திருநெல்வேலி: பங்குனி உத்திர தெப்பத்திருவிழா - பிரம்மதேசம் கைலாசநாதர் கோயிலில் கோலாகலம்
அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசத்தில் பிரசித்திபெற்ற கைலாசநாதர் கோயில் உள்ளது. பழமையான இக்கோயிலில் பங்குனி உத்திரம் தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி திருவிழாவில் தெப்ப உற்சவம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு தெப்ப உற்சவம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் பொதிகை மலைச்சாரலை அடுத்துள்ள அம்பாசமுத்திரத்தில் இருந்து வடமேற்கில் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பிரம்மதேசம் என்ற ஊர். இந்த ஊரின் நடுவில் அமைந்துள்ள பிருஹந்தநாயகி உடனாய கைலாசநாதர் கோயில் சிற்பக்கலைகளை உலகிற்கு பறைசாற்றும் விதமாக திகழ்கிறது.
பிரம்மாவின் பேரன் ரோமச முனிவர் தனக்கு ஏற்பட்ட சாபம் தீர கைலாசநாதர் கோயிலில் பூஜை செய்ததாக வரலாறு உள்ளது. மேலும் பல சிறப்புகளை பெற்ற இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்டதாகும். இங்கு அம்பாள் பிரஹந்தநாயகியாகவும், சுவாமி கைலாசநாதராகவும் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக கூறப்படும் இக்கோயிலில் பங்குனி உத்திர தெப்பத்திருவிழா விமர்சையாக நடந்தது.
மார்ச் 23ல் நடந்த வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் ஒரு பார்வை!
அபிஷேக ஆராதனைகள்
தெப்ப உற்சவத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு காலை 8 மணிக்கு மங்கள இசை, திருமுறை இசையை தொடர்ந்து அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, பஞ்ச கவ்ய பூஜை, ஹோமம், மற்றும் கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை நடந்தது. காலை 11 மணிக்கு கணபதி, சுப்பிரமணியர் சுவாமி, பிரஹந்தநாயகி அம்பாள், சோமாஸ்கந்தர், சண்டேசர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு பால், தயிர் மற்றும் வாசனை திரவியங்கள் உள்ளிட்ட 11 வகையான சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனையும் நடந்தது.
நடன நாட்டிய நிகழ்ச்சி
மாலை 5 மணிக்கு விரதமிருந்த பெண்கள் பங்கேற்ற பூந்தட்டு ஊர்வலமும் 6 மணிக்கு பரத நாட்டியம் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 7.30 மணிக்கு மேல் மேள தாளம் வாணவேடிக்கை முழங்க பஞ்சமூர்த்திகள் தெப்பத்தில் எழுந்தருளினர்.
தெப்ப உற்சவம்
தீபாராதனையை தொடர்ந்து வேத பாராயணம், திருமுறை பாராயணம், சங்க முழக்கம் முளங்க பதினோறு முறை தெப்பம் வலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் நீராழி மண்டபத்தில் நடைபெற்ற பூஜையை தொடர்ந்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க சுவாமி வீதி உலா நடந்தது.
வழி நெடுகிலும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
கலசாபிஷேகம்
இதையடுத்து இரவு 10 மணிக்கு சிரமசாந்தி, கலசாபிஷேகம், சங்காபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் திரளான அம்பை சுற்று வட்டார பகுதி பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் தர்க்கார் சத்தியசீலன், ஆய்வாளர் சீதாலெட்சுமி, கணக்கர் கந்தசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
சூரியன் ஸ்தலம்
ஆதி கயிலாயங்களில் முதன்மையானதாகவும், தென்மாவட்ட நவக்கிரக ஸ்தலங்களில் சூரியன் ஸ்தலமாகவும், பஞ்ச பீட ஸ்தலங்களில் கூர்ம பீடமாகவும் உள்ளது இக்கோவில். பிரம்ம தேசத்தில் ஓடிக்கொண்டிருக்கும் கடனா நதியானது தெற்கில் இருந்து வடக்கு நோக்கி கயிலாசநாதரை வலம் வருவதால் காசிக்கு சென்று சிவதரிசனம் செய்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அந்த புண்ணியம் இங்கும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பிரம்மாவின் பேரன் வழிபட்ட தலம்
பிரம்மாவின் பேரனாகிய ரோமச முனிவர், இலந்தையடிநாதர் எனும் சிவ சுயம்புலிங்கத்தை இங்கு கண்டுபிடித்து முதன் முதலில் பூஜை செய்து வழிபட்டார். இதனால் பிரம்மனின் நினைவாக இந்த ஊருக்கு பிரம்மதேசம் என்ற பெயர் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
பிரம்மதேசம் பெயர் காரணம்
தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன், பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்தான். அப்போது அவன் இந்த பகுதிகளை கைப்பற்றி சோழ நாட்டோடு இணைய வைத்தான். இங்குள்ள கயிலாசநாதர், பிரஹந்நாயகி ஆகியோரின் அருளால் செல்லும் இடங்களில் எல்லாம் வெற்றி கிடைத்தது. இதனால் மனம் மகிழ்ந்த மன்னன் இந்த ஊரை அந்தணர்களுக்கு காணிக்கையாக கொடுத்தான். நான்மறைகள் ஓதிய அந்தணர்களுக்கு மன்னர் மானியமாக வழங்கியதால் ராஜராஜ சதுர்வேதி மங்கலம் அல்லது பிரம்மதாயம் என பெயர் கொண்டு பின்னர் பிரம்மதாயம் என்பது பிரம்மதேசம் என்று திரிவடைந்ததாக கூறப்படுகிறது.