சித்திரை திருவிழா 2019: கள்ளழகரை வரவேற்க தயாராகும் மதுரை - வைகையில் 216 கனஅடி தண்ணீர் திறக்க முடிவு
சித்தரைத் திருவிழாவை முன்னிட்டு வைகை அணையிலிருந்து 216 கன அடி தண்ணீர் 8 மணி நேரத்துக்கு முன்பே திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் நடராஜன் அறிவித்துள்ளார்.
மதுரை: தேர்தல் திருவிழா, சித்திரை திருவிழா இரண்டையும் கொண்டாட மதுரை தயாராகி வருகிறது. வைகை ஆற்றில் இறங்க வரும் கள்ளழகரை வரவேற்க வைகை அணையில் இருந்து 216 கனஅடி தண்ணீர் திறக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக ஆண்டுதோறும் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். ஆனால் கடந்த 2017ஆம் ஆண்டு வைகை அணையின் நீர் இருப்பு குறைவாக இருந்ததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. கடந்த 2018ஆம் ஆண்டு ஆண்டு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 15ம்தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும், 16ஆம் தேதி திக் விஜயமும், 17ஆம் தேதி மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணமும், 18ம்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி வருகின்ற 19 ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமையில் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் நடராஜன், கள்ளழகர் வைகையற்றில் இறங்குவதற்காக வைகை அணையில் இருந்து 216 கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
மதுரைக்கு கள்ளழகர் வரும் முன்பாக வைகை அணையிலிருந்து தண்ணீர் வந்து விடும் எனவும் தெரிவித்தார். கடந்த ஆண்டுகளைப் போலவே எல்லா சிறப்பு வசதிகளும் செய்யப்படும் என்றும் ஆட்சியர் நடராஜன் உறுதி அளித்தார்.
கள்ளழகருக்காக இந்த ஆண்டு வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவதால் மதுரைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சித்திரை திருவிழா இப்போதே களைகட்டத் தொடங்கிவிட்டது.