தந்தையர் தினம்: அப்பா மேல எவ்ளோ லவ்? ஜாதகத்தில் சூரியன் எங்க இருக்கார்?
நவக்கிரகங்களின் நாயகன் என்றழைக்கப்படுபவர் சூரியன். சூரியனை ஆத்மகாரகன், தந்தை காரகன் என்று சொல்கிறார்கள். ஒரு ஜாதகனுடைய ஆத்ம பலத்தை சூரியனைக் கொண்டு அறியலாம்.
சென்னை: தந்தையர்க்கு மரியாதையும், நன்றியும் செலுத்தும் விதமாக தந்தையர் தினம் ஆண்டுதோறும் ஜூன் 3வது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அப்பாவிற்கும் உங்களுக்குமான உறவு எப்படி என்று தந்தையர் தினமான இன்று தந்தை காரகனான சூரியன் பற்றி அறிந்து கொள்வோம்.
ஒவ்வொருவருக்கும் முதல் ஹீரோ தந்தைதான். தந்தை காரகன் சூரியன் நவ கிரகங்களின் ஹீரோ, தலைவன். ஜாதகத்தில் சூரியன் இருக்கும் நிலையைக் கொண்டுதான் ஒருவரின் அரசியல் வாழ்க்கை, அரசாங்க உத்தியோகம், தலைமைப்பதவி, தந்தை, தந்தை வழி யோகம், தந்தை வழி உறவினர், தலை, தலையில் ஏற்படும் பாதிப்பு, தலைவலி, தலையில் ஏற்படும் காயம் போன்றவற்றையும் அறியலாம்.
நவ கிரகங்களில் தினமும் நமக்கு தரிசனம் கொடுக்கும் கிரகம். ஒளியை தந்து உயிர்களை வாழவைத்து இந்த உலகையே வாழவைத்துக் கொண்டிருக்கும் முதன்மை கிரகம். சூரியன் உச்சத்தில் இருக்கும் சித்திரை மாதம், ஆட்சியில் இருக்கும் ஆவணி மாதம் பிறந்தவர்கள் யோகம் உடையவர்கள்.
சூரியன் அருள்
அதிகாரம், ஆட்சி, ஆளுமை போன்றவற்றுக்கு அதிகாரம் உள்ளவர் இவர். சூரியன் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள், தலைமை செயலாளர்கள், மிகப்பெரிய அதிகார பதவிகள் ஆகியவற்றில் ஒருவர் அமர்வதற்கு சூரியனின் அனுக்கிரகம் அவசியம். இவை மட்டுமல்லாமல், ஒரு நிகழ்ச்சிக்கோ, 10 பேர் கொண்ட குழுவுக்கோ தலைமை வகிக்க வேண்டும் என்றாலும் சூரியனின் அருள் தேவை.
தலைமை பதவி
தலைமை பீடம் என்பது சூரிய பலத்தினால்தான் கிடைக்கும். எந்த லக்னம், ராசியில் பிறந்தவர்களுக்கு சூரியன் எந்த வகையான யோகங்களை கொடுப்பார் என பார்க்கலாம். மேஷ லக்னம் அல்லது ராசியில் பிறந்தவர்களுக்கு சூரியன் பெரிய பதவியை கொடுப்பார். ரிஷப லக்னம் மற்றும் ராசியில் பிறந்தவர்களுக்கு மாபெரும் யோகம் கிடைக்கும். கடக லக்னம் அல்லது ராசியிடல பிறந்தவர்களுக்க பேச்சாற்றலால் யோகம் வரும். சிம்ம லக்னம் அல்லது சிம்மாராசியில் பிறந்தவர்களுக்கு அதிகார ஆளுமை கிடைக்கும். விருச்சிக லக்னம் அல்லது ராசியில் பிறந்தவர்களுக்கு தலைமைப் பதவியை தருவார் சூரியன். தனுசு லக்னம் அல்லது ராசியில் பிறந்தவர்களுக்கு நல் பாக்ய யோகம் தருவார் சூரியன். மற்ற லக்னம் அல்லது ராசிகளில் பிறந்தவர்களுக்கு சூரியன் இருக்கும் பலத்தின் மூலம் பட்டம், பதவி, அதிகாரம் கிடைக்கும்.
நோய்களுக்குக் காரணம்
மனிதனுக்கு தேக புஷ்டி என்னும் பலத்தையும், சக்தியையும், ஆற்றலையும் தருவது சூரியன். பலம் குறைந்து காற்று போன்ற உடலை தருவதும் சூரியனே. தன்னம்பிக்கை குறைந்து சோர்வான உடலைத் தருவது, எந்த நேரமும் அலைந்து திரிந்தபடி உடலை வருத்திக் கொள்வது, வலுவான எலும்புகள் இல்லாமல் இருப்பது, இருதயம் தொடர்பான அறுவை சிகிச்சைகள், கண் பார்வைக் கோளாறு, தலைவலி, தலைசுற்றல், சிறுசிறு பிரச்சினைகளுக்கு கடும் கோபம் கொள்ளுதல் உள்ளிட்ட நோய்களுக்கு சூரியனே காரணமாக இருக்கிறார்.
தந்தை காரகன் சூரியன்
ஜோதிடத்தில் தந்தையை குறிக்கும் கிரகம் சூரியன். தந்தையை குறிக்கும் பாவம் ஒன்பதாம் பாவம் எனப்படும் பித்ரு ஸ்தானம் ஆகும். ஒரு ஜாதகத்தில் தந்தையை குறிக்கும் சூரியனின் நிலையை வைத்து அவரின் தந்தை மீது வைத்திருக்கும் பற்று, தந்தையின் நிலை ஆகியவற்றை அறியமுடியும். ஒருவர் ஜாதகத்தில் சூரியன் புதனோடு சேர்க்கை பெற்று நின்றால் தந்தையும் மகனும் மிகுந்த அறிவாளிகளாக திகழ்வர் என்றாலும் தந்தை எல்லாவிஷயங்களுக்கும் கணக்கு பார்க்கும் குணம் கொண்டிருப்பார்.
தந்தைக்கு பாதிப்பு
சூரியனே லக்னத்திற்கு பாதகாதிபதியாகவும் பாவியாகவும் இருந்தால், தந்தைக்கு உதவாத ஜாதகராக அவர் இருப்பார். பித்ரு காரகன் சூரியன் 6/8/12 மற்றும் பாதக சம்மந்தம் பெறாமல் ஆட்சி உச்சம் மற்றும் நட்பு வீடுகளில் நின்று விட்டால் ஜாதகரின் தந்தை செல்வாக்கு, அதிகாரம் மற்றும் அந்தஸ்து மிகுந்தவராகவும் ஜாதகரின் மேல் அளவு கடந்த பாசமுடையவராக இருப்பார். சூரியன் தனது பகை கிரகங்களான சுக்ரன், சனி, ராகு, கேது ஆகியோரோடு இணைந்து எந்த ராசியில் இருந்தாலும் தந்தை சுயநலமாக இருப்பார். தந்தையின் மரணத்திற்கு ஜாதகர் ஒரு வகையில் காரணமாக இருப்பார்.
அரசாங்க வேலை
ஒருவர் ஜாதகத்தில் சூரியன் குருவுடன் சேர்க்கை பெற்று நின்றிருந்தால் ஜாதகரின் தந்தை உயர்ந்த குலத்தில் பிறந்து ஆசார அனுஷ்டானங்களை பின்பற்றுவார். சூரியனும் சனியும் சேர்க்கை எந்த விதத்தில் அமைந்தாலும் தந்தை-மகன் இருவரும் எப்பொழுதும் சண்டை போட்டுக்கொண்டு விரோதத்தோடுதான் இருப்பார்கள். அதே நேரத்தில் சூரியனும் சனியும் சேர்ந்திருந்தால் அரசாங்க வேலை சந்தோசத்தோடு இருப்பார்கள்.
சூரியனார் கோவில்
வளர்பிறை சப்தமி திதியில் விரதம் இருந்து (ஏழு சப்தமி) கோதுமை தானம் செய்யலாம். கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை சூரியனார் கோயிலுக்கு சென்று வரலாம். சென்னை அருகே கொளப்பாக்கம் அகஸ்தீஸ்வரர் ஆனந்தவள்ளி ஆலயம் சூரியனுக்குரிய ஸ்தலமாகும். நவதிருப்பதிகளில் திருநெல்வேலி அருகே உள்ள ஸ்ரீவைகுண்டம் சூரிய ஸ்தலமாகும். சிவாலய வழிபாடும், சூரிய நமஸ்காரமும் நல்ல பலன் தரும். தினசரி ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்கலாம். கோதுமையில் செய்த சப்பாத்தி, ரொட்டி, சாதம் போன்ற பண்டங்களை பசுமாட்டுக்கு கொடுக்கலாம்.