங்கிய குண்டம் இறங்குதல் நிகழ்வு மாலை வரை நடைபெற்றது. இந்த குண்டத்தில் பருத்தி, மிளகாய், தானியங்கள், சூரைத்தேங்காய்களை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த திருவிழாவில் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டம் இறங்கும் போது 3 பெண்கள் நெருப்பு குண்டத்தில் தவறி விழுந்தனர். அவர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டு, 108 வாகனம் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கால்நடைகளும் இந்த கோவிலில் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவது சிறப்பு அம்சமாகும். நாளைய தினம் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வரும் நிகழ்ச்சியும், 21ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 22ஆம் தேதி திருவிளக்கு பூஜையும், தங்க தேர் இழுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 25ஆம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.