பிள்ளையார்பட்டியில் கஜமுகாசுர வதம் - மூஷிகம் விநாயகரின் வாகனமான கதை
மயில், காளை, சிங்கம், புலி என தெய்வங்களின் வாகனங்கள் பல இருக்கையில் மூஞ்சூருவை வாகனமாக ஏற்றுக்கொண்டார் பிள்ளையார்.
சென்னை: பிள்ளையார் எவ்வளவு பெரிய உருவம், ஒரு சிறிய விலங்கான மூஞ்சூரு மீது ஏறி வலம் வருகிறார். இது எப்படி சாத்தியம் என்று தான் விநாயகரின் வாகனத்தைப் பார்த்தவுடன் நினைப்பார்கள். இதில் நுண்ணிய அர்த்தம் உள்ளது. அணுவுக்கு அணுவாகவும், பெரிதுக்கும் பெரிதானவனுமாக பிள்ளையார் இருக்கிறார் என்பதே இதன் தத்துவம்.
எந்த செயலும் செய்வதற்கு முன்னும் முழுமுதற்கடவுளான விநாயகரை வணங்குவது இந்துக்களின் வழக்கம். யானைத் தலையும், பெரிய வயிறும், மூஞ்சூரு வாகனமும் அவரது சிறப்பம்சங்கள்.
யானைத் தலை அறிவின் அம்சமாகவும், நீண்ட காதுகள் அவருக்கு அனைத்து விஷயங்களும் கேட்கும் என்பதற்கான சின்னமாகவும் விளங்குவதாக பக்தர்கள் போற்றுகின்றனர். சிங்கம், புலி,காளை, மயில்,பாம்பு என பல வாகனங்களை தெய்வங்கள் வைத்திருக்க சாதாரண மூஞ்சூருவை வாகனமாக ஏற்றுக்கொண்டது பற்றி புராண கதை ஒன்று உள்ளது.
மாகத முனிவருக்கும் விபூதி என்ற அசுரப்பெண்ணிற்கும் பிறந்த அசுரன் கஜமுகன். இவன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து எந்த ஆயுதங்களாலும் அழியாத வரம் பெற்றான். வரம் பெற்ற மமதையில் இந்திடன் முதலான தேவர்களுக்கு இடர் விளைவிக்க, அவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அவனை கொல்வதற்காக இறைவன், ஆவணி மாதம் அமாவாசை கழிந்த நான்காம் நாள் சதுர்த்தியன்று விநாயகப் பெருமானை யானை முத்தோடும், மனித உடலோடும் தோற்றுவித்தார். பிறகு அசுரனை வதம் செய்யும்படி அனுப்பி வைத்தார்.
சிவ-சக்தியின் வேண்டுதலினால் விநாயகர் தன் பூதப்படைகள் சூழ கஜமுகனின் மதங்கபுரத்தை முற்றுகையிட்டார். போர் மூண்டது. அவன் விட்ட பாணங்களை எல்லாம் விநாயகர் தன் கையில் உள்ள உலக்கையினால் தடுத்து, அதனைக்கொண்டே அவனை அடித்தார். கஜமுகன் மயங்கி விழுந்தான். ஆனால் இறக்கவில்லை. அவன் பெற்றவரம் நினைவுக்கு வரவே, விநாயகர் தம் கொம்புகளில் ஒன்றை ஒடித்து அக்கொம்பினால் அசுரனைக் கொன்றார். உடனே அசுரன் ஒரு பெருச்சாளி உருவம் தாங்கி விநாயகரை எதிர்த்துப் போரிட, விநாயகர் பெருச்சாளியை வென்று அதனைத் தன் வாகனமாக ஆக்கிக் கொண்டார்.
உடனே தேவர்களும் முனிவர்களும் மற்றும் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பெரும் துன்பங்களை அகலச் செய்த விநாயகப் பெருமானை சதுர்த்தி தினத்தன்று வழிபட்டு கஜமுகாசுரனுக்குத் தாங்கள் செய்யும் மரியாதைகளாக தலையில் குட்டிக் கொள்ளுதல், தோப்புக்கரணம் போடுதல் முதலிய கடமைகளைத் செய்யத் தொடங்கினார்கள்
இந்த நிகழ்வை உணர்த்தும் வகையில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில் இன்றைக்கும் கஜமுகாசூர வதம் நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் 6ஆம் திருநாளன்று கஜமுகாசூரசம்ஹாரம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.