தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை!... உங்க அப்பா பாசமான அப்பாவா?
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: ஜாதகத்தில் சூரியன் சந்திரனோடு சேர்க்கை பெற்று நின்றால் தந்தை ஜாதகரின் மேல் மிகுந்த பாசத்துடன் விளங்குவார். ஜாதகரின் தேவையை முன்கூட்டியயே அறிந்து அதனை பூர்த்தி செய்வார்.
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே..
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே..'
நெஞ்சை உருக்கும் பாடல்வரிகளை கேட்கும் போதெல்லாம், அப்பாவின் நினைவுகள் அனைவரது மனதிலும் நிழலாடுவதை உணர முடிகிறது.தாயின் கருவறையில் உதித்தாலும், பூமியின் ஸ்பரிசத்தை உணர்ந்த நாள்முதல், நம்மை நெஞ்சில் சுமக்கும் தந்தையின் அன்பை எவ்வளவு வர்ணித்தாலும் தகும் வயிறோடு விளையாடும் கருவுடன், மனதோடு உறவாடி மகிழ்வாள் அன்னை. தொப்புள்கொடி பந்தம் பிரிக்க முடியாது தான்.
ஆனால் தந்தையின் பாசம் வாழ்வோடு கலந்தது. மனைவியின் வயிற்றில் காதை வைத்து, நிறமறியா, முகமறியா பிள்ளையுடன், காதோடு பேசி மகிழும் தந்தையின் பாசம்... தரணியெல்லாம் பேசும்.
மழலையின் சிரிப்பில் மனதை தொலைத்து... வாழ்க்கையை பிள்ளைக்காக அர்ப்பணிக்கும் நேசம்... எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும், தலைகுனிந்து, உடல்குனிந்து பிள்ளையை முதுகில் உப்புமூட்டையாக ஏற்றியும், தலைக்கு மேல் தூக்கியும் கூத்தாடும் பரவசம்...
தந்தையன்றி வேறு யாருக்கு வரும்? "விடு... விடு...' என்று வாழ்க்கை முழுதும் விட்டுக் கொடுக்கும் அந்த பெரிய உள்ளம்... இறைவன் நமக்களித்த இயற்கை வெள்ளம். ஓய்வறியா கால்கள் ஊன்றுகோலைத் தேட... நரை தோன்றி முகச்சுருக்கம் முற்றுகையிட... பிள்ளையின் அன்பே தஞ்சமென தேடும் அப்பாவி(ன்) நெஞ்சம்...
வாழ்க்கையின் இக்கட்டான சூழலிலும், தந்தையின் வாயிலிருந்து, 'நான் இருக்கேன் டா! எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்' என, உதிக்கும் வார்த்தையில் கிடைக்கும் தைரியம், வேறு எந்த சொல்லிலும் கிடைக்காது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
ஜோதிட ரீதியாக தந்தை-மகன் உறவு:
1. ஜோதிடத்தில் தந்தையை குறிக்கும் கிரகம் சூரியன். தந்தையை குறிக்கும் பாவம் ஒன்பதாம் பாவம் எனப்படும் பித்ரு ஸ்தானம் ஆகும். ஒரு தந்தைக்கு விட்டு கொடுக்கும் மனப்பாங்கு, அரவனைத்து செல்வது, ஆளுமை திறன் போன்றவை சூரியனிடமிருந்தே ஏற்படுகிறது. ஒரு ஜாதகத்தில் தந்தையை குறிக்கும் சூரியனின் நிலையை வைத்து அவரின் தந்தை மீது வைத்திருக்கும் பற்று, தந்தையின் நிலை ஆகியவற்றை அறியமுடியும்.
2. சூரியனை ஆத்மகாரகன் என ஜோதிட சாஸ்திரம் சிறப்பாககூறுகிறது. ஒரு தாயின் வயிற்றில் ஒரு ஆத்மா உருவாக காரணம் தந்தையாவார். ஒரு குழந்தை சுமந்தால் தான் தாய் எனும் ஸ்தானத்தை ஒரு பெண் பெறுகிறாள். எனவே தந்தையை குறிக்கும் சூரியனை ஆத்மகாரகன் என்பது மிகவும் சரியானதாகும்
3. ஆணோ! பெண்ணோ! அவர்களின் முதல் ஹீரோ அவர்களின் தந்தையாவார். ஒரு குழந்தைக்கு இந்த உலகத்தை அறிமுகம் செய்து வைப்பவர் தந்தையாவார். இருட்டிலிருந்து வெளிச்சத்தினை அளித்து உலகத்தை நமக்கு காண்பிப்பவர் சூரிய பகவானாவார்.
ஜாதகப்படி தந்தை-மகன் உறவு:
1. ஒருவர் ஜாதகத்தில் எந்த ராசி லக்னமானாலும் பித்ரு காரகன் சூரியன் 6/8/12 மற்றும் பாதக சம்மந்தம் பெறாமல் ஆட்சி உச்சம் மற்றும் நட்பு வீடுகளில் நின்று விட்டால் ஜாதகரின் தந்தை செல்வாக்கு, அதிகாரம் மற்றும் அந்தஸ்து மிகுந்தவராகவும் ஜாதகரின் மேல் அளவு கடந்த பாசமுடையவராக இருப்பார்.
2. ஒருவர் ஜாதகத்தில் சூரியன் சந்திரனோடு சேர்க்கை பெற்று நின்றால் ஜாதகரின் தந்தை மிகுந்த. செல்வாக்குடன் வசதியாக இருப்பார். மேலும் ஜாதகரின் மேல் மிகுந்த பாசத்துடன் விளங்குவார். ஜாதகரின் தேவையை முன்கூட்டியயே அறிந்து அதனை பூர்த்தி செய்வார்.
3. ஒருவர் ஜாதகத்தில் சூரியன் செவ்வாயுடன் சேர்க்கை பெற்று நின்றால் தந்தை மிகுந்த அதிகாரம் மிக்கவராகும் அரசியல் அரசாங்க செல்வாக்கு மிகுந்தவராக இருப்பார். முன்கோபியாகவும் விளங்குவார். தந்தை பாசத்தை நீரு பூத்த நெருப்பாக வைத்திருந்தாலும் கோபம்தான் முதலில் வெளிவரும்.
4. ஒருவர் ஜாதகத்தில் சூரியன் புதனோடு சேர்க்கை பெற்று நின்றால் தந்தையும் மகனும் மிகுந்த அறிவாளிகளாக திகழ்வர் என்றாலும் தந்தை எல்லாவிஷயங்களுக்கும் கணக்கு பார்க்கும் குணம் கொண்டிருப்பார்.
5. ஒருவர் ஜாதகத்தில சூரியன் குருவுடன் சேர்க்கை பெற்று நின்றால் ஜாதகரின் தந்தை உயர்ந்த குலத்தில் பிறந்து ஆசார அனுஷ்டானங்களை பின்பற்றுபவராக இருப்பார். ஜாதகரும் ஆன்மீக நாட்டம் கொண்டவராக இருப்பார். ஆனால் பாசத்தின் மிகுதியால் கூடவே வந்திடுவார்.
6. ஒருவர் ஜாதகததில் சூரியனுடன் சுக்கிரன் சேர்க்கை பெற்று நின்றால் அவரது தந்தை மிகவும் "ஜாலியான" மனிதராவார். எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் கடன் வாங்கியாவது பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவார்.
7. சூரியனும் சனைஸ்வர பகவானும் தந்தை-மகன் உறவென்றாளும் இருவரும் பரம விரோதிகளாவர். எனவே சூரியனும் சனியும் சேர்க்கை எந்தவிதத்தில் அமைந்தாலும் தந்தை-மகன் இருவரும் எப்பொழுதும் சண்டை போட்டுக்கொண்டு விரோதத்தோடுதான் இருப்பார்கள். ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் செய்யவேண்டிய கடமைகளை விட்டுகொடுக்காமல் செய்வார்கள்.
8. சூரியனோடு ராகு/கேது சேர்க்கை பெற்றால் மகன் குலவழக்கத்திற்கு புறம்பான விஷயங்களை செய்ய நேரும். அதனால் தந்தைக்கும் மகனுக்கும் ஒரு சுமுகான உறவு இருக்காது.
சூரியனால் ஏற்படும் தோஷங்கள் விலகவும் தந்தையால் அனுகூலம் ஏற்படவும் வணங்கவேண்டிய கோயில்கள்:
1. தஞ்சைக்கு அருகிலுள்ள ஆடுதுறை சூரியனார் கோயிலுக்கு சென்று வணங்கிவர சூரியனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்
2. சென்னை வியாசர்பாடி இரவீஸ்வரர் ஆலயம் சூரிய ஸ்தலமாகும். ரவி என்றால் சூரியன் என்று பொருள். இங்கு ஞாயிற்றுகிழமைகளில் சூரிய ஹோரையில் வணங்கிவர சூரியனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
3.சூரியனின் அதிதேவதை சிவன் என்பதால் அனைத்து சிவாலயங்களுக்கும் சென்று வழிபடுவது சூரியனால் ஏற்படும் தோஷங்களை போக்கி நன்மையளிக்கும்.