ஏர்வாடி சந்தனக் கூடு சமூக நல்லிணக்க திருவிழா - தென் மாநில மக்கள் ஏராளமானோர் பங்கேற்பு
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி குத்புல் அக்தாப் செய்ய து இபுராஹீம் பாதுஷா நாயகம் 844 ம் ஆண்டு சந்தனக் கூடு சமூக நல்லிணக்க திருவிழா கோலாகலமாக நடந்தது.
ராமநாதபுரம்: ஏர்வாடி குத்புல் அக்தாப் செய்ய து இபுராஹீம் பாதுஷா நாயகம் 844 ம் ஆண்டு சந்தனக் கூடு சமூக நல்லிணக்க திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. தென்மாநிலங்களைச் சேர்ந்த பல சமுதாய மக்களும் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏர்வாடி தர்கா புண்ணிய தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இத்தலத்திற்கு நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமானோர் வந்து தங்கி சிறப்பு வழிபாட்டினை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வேண்டினால் பூரண குணமடைந்து செல்வார்கள் என்பதை ஐதீகமாக கொண்டுள்ளனர். இத்தலத்தின் சந்தனக் கூடு திருவிழா மிகவும் பிரபலமானது.
பாதுஷா நாயகத்தின் 844ம் ஆண்டு சந்தனக் கூடு திருவிழா ஜூலை 14ஆம் தேதி மவ்லீது ஷரீப்புடன் ஆரம்பமானது. மவ்லீது ஷரீப் தொடர்ந்து 23 நாட்கள் நடைபெறுகிறது. ஆகஸ்டு 5ஆம் தேதி நேற்று மாலை சந்தனக் கூடு துவங்கி இன்று அதிகாலை சந்தனக் கூடு ஊர்வலம் வந்து புனித சந்தனம் பூசும் நிகழ்வு நடைபெற்றது.
ஆகஸ்டு 12ஆம் தேதி காலை 8 மணிக்கு குரான் தமாம் செய்து சிறப்பு துவா நடக்கிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு கொடி நிறைவு நிகழ்வு நடக்க உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஹக்தர் பொது மகாசபை நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
சந்தனக்கூடு நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் கேரளா முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்களும் திரளாக பங்கேற்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலத்தில் இருந்தும் ஏராளமான இந்து சமுதாய மக்களும் கலந்துகொண்டனர். மக்கள் வசதிக்காக ராமநாத புரம், ராமேஸ்வரம், பரமக்குடி, கீழக்கரையில் இருந்து சிறப்புப் பேருந்துகளும் ஏர்வாடிக்கு இயக்கப்பட்டன.