கங்கா சப்தமி 2021: கங்கையை நினைத்து வணங்கினால் பல தலைமுறை பாவங்கள் நீங்கும்
இந்தியர்களின் புனித நதியாகவும், கடவுளாகவும் போற்றப்படும் கங்கை நதி பூமிக்கு வந்த நிகழ்வை கொண்டாடும் விதமாக, கங்கா தேவியை வணங்கும் விதமாகவும் கங்கா சப்தமி, கங்கா தசரா போன்ற பண்டிகைகளை வட மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.
வாரணாசி: புண்ணிய கங்கை நதியில் பாரம்பரிய கங்கா சப்தமி விழா கொண்டாடப்படுகிறது. வைகாசி மாதத்தின் வளர்பிறை ஏழாம் நாளில் சப்தமி திதியில் கங்கை சப்தமி கங்கா ஜெயந்தி திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கங்கையை வணங்கி வழிபடுவதன் மூலம் ஒருவர் அறிந்தும் அறியாமலும் செய்த அனைத்து வகையான பாவங்களிலிருந்தும் விடுபடுவார் என்பது நம்பிக்கை.
கங்கா சப்தமி பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் வளர்பிறை சப்தமி நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, கங்கை சப்தமி 2021 மே 18 செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும். இது தவிர, இந்த நாளை கங்கை ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகிறது. கங்கை ஜெயந்தி நாளில், காங்கா மாதவை வணங்குபவர்களின் பொருளாதார பிரச்சினை நீங்குகிறது. நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கிறது.
கங்கை சப்தமி திதி இன்று நண்பகல் 12 மணி 32 நிமிடங்களில் தொடங்கி நாளை மே 19 புதன்கிழமை நண்பகல் 12 மணி 50 நிமிடங்கள் வரை நீடிக்கும். இந்த நேரத்தில் கங்கை அன்னையை நினைத்து வணங்கலாம்.
கங்கா சப்தமி புராண கதை
சூரிய குலத்தில் பிறந்த திலீபன் என்பவரின் மகன் பகீரதனின் முயற்சியால் சிவனின் தலையில் இருக்கக் கூடிய கங்கையை மேலோகத்திலிருந்து பூலோகத்திற்குக் கொண்டு வரப்பட்ட மிக உன்னதமான நாள் கங்கா சப்தமி என அழைக்கப்படுகிறது.
ஸ்ரீராமனின் முன்னோர்களில் ஒருவர் சகரன். அவர் ஒருமுறை யாகம் ஒன்றை நடத்தினார். யாகக் குதிரையானது திக் விஜயம் புறப்பட்டது. அப்போது விரோதிகள் சிலர், அந்தக் குதிரையைக் கவர்ந்து சென்று, கபில முனிவரின் ஆஸ்ரமத்தில் கட்டிவைத்தனர்.
குதிரையைத் தேடிப் புறப்பட்ட சகர குமாரர்கள், ஒருவழியாக கபில முனிவரின் ஆஸ்ரமத்தில் குதிரை இருப்பதைக் கண்டறிந்தனர்.கபில முனிவரே குதிரையைக் கவர்ந்து வந்திருக்க வேண்டும் என்று தவறாகக் கருதினார்கள். ஆத்திரத்தில், முனிவரைத் தாக்க முயன்றார்கள். அதனால் கபில முனிவர் ஆவேசமானார். தன் பார்வையிலேயே அவர்கள் அனைவரையும் எரித்தார். அவ்வளவுதான். சாம்பலானார்கள் சகரனின் புதல்வர்கள். அவர்களுக்குப் பிறகு திலீபன் எனும் அரசன் வரையில் சகர வம்ச சந்ததியினர் பலரும், கபிலரால் எரிந்து சாம்பலாகிப்போன தங்களின் முன்னோர் நற்கதி அடைவதற்குப் பல முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால், அவர்களது எண்ணம் ஈடேறவே இல்லை.
பகீரதன் தவம்
திலீபனின் மைந்தனான பகீரதன், கங்கையானது பூமிக்கு வந்தால், தன் முன்னோர்கள் நற்கதி அடைவார்கள் என உறுதியாக நம்பினார். அதையடுத்து கங்காதேவியை நோக்கி கடும் தவம் செய்தார். இதையடுத்து அவரின் தவத்தில் மகிழ்ந்த கங்கையும் பூமிக்கு வரச் சம்மதித்தாள். ஆனால், பொங்கிப் பாய்ந்து வரும் தன்னைத் தாங்கும் சக்தி பூமிக்கு இல்லை என்பதை பகீரதனுக்கு உணர்த்தினாள் கங்கா தேவி. சிவபெருமானை நினைத்து தவமிருந்தால்தான் இவை அனைத்தும் சாத்தியம் என அறிவுறுத்தினாள்.
பகீரதன் தவம்
திலீபனின் மைந்தனான பகீரதன், கங்கையானது பூமிக்கு வந்தால், தன் முன்னோர்கள் நற்கதி அடைவார்கள் என உறுதியாக நம்பினார். அதையடுத்து கங்காதேவியை நோக்கி கடும் தவம் செய்தார். இதையடுத்து அவரின் தவத்தில் மகிழ்ந்த கங்கையும் பூமிக்கு வரச் சம்மதித்தாள். ஆனால், பொங்கிப் பாய்ந்து வரும் தன்னைத் தாங்கும் சக்தி பூமிக்கு இல்லை என்பதை பகீரதனுக்கு உணர்த்தினாள் கங்கா தேவி. சிவபெருமானை நினைத்து தவமிருந்தால்தான் இவை அனைத்தும் சாத்தியம் என அறிவுறுத்தினாள்.
கடும் தவம் செய்த பகீரதன்
உடனே பகீரதன் சிவபெருமானை நினைத்து, கடும் தவம் இருந்தார். சிவனார் மனம் குளிர்ந்து பகீரதனுக்கு அருள் புரிய சம்மதித்தார். வான் உலகத்தில் பிரவாகமெடுத்து பெருவெள்ளமென பூமியை நோக்கி பாய்ந்து வந்த கங்கையை தன் சடையில் தாங்கி அவளின் வேகத்தைக் கட்டுப்படுத்தினார். பூமிக்கு வந்த கங்கையால் பகீரதனின் முன்னோர் நற்கதி அடைந்தனர் என்கிறது புராணம். கங்கா தேவி பூமிக்கு வரக் காரணம் பகீரதன் என்பதால், கங்காதேவிக்கு 'பாகீரதி' என்றும் ஒரு பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.
கங்கை பூமிக்கு வந்த நாள்
கங்கா தேவி பூமிக்கு வந்த நாள் அட்சய திருதியை நாள் என்றும் புராணங்கள் சொல்கின்றன. அதே நேரத்தில் வைகாசி மாத வளர்பிறை சப்தமி நாளில் கங்கா தேவி பூமிக்கு வந்தடைந்தார் என்றும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே கங்கா சப்தமி கொண்டாடப்படுகிறது. மற்றொரு கதைப் படி கங்கா தேவி 'நிர்ஜல ஏகாதசி' எனப்படும் 'சர்வ ஏகாதசி' திதி அன்று வந்ததாக குறிப்பிடப்படுகிறது.
பாவங்களில் இருந்து விடுதலை
எவர் ஒருவர் கங்கா சப்தமி நாளில் கங்கையை நினைத்து நீராடி வழிபடுகிறார்களோ அவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். கங்கைக்கு நேரில் செல்ல முடியாத நிலையில் இருப்பதால் வீட்டிலேயே தாமிரம் அல்லது வெள்ளி செம்பில் நீரை எடுத்து மஞ்சள் தூள் சேர்த்து கங்கையாக நினைத்து வணங்கலாம்.
கங்கா தசாரா பண்டிகை
கங்கா சப்தமியை போல வைகாசி அமாவாசைக்குப் பிறகு 10 நாட்கள் கங்கா தசரா கொண்டாடப்படுகிறது. கங்கையில் 10 நாட்கள் புனித நீராடி கங்கா தசரா கொண்டாடுகின்றனர். வைகாசி மாத அமாவாசை மறுநாளிலிருந்து பத்து நாட்கள் நாம் கங்கை நதியில் முங்கி குளித்தால் நம்முடைய சொல், சிந்தனை, செயல்களால் ஏற்படக் கூடிய 10 வித பாவங்கள் நீங்கி முக்தியைத் தரக் கூடிய உயர்வு நிலையை அடைய முடியும் என புராணங்கள் தெரிவிக்கின்றன.
10 நாட்கள் திருவிழா
இந்த ஆண்டு கங்கா தசாரா ஜூன் 11ஆம் தேதி தொடங்கி ஜூன் 20ஆம் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படும். கங்கை நதி பாயக் கூடிய உத்தர பிரதேச, உத்தரகண்ட், பீகார் மற்றும் மேற்கு வங்கம் என கங்கை நதி பாயக் கூடிய மாநிலங்களில் கோலாகலமாக இந்த 10 நாட்கள் கொண்டாடுவது வழக்கம்.
கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள ஹரிதுவார், வாரணாசி ரிஷிகேஷ் மற்றும் அலகாபாத் நகரில் இந்த விழா சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். கங்கை நதியில் பக்தர்களும், சாதுக்களும் குளித்து, அர்ச்சகர்கள் காங்கைக்கு ஆரத்தி காட்டுவார்கள். இதனை ஏராளமானோர் கண்டு தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டு கொரோனா கொடுந்தொற்று பரவல் காரணமாக நாம் அனைவரும் வீடடில் இருந்தே கங்கை அன்னையை நினைத்து வணங்கலாம். பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும்.