ஈகோவினால் ஏற்படும் பிரச்சனைகள் தீர்க்கும் திருச்செந்தூர் முருகன்
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: இன்று வாழ்க்கையில் பலபேர் வேலையில் மேலதிகாரிகளுடன் பிரச்சனை, கீழ் பணிபுரிபவர்களுடன் பிரச்சனை, சக பணியாளர்களுடன்
பிரச்சனை, திருமண வாழ்வில் கணவன் மனைவியிடத்தில் பிரச்சனை, வியாபாரத்தில் பிரச்சனை, விளையாட்டில் பிரச்சனை, காதலில் பிரச்சனை, தகப்பன் மகன் உறவில் பிரச்சனை, ஆன்மீகத்தில் பிரச்சனை, அரசியலில் பிரச்சனை என எல்லா இடங்களிலும் ஏதோ ஒருவித பிரச்சனையோடு வாழ்ந்துவருகிறார்கள்.
பொதுவாக மனிதரிடையே காணப்படும் அகவிருளாக கோபம் பொறாமை பொறுமையின்மை பேராசை சுயநலப் போக்கு அகங்காரம் மமகாரம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
ஒவ்வொருவருடைய மனத்திலிருந்தும் குறிப்பிட்ட இவ்வழுக்குகள் நீங்கினால் வீட்டிலும் நாட்டிலும் அமைதி சாந்தி சமாதானம் போன்றவை துலக்கமுடன் ஒளிவீசும் எனலாம்.
அகங்காரம், மமகாரம் ஆகிய இவ்விரண்டும் அக்ஞானத்தினின்று உதிப்பவைகளாம். மமகாரம் என்பது என் வீடு, என் சொத்து, என் சுகம், என் கல்வி, என் உடைமை என்பனவாம். அகங்காரம் என்பது நான் செய்தேன், நான் சாதித்தேன், என்னை தவிர வேறு யாராலும் முடியாது போன்ற எண்ணத்தின் வெளிப்பாடாகும். இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் அகங்காரமும் மமகாரமும் இருப்பதை அவர்களால் உணர முடியாது. அடுத்தவர் உணர்த்திணால்தான் உண்டு.
நம்முடைய வாழ்க்கை என்பது இந்த அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் இடையில் நடக்கின்ற ஒரு நீளமான சண்டை. அவ்வளவுதான். வெளியில் ஒரு பர்சனாலிட்டியாக, நம்மை வெளிப்படுத்திக் கொள்கிறோம். ஆனால், உள்ளே மற்றொரு பர்சனாலிட்டியாக இருக்கிறோம். இந்த இரண்டிற்கும் இடையில் நடக்கின்ற சண்டைதான் வாழ்க்கை.
வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற வேகம், தோல்வி வந்து விடுமோ என்கிற பயம், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற கவலை, என்ன நேர்ந்தாலும் அதிருப்தி, அடுத்தவர்கள் நிலை பார்த்து பொறாமை முதலான தன்மைகள் மமகாரத்தினால் உருவாக்கப்படுபவை.
மன்னிப்பும், நகைச்சுவையும் இவ்விரண்டும் அகங்காரத்தைக் கட்டுப்படுத்தும் சாதனமாகும். அகங்காரம் செயல்களை உருவாக்குகிறது. தவறுகளுக்கு தண்டனை வழங்குகிறது. மாற்றங்களை ஏற்படுத்துகிறது. விருப்பத்தைத் தோற்றுவிக்கிறது. மன்னிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதால் அகங்காரத்தை கட்டுப்படுத்தும். நாம் நமது அகங்காரத்தை குறைத்துக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். பொறுமையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும் என ஆன்மீக பெரியோர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அகங்காரத்தையும் மம காரத்தையும் ஆங்கிலத்தில் ஈகோ என குறிப்பிடுகிறார்கள்.
ஜோதிடத்தில் அகங்காரமும் மமகாரமும்:
ஜோதிடத்தில் அகங்காரத்தையும் மம காரத்தையும் குறிக்கும் கிரகம் சூரியன் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அகங்காரத்தையும் மம காரத்தையும் குறிக்கும் பாவம் லக்னபாவம் என குறிப்பிடுகிறது.
ஒருவர் ஜாதகத்தில் சூரியனது வீடு லக்னமாகவோ, ராசியாகவோ அமைந்து ஆட்சி உச்சம் பெற்றுவிட்டாலும் சூரியன் ஆத்மகாரகனாக அமைந்துவிட்டாலும் லக்னத்திற்க்கு சூரியன் பார்வை பெற்றுவிட்டாலும் அவர்களுக்கு எப்போதும் ஏதோ ஒரு அகங்காரம் இருந்துக்கொண்டே இருக்கும். ஆனால் சூரியனை குரு பார்த்துவிட்டாலும் குருவேயை சூரியன் பார்த்துவிட்டாலும் அகங்காரம் தகர்ந்துவிடும்.
சூரியன் எந்த கிரகத்தில் நிற்கிறது என்பதை பொருத்தும் எந்த கிரகத்தோடு சேர்க்கை பெறுகிறது என்பதை பொறுத்தும் அகங்காரம் அமைந்துவிடுகிறது. சூரியன் புதன் சுக்கிரன் இம்மூன்றும் முக்கூட்டு கிரகங்கள் எனப்படும். இவை மூன்றும் குறிப்பிட்ட பாகையில் இடைவிடாமல் ஒன்றைஒன்று தொடர்ந்து இணைந்தே செல்லும்.
ஒருவர் ஜாதகத்தில் சூரியனும் புதனும் இணைந்து புத ஆதித்ய யோகம் பெற்றுவிட்டால் அவர்களுக்கு அறிவு சார்ந்த கர்வம் மற்றும் அகங்காரம் ஏற்பட்டுவிடும். உலகில் உள்ள 95 % பேருக்கு இந்த புத ஆதித்ய யோகம் அமைந்துவிடும். அனைவருக்கும் கல்வியறிவு பெறவேண்டும் எனும் இறைவனின் கருனையால் ஏற்பட்ட இந்த யோகம் உலகில் பலரையும் அகங்காரத்தோடு விளங்க காரணமாகிவிடுகிறது.
புத ஆதித்ய யோகத்தினால் அனைவருக்கும் அகங்காரம் ஏற்பட்டாலும் சூரியனுக்கு முன்னும் பின்னும் புதன் நிற்கும் நிலையை பொறுத்து அங்காரத்தின் விளைவுகள் மாறுபட்டு அமைந்துவிடும்.
இன்று சமூகத்தில் கல்வியில் சிறந்தவர்கள், ஆசிரியர்கள், ஜோதிடர்கள் இவர்களுக்குள் எப்போதும் ஒரு கர்வ நிலை இருப்பதற்க்கு இதுவே ஒரு காரணமாகிவிடுகிறது.
ஒருவர் ஜாதகத்தில் சூரியன் சுக்கிரன் இணைவு செல்வ செழிப்பினால் கர்வத்தை ஏற்படுத்திவிடுகிறது. சூரியனை கடந்து சுக்கிரன் நின்று சுப வெசி யோகம் ஏற்படும்போது அவர்களுக்கு செல்வ உயர்வு நிலை ஏற்படுவதோடு செல்வத்தால் சிறிது செறுக்கு ஏற்படவும் தவறுவதில்லை.
சூரியனுடன் சேரும் கிரகத்தை பொருத்து அமையும் அகங்காரத்தின் தன்மை:
சூரியன் லக்னத்தில் ஆட்சி உச்சம் பெற்ற தன்மை அரசியல், பதவி, அதிகாரம், அந்தஸ்து ஆகியவற்றால் அகங்காரம் ஏற்படும்.
சூரியன் சந்திரன் சேர்க்கையால் ஏற்படும் அமாவாசை யோகமும் பௌர்னமி யோகமும் பல பதவிகளை தந்து உயர்வை ஏற்படுத்தினாலும் பதிவியினால் சிறிது அகங்காரத்தையும் தந்துவிடுகிறது.
சூரியன்-செவ்வாய் சேர்க்கை நிலம் சொத்து ரியல் எஸ்டேட் ஆகிய விஷயங்களில் அகங்காரம் மற்றும் மம காரத்தை ஏற்படுத்திவிடுகிறது.
சூரியன் புதன் சேர்க்கை கல்வியறிவு, வியாபாரம் ஆகியவற்றின் காரணமாக அகங்காரம் அமைந்துவிடுகிறது.
சூரியன் குரு சேர்க்கை உயர்நிலை ஆன்மீகத்தை தந்தாலும் இருவரில் ஒருவர் 6/8/12 அதிபதிகளாகிவிட்டால் ஆன்மீகத்தில் கர்வம் ஏற்பட காரணமாகிவிடுகிறது.
சூரியன் சுக்கிரன் இணைவு பணம், செல்வ நிலை பெண்கள் ஆகியவற்றில் செழிப்பை ஏற்படுத்தி அகங்காரத்தால் பிரச்சனைகளையும் தந்துவிடுகிறது. சூரியன் சுக்கிரனின் வீட்டில் நீசமடைந்துவிடுவதால் சுக்கிரனோடு இணைவு கர்வ பங்கத்தை ஏற்படுத்திவிடும்.
சூரியனோடு சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களின் இணைவு சூரியனுக்கு நீச நிலையே ஏற்படுத்தி கர்வ பங்கத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.
அகங்காரம் ஒழிய ஆன்மீகமும் தண்டனையும் வழிசெய்கிறது. எல்லா நேரங்களில் தண்டனை ஏற்புடையதாக இருக்காது என்பதால் ஆன்மீக வழி சிறந்தது என ஏற்று கொள்ளபட்டிருக்கிறது.
ஆன்மீக வழியில் விநாயகருக்கு "சுக்லாம் பரதரம் விஷ்னும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் ஜ்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தையே" என குட்டிக்கொள்வதும் தோபிகரணம் எனும் யோக பயிற்சியும் செய்வது அகங்காரத்தை அழிக்கும் என ஆன்மீகம் தெரிவிக்கிறது. கேதுவிற்க்கு அதிதேவதை விநாயகர் என்பதும் சூரியனோடு கேது சேர்க்கை கர்வபங்கம் ஏற்படும் என மேலே குறிப்பிட்டிருப்பதை இங்கு ஞாபக படுத்த விரும்புகிறேன்.
அகங்காரம் மமகாரம் அழிக்கும் திருச்செந்தூர்:
சூரபத்மன் சுப்ரமணியருடன் போர் செய்ய வரும் முதல் நிகழ்வை அருளுக்கும் இருளுக்கும், கருணைக்கும் கொடுமைக்கும், அறிவுக்கும் மருளுக்கும் நடக்கும் சந்திப்பு என்று கந்தபுராணம் சொல்கிறது.
சூரபத்மனின் ஒரு பாதி 'நான்' எனும் அகங்காரம், மறுபாதி 'எனது' எனும் மமகாரம். இந்த இரண்டையும் கொண்ட சூரபத்மன் மாமரமாக மாறி கடலுக்கடியில் தலைகீழாக நின்ற போதுதான் சுப்ரமணியரின் வேல் அம்மரத்தை இரண்டு பகுதியாகப் பிளந்தது.
அந்த இரண்டு பாகங்களுக்குள் ஒன்று ஆண்மயிலாகவும், இன்னொன்று சேவலாகவும் தோன்றின.
சுப்ரமணியர் ஆண்மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் வைத்துக் கொண்டார் என்றும் கந்த புராணம் சொல்கிறது.
இந்த சூரசம்ஹாரம் நடைபெற்ற இடம்தான் திருச்செந்தூர் என்று புராணங்கள் தெரிவிக்கின்றது.