ஆடித்தவசு முதல் ஆடிப்பூரம் வரை எந்த கோவில்களில் என்னென்ன திருவிழா தெரியுமா?
ஆடி மாதத்தில் மாரியம்மன் கோவில்களிலும் திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறும். அம்மன் கோவில்களில் காவடி எடுத்தல், தீமிதித்தல், கூழ் ஊற்றுதல் என்று ஊரே அமர்க்களப்படும்.
சென்னை: ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் அமர்களப்படும். சங்கரன் கோவில் ஆடித்தவசு தொடங்கி ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரம் வரை எந்தெந்த தேதியில் என்னென்ன திருவிழா நடைபெறுகிறது என்று பார்க்கலாம்.
ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு தினங்களில் முண்டகக்கன்னியம்மன், கோலவிழியம்மன் கோவில், படவேடு ரேணுகாம்பாள், திருவேற்காடு கருமாரியம்மன், புன்னை நல்லூர் மாரியம்மன், சமயபுரம் மாரியம்மன்,இருக்கன்குடி மாரியம்மன் போன்ற பல திருத்தலங்களில் திருவிழாக்கள் நடைபெறும்.
ஆண்டாளும், பொறுமைக்கு இலக்கணமான பூமாதேவியும் பிறந்தது ஆடி மாதத்தில்தான். எனவே ஆடி மாத சுக்கிலபட்ச துவாதசி அன்று துளசியை வழிபட குடும்ப நலன் மேம்படும் என்பது பெண்களின் நம்பிக்கை.
கள்ளழகர் கோவிலில் விமரிசையாக ஆடித் தேரோட்டம் நடைபெறும். திருமாலிருஞ்சோலை என்றும், தென் திருப்பதி என்றும் அழைக்கப்படும் 108 வைஷ்ணவ தலங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறும் ஆடி பெருந் திருவிழா பிரசித்தி பெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி முளைக்கொட்டு விழா நடை பெறும் பத்து நாட்களில், ஆடி வீதி நான்கிலும் அம்மன் வலம் வருவார்.
கும்பகோணம் சாரங்கபாணி கோவில் ஆண்டாளுக்கு ஆடிப்பூர உற்சவம் மூன்று நாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறும்.
ஆடி மாதம் குற்றால ஈசனை வணங்கி அருவியில் குளித்தால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. குற்றாலத்தில் சீசன் காலம் என்பதால் அருவிகளில் தண்ணீப் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவிகளில் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். ஆடி மாதம் ஏகாதசி, துவாதசி அன்று அரசமரத்தைப் பெண்கள் வலம் வருவது குழந்தைப்பேற்றினை அளிக்கும். அம்மனுக்குச் சாற்றப்படும் வளையல்களைப் பெண்கள் அணிந்தால் திருமண பாக்கியம், குழந்தைப்பேறு கிடைக்கும்.
சக்தி பீடங்களில் ஒன்றான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலய அம்மன் அகிலாண்டேஸ்வரியின் காதுகளில் உள்ள தாடகங்களில் ஸ்ரீசக்கரம் உள்ளது. ஆடி வெள்ளியன்று ஆடி வெள்ளியில் ஸ்ரீ வித்யா பூஜை வைதீக முறைப்படி நடத்துகின்றனர். ஆடி வெள்ளியன்று அம்பாள் காலையில் லட்சுமிதேவியாகவும் உச்சிக்கால வேளையில் பார்வதியாகவும் மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருவாள். அம்மன் மாணவியாக இருக்க, ஈசன் குருவாக இருந்து உபதேசம் செய்தார்.
ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது. ஆடி மாதம் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை 27.7.2018 ஆடிப்பவுர்ணமி. அன்றைய தினம் விரதம் இருந்து மலைவலம் வந்தால் மகத்துவம் கிடைக்கும்.
ஆடி மாதம் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை 3.8.2018 ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் புது முயற்சிகள் செய்ய பொன்னான நாள். தமிழ்நாட்டில் பண்டை காலத்தில் காவிரி, கொள்ளிடம், தாமிரபரணி ஆகிய 3 நதிகளிலும் ஆடிப்பெருக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த 3 ஆறுகளில் தண்ணீர் பெருகுவதை ''முவ்வாறு பதினெட்டு’’ என்று குறிப்பிட்டுள்ளனர். ஆடிப் பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும். அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார். காவிரியை சகோதரியாக பாவித்து சீர் அளிப்பார் ஸ்ரீ ரங்கநாதர்.
கொடுமுடி மகுடேசுவரர் வீர நாராயணப் பெருமாள் கோவில் ஆடிப் பதினெட்டில் மும்மூர்த்திகளும் காவிரிக்கு எழுந்தருள்வார்கள். அன்று இரவு பச்சை மண்ணில் பானை செய்து, மா விளக்கு, காதோலை, கருகமணி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு முதலியவற்றை அதில் வைத்து விட்டு வருவர்.
ஆடி மாதம் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 5.8.2018 ஆடிக் கார்த்திகை தினம். அன்றைய தினம் விரதம் இருந்து முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டால் கவலைகளை தீரும். ஆடி மாதம் 26ஆம் தேதி சனிக்கிழமை 11.8.2018 ஆடி அமாவாசை. அன்றைய தினம் விரதம் இருந்து முன்னோர்களை வழிபட்டால் முன்னேற்றம் ஏற்படும்.
ஆடி மாதம் 28ஆம் தேதி திங்கட்கிழமை 13.8.2018 ஆடிப்பூரம். அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகை வழிபாடு இன்பங்களை வழங்கும். ஆடி 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 14.8.2018 அன்றைய தினம் விரதம் இருந்து நாகசதுர்த்தி நாக தெய்வ வழிபட்டால் நன்மைகள் ஏற்படும். ஆடி 30ஆம் தேதி புதன்கிழமை 15.8.2018 கருட பஞ்சமி. அன்றைய தினம் விரதம் இருந்து கருடன், லட்சுமி, விஷ்ணு ஆகியோரை வழிபட்டால் கனிந்த வாழ்க்கை அமையும்.