அட்சய திருதியை : அன்னதானம் செய்யுங்கள் அளவில்லா செல்வம் பெருகும்
இன்று அட்சய திருதியை தினம் கொண்டாடப்படுகிறது. மிகச்சிறந்த நாளான இன்று தானம் செய்வது நன்மை தரும்.
சென்னை: அட்சய திருதியை நாளில் அன்னதானம் செய்வது சிறப்பான பலனைத் தரும். அன்னை பராசக்தி இந்த நாளில் ஈசனுக்கு அன்னம் அளித்த இந்த நாளில் அன்னதானம் செய்தால் இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அட்சய என்றால் குறைவில்லாதது என்று பொருள். இந்த அட்சய திருதியை மகாலட்சுமிக்கான நாள். எனவே இந்த நாளில் மகாலட்சுமி பூஜை செய்வது அற்புதமான பலன்களைத் தரும். இந்த நாளில்தான் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வணங்குவார் என லட்சுமி தந்தரம் எனும் நூல் கூறுகிறது.
அட்சய திருதியை நாளன்றே வேதவியாசர் மகாபாரத இதிகாசத்தை விநாயகரிடம் எழுதச் சொல்லி கட்டளையிட்டார். பாஞ்சாலியின் மானம் காக்க, கண்ணன் 'அட்சய' என்று கூறி பாஞ்சாலியின் ஆடையை வளரச் செய்ததும் அட்சய திருதியை நாளன்றுதான்.
வளம் தரும் அட்சய திருதியை
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு மூன்றாவது நாளில் மூன்றாம் பிறை நாளன்று வருவதே அட்சய திருதியை நாள். இந்த வருடம் சித்திரை மாதம் 05ம் நாள் 18-04-2015 இன்று அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இன்று காலை 6:19 முதல் 12:34 மணி வரை அட்சய திருதியை பூஜை மேற்கொள்ளலாம்.
அன்னதானம்
அட்சய திருதியை தங்கம் வாங்கலாம் வாங்க என்று பலரும் விளம்பரம் செய்து வருகின்றனர். ஆனால் அட்சய திருதியை நாளில் அன்னதானம் செய்யலாம் செல்வம் பெருகும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
அரிசி, உப்பு
ஆலயங்களில் ஏலம் போடும் பொழுது, அதிக விலை கொடுத்து உப்பு வாங்குவார்கள். உப்பு வாங்கினால் பணம் சேரும் என்பது நம்பிக்கை. அந்த அடிப்படையில் அட்சய திருதியை நாளில் பொன், பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் மட்டுமன்றி உப்பு, தானியங்கள், மளிகைச் சாமான்கள் வாங்கலாம்.
என்ன வாங்கலாம்
சோறு வடிக்கும் பாத்திரம், மஞ்சள் வண்ண ஆடை, தெய்வப் படங்கள், கனி வகைகள், சங்கு, சீர்வரிசை சாமான்கள், பூஜையறையில் உபயோகப்படுத்தும் புனிதமான பொருட்கள், அகல்விளக்கு, வெண்கல மணி, எழுதுகோல், லட்சுமி படம், அடுப்பு, பணப்பெட்டி, மணிபர்ஸ், சர்க்கரை வெல்லம், நெல்லிக்காய், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை வசதிக்கேற்ப வாங்கி வைக்கலாம்.
செல்வம் பெருகும்
அட்சய திருதியை நாளில் அன்னதானம் செய்வதும் சிறப்பான பலனைத் தரும். அன்னை பராசக்தி இந்த நாளில் ஈசனுக்கு அன்னம் அளித்தாள் என்பர். இந்த நாளில் அன்னதானம் செய்தால் இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிடைக்கும் மற்ற நாட்களில் இறைவனுக்கு நிவேதனம் என்ற பெயரில் உணவு படைக்கிறோம்.
கேட்ட வரம் கிடைக்கும்
அட்சய திருதியை நாளில் கிருஷ்ணர் வழிபாட்டை மேற்கொண்டால் கேட்ட வரங்கள் கிடைக்கும். ஏழை எளியவர்களுக்கு தானதர்மம், அன்னதானம் செய்வதன் மூலம் பெருமாளின் கருணையால் குடும்பத்தில் உள்ள வறுமை, கஷ்டம் விலகும்.
முன்னோர்கள் ஆசி
பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து விட்டு பசு மாட்டுக்கு வாழைப்பழம் கொடுக்க வேண்டும். பசு மாட்டில் தான் அனைத்து தேவர்களும் இருப்பதாக ஐதீகம். அட்சய திருதியை தங்கம். வெள்ளி வாங்க இயலாதவர்கள் ஒரு பாக்கெட் உப்பு மட்டுமாவது வாங்கலாம். ஏழை ஒருவருக்கு அன்னதானம் அளிக்கலாம் அவர்களின் வாழ்த்துக்களினால் செல்வம் பெருகும்.