வெள்ளியில் பிறந்தவர்கள் சுகவாசிகளாம்... ஆண் குழந்தைக்கு பரிகாரம் இருக்கு!
ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு குணநலன் உண்டு. அந்தந்த கிழமைக்கு உரிய கிரகங்களின் ஆதிக்கப்படியே அவர்கள் செயல்படுவார்கள். வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று பார்க்கலாம்.
சென்னை: சுக்கிரனுக்கு உரியது வெள்ளிக்கிழமை. இந்த கிழமையில் பிறந்தவர்கள் சுகபோகங்களை அனுபவிப்பார்கள். பாக்கெட் நிறைய பணமிருக்கும் என்பதால் சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டுவார்கள். அழகியலோடு இருக்கும் இவர்கள் அனைவரையும் அட்ராக்ட் செய்யும் வகையில் பேசி பழகுவார்கள்.
சுக்கிரன் பெண் தன்மையைக் குறிக்கும் கிரகம். வாரத்தின் ஏழு நாட்களில் வெள்ளி மிகுந்த பெண்தன்மை உடைய நாள். வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்களிடம் பெண் தன்மை சற்றே அதிகம் இருக்கும். சுகவாசிகளான இவர்கள் எதையும் அனுபவித்துப் பார்த்துவிட வேண்டும் என்ற மனம் படைத்தவர்கள்.
சுற்றுலா பிரியர்களான இவர்கள் எங்காவது பயணித்து கொண்டே இருப்பார்கள். இவரது உழைப்பு முழுவதும் மற்றவர்களுக்கே சென்று சேரும். புகழ்ச்சியை விரும்பும் இவர்கள் எதையும் எல்லோரையும் எளிதாக நம்பி விடுவார்கள். இவர்களை ஆகா ஓகோ என்று புகழ்ந்துவிட்டால் போதும் எதையும் விட்டுத்தர தயாராக இருப்பார்கள். வழ்க்கை வாழ்வதற்கே என்று வாழ்பவர்கள். அதனால், தங்கள் மனதுக்கு எது பிடிக்கின்றதோ அதை எந்தச் சூழ்நிலையிலும் அடைந்தே தீருவார்கள்.
வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள் குறைவில்லாச் செல்வங்களைப் பெற்று வாழ்பவர்கள். கலை, இலக்கியம், சினிமா, நடனம் ஆகியவற்றில் ஆர்வம் இருக்கும். உடன் இருப்பவர்கள், இவர்களைக் கேட்டே முடிவெடுக்கும் படியான நிலைமையை உருவாக்குவர். முன் வைத்த காலைப் பின் வைக்க மாட்டார்கள். அதே நேரத்தில் மற்றவர்கள் பேச்சை அப்படியே நம்பிவிடுவார்கள். எல்லா மதத்தினரையும் அனுசரித்துப் போவார்கள். இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் லட்சுமியை வழிபடுவதன் மூலம் செல்வநிலை உயரும்.
6ம் எண்ணுக்குரிய கிரகம் சுக்கிரன். வெள்ளிக்கிழமை வாரத்தின் சிறந்த நாளாக அனைத்து மதத்தினரும் கருதுகின்றனர்.. ஆறாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கை திருப்தியளிப்பதாகவே அமையும். பெரும்பாலானவர்கள் காதல் விஷயங்களில் வெற்றி பெற்று தன் மனதிற்கு பிடித்தவரையே வாழ்க்கை துணையாக அடைவர்.
சுக்கிரனின் ஆதிக்கத்தை பெற்றவர்கள் என்பதால் கலைத்துறை சம்மந்தமானவற்றில் முன்னேற்றமடைவார்கள். சினிமா, சங்கீதம், இசை, நாட்டியம், நாடகம் போன்றவற்றில் பிரகாசம் உண்டாகும். அரசாங்க பணிகளில் உயர் பதவிகள் அமையும். ஓவியம் வரைதல், கவிதைகள், பாடல்கள் எழுதுதல் போன்றவற்றில் புகழும், கௌரவமும் கிடைக்கும். மேற்கு திசையும், தென் மேற்கு திசையும், சுக்கிரனுக்குரிய திசைகள் ஆகும்.
சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் என்பதால் வைரக்கல்லை அணிவது நல்லது. அதிர்ஷ்ட தேதிகள் 6,15,24,9,18,27. வெள்ளிக்கிழமைகளில் லஷ்மி தேவியை வழிபாடு செய்வது, லஷ்மி பூஜை செய்வது உத்தமம். வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது.
வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்து விட்டால், அந்தக் குழந்தை தந்தையின் இறுதிச் சடங்கிற்கு உதவ மாட்டார் என்று பொதுவான பேச்சு இன்றும் மக்கள் மத்தியில் உள்ளது. தந்தை, அவரது இளம் வயதிலேயே காலமாகும் நிலை வருவதால், மகன் உதவ மாட்டார் என்பதே இதன் அர்த்தம். வெள்ளிக்கிழமை நவமி திதியில் ஆண் குழந்தை பிறந்துவிட்டால், அதற்கான பரிகாரம் செய்தால் அப்பாவிற்கு எந்த ஆபத்தும் ஏற்படாது.
வெள்ளிக்கிழமை நவமி திதியில் பிறந்த ஆண் குழந்தைக்கு ஒரு வயது முடிந்தவுடன் அந்தக் குழந்தையை குலதெய்வத்துக்கோ அல்லது திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கு எழுதி வைத்து விட்டு வீட்டிற்கு அழைத்து வந்துவிட வேண்டும். குழந்தை பெரியவனாகி திருமணம் முடிக்கும்வரை, எந்தக் கோவிலுக்கு எழுதி வைத்தீர்களோ அந்தக் கோவிலின் பெயராலேயே மற்ற கோவில்களில் அர்ச்சனை செய்ய வேண்டும்.
திருமணம் முடிக்கும் தருணம் வரும்போது எழுதிவைத்த கோவிலுக்கு போய் விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறேன், என்று எழுதி வைத்து வரவேண்டும். அப்படி செய்வதன் மூலம் வெள்ளிக்கிழமை நவமி திதியில் பிறந்த குழந்தையின் தாயும் தீர்க்க சுமங்கலியாக இருப்பார். தந்தையும் ஆரோக்கியமாக வாழ்வார்.