விநாயகர் சதுர்த்தி: நெல்லை மாவட்டத்தில் பிள்ளையார் சிலை செய்பவர்கள் வேதனை
அரசு விநாயகர் சிலையை நிறுவ பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் தங்களுக்கு போதிய ஆர்டர் கிடைக்கவில்லை. முன் பணம் கொடுத்தவர்களும் கடைசி நேரங்களில் வேண்டாம் என்று சிலை செய்பவர்கள் வேதனை தெரிவித்துள்ளன
திருநெல்வேலி: கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் மண்பாண்ட தொழிலை பாதித்த நிலையில் விநாயகர் சிலைகளுக்கு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சிலை செய்பவர்கள் வேதனையடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் தென்காசி, இலஞ்சி, செங்கோட்டை, தேன் பொத்தை கட்டளை குடியிருப்பு, கலங்காத கண்டி, கேசவபுரம், தெற்கு மேடு, இடைகால், சுந்தரபாண்டிய புரம் பகுதிகளில் சுமார் 2000 குடும்பங்கள் மண்பாண்ட தொழில்களை பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் மண்பானை, அடுப்பு, பூந்தொட்டி உட்பட மண்ணால் ஆன பொருட்களை உற்பத்தி செய்து அண்டை மாநில மான கேரளாவிற்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். இவர்கள் ஆண்டிற்கு ஒரு முறை மண்பாண்ட தொழிலை விட்டு விட்டு விநாயகர் சிலை செய்யும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
சிலை தயாரிக்கும் பணி தீவிரம்
கடந்த ஆண்டு விநாயகர் சிலை பணியில் ஈடுபடும் போது களிமண் மற்றும் குளத்து மண் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டு இவர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்ட சிலைகளை செய்து விற்பனை மேற்கொண்டனர்.
மண் கிடைப்பதில் தட்டுப்பாடு
இவர்கள் 1 அடி முதல் 7 அடி வரையிலான சிலைகளை உருவாக்குகிறார்கள். இதன் விலை ரூ.1000 முதல் ரூ 10,000 வரை விற்பனை செய்யபடுகிறது. ஆனால் இந்த ஆண்டு போதிய மண் கிடைத்தும் அரசின் கெடுபிடியால் சிலை உற்பத்தி செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
சிலை நிறுவ கட்டுப்பாடு
கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு, மற்றும் போக்குவரத்து தடையால் உற்பத்தி செய்யப்பட்ட பானைகள் கேரளாவிற்கு அனுப்ப முடியாமல் சேமிப்பு கிடங்குகளில் தேங்கி உள்ளது. இந்நிலையில் விநாயகர் சிலை மூலம் தங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றி கொள்ளலாம் என்ற நிலையில் அரசு விநாயகர் சிலையை நிறுவ பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் தங்களுக்கு போதிய ஆடர் கிடைக்கவில்லை. முன் பணம் கொடுத்தவர்களும் கடைசி நேரங்களில் வேண்டாம் என்று தெரிவித்து விடுகின்றனர்.
சிலை செய்ய ஆர்டர் இல்லை
300க்கும் மேற்பட்ட சிலைகளை உற்பத்தி செய்த இடத்தில் தற்போது 150 சிலைகள் செய்வதற்கு கூட ஆடர் இல்லை. இதனால் தங்களது வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளதாக கூறுகின்றனர். இது ஒருபுறம் இருக்க தமிழக அரசு பிளாஸ்டிரிக் பாரிஸ் மாவுகளால் ஆன சிலைகளுக்கு தடை விதித்துள்ளது. அது பெயரளவில் மட்டுமே உள்ளது.
மண்பாண்ட் தொழிலாளர்கள் கோரிக்கை
பகுதியில் அதிகளவில் பிளாஸ்டிக் பாரிஸ் மாவு களால் செய்யப்பட்ட சிலைகள் விற்பனை செய்யபடுகிறது. அரசு சட்டத்தை முறையாக பயன்படுத்தி எங்களது வாழ்வாதாரத்தை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.