மல்லிகை, முல்லை பூக்கள் கனவில் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
கனவுகள் என்பதை நடக்கப்போகும் நிகழ்வை முன்கூட்டியே உணர்த்துபவை. பூக்களை கனவில் காண்பது நல்லதுதான். வெள்ளிக்கிழமை அதுவுமா பூ கனவுல வந்துச்சே அதுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டு ஒரு சகோதரி போன் செய்தார்.
சென்னை: மனிதனின் பெரும்பான்மையான நேரம் தூக்கத்தில் தான் கழிகிறது. அந்த தூக்கத்தில் ஒரு சில நேரங்களில் நல்லதும் கெட்டதுமாக சில கனவுகள் வந்து நம்மை பாடாய்படுத்திவிடும். மலர்கள் மங்களகரமானவை. பூக்களை கனவில் கண்டால் நல்லதே நடக்கும். மஞ்சள் நிற பூக்களை கனவில் காண, மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். மல்லிகை பூவை கனவில் கண்டால் மிகவும் நல்லது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க போகிறது என்று அர்த்தம். நல்ல கனவுகள் நல்லது நடக்கப்போவதை முன்கூட்டியே உணர்த்துகின்றன.
மனதின் ஆழ் மனதில் உள்ளது கனவாக வெளிப்படும் என்று உளவியலாளர்கள் சொன்னாலும் கனவுகள் உணர்த்தும் சூட்சுமங்கள் அபரிமிதமானவை. சில கனவுகள் நடக்கப்போகும் நிகழ்வை அப்படியே உணர்த்தும். பணம் வரப்போகிறது என்றாலே அதற்கேற்ப கனவு வரும் சுப நிகழ்ச்சிகள் நடக்கப் போவதையும், ஏதே கெட்டது நடக்கக் போகிறது என்பதையும் கனவுகள் முன்கூட்டியே நமக்கு உணர்த்தி விடுகின்றன. பொதுவாக பூக்கள் கனவில் வந்தாலோ பிறரிடம் இருந்து பூக்களை வாங்கினாலோ அது நல்ல கனவுதான்.
கெட்ட கனவுகளை நாம் எந்த நேரத்தில் காண்கிறோம் என்பதை பொருத்தும், அது பலிக்குமா அல்லது பலிக்கிறதா என்று நம்மால் அறிய முடியும். கெட்ட கனவுகள் வந்தால் எல்லோருக்கும் ஒரு வித படபடப்பு இருக்கும். ஆனாலும் பதற்றப்பட வேண்டியதில்லை. கனவுகளுக்கு ஏற்ப பரிகாரங்களும் இருக்கின்றன அவற்றையும் பார்க்கலாம்.
சரஸ்வதி அருள் கிடைக்கும்
வெள்ளை தாமரையை கனவில் கண்டால் சரஸ்வதி தேவியின் பரிபூரண அருள் கிடைக்கும். கல்வியில் உயர்வான நிலையை அடைவீர்கள்.
முல்லை பூவை கனவில் கண்டால் அம்மா வழியில் தேவையான உதவிகள் கிடைக்கும். பன்னீர் பூவை கனவில் கண்டால் வெளியூர் அல்லது வெளி நாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும்.
சுப நிகழ்ச்சிகள்
பவளமல்லி பூவை கனவில் கண்டால் தந்தை வழி உறவுகளால் நன்மை ஏற்படும் என்று அர்த்தம். சாமந்தி பூவை கனவில் கண்டால் குடும்பத்தில் சுப நிகழ்சிகள் நடக்க போகிறது என்று அர்த்தம். அல்லி பூவை கனவில் கண்டால் மனைவி வழி உறவினர்களால் நன்மை வரப்போகிறது என்று உணர்த்துகிறது.
பாராட்டுக்கள் குவியும்
ரோஜா பூக்களை கனவில் கண்டால் நீங்கள் செய்த செயலுக்கு பாராட்டுகள் குவியும். மேலும் அனைத்து விதத்திலும் நன்மை உண்டாகும். வாடாமல்லி பூவை கனவில் கண்டால் உறவினர்களால் உதவி கிடைக்கும் என்று பொருள். செடியில் இருந்து பூக்களை பறிப்பது போல கனவு கண்டால், நல்ல பலன்கள் கிடைக்கும். நிலம் வீடு, நகை வாங்கும் யோகம் ஏற்படும்.
என்ன கலர் பூக்களுக்கு என்ன பலன்
நறுமணம் உள்ள பூக்களை கனவில் கண்டால் திருமணம் கூடி வரும். காதலில் வெற்றி கிடைக்கும். கர்ப்பிணி பெண்கள் கனவில் தாமரை மற்றும் வெள்ளை நிற பூக்கள், பழங்கள் குறிப்பாக மாங்காய் மற்றும் மாம்பழம் வந்தால் பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளலாம். அதே போல கனவில் செம்பருத்தி, ரோஜா ஆகிய சிவப்பு நிற பூக்கள் வந்தாலோ வாழைப்பழம் வந்தாலோ பெண் குழந்தை பிறக்கும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
நல்லது நடக்கும் பூச்சி கனவுகள்
எட்டுகால் பூச்சி கனவில் வந்தால் நன்மை ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று பொருள். சிலந்தியை கனவில் காண்பது பொருள் வரவுக்கு வழிவகுக்கும். வண்டுகள் தேனை சேகரிப்பது போல் கனவு வந்தால் நாம் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். பட்டாம்பூச்சி கனவில் வந்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும். பச்சை வெட்டுக்கிளியை கனவில் வயலில் காண்பது மிகவும் நல்லது.
ஒற்றுமை பாதிக்கும்
அதே நேரத்தில் கரப்பான்பூச்சியை கனவில் கண்டால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். அந்து பூச்சியை கனவில் கண்டால் பொருள் இழப்பு ஏற்படும் என்று அர்த்தம். சிலந்தி கூட்டை அழிப்பது போல கனவு வந்தால் நல்லதல்ல. அது குடும்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். வண்டுகள் தேனை சேகரிப்பது போல் கனவு வந்தால் நாம் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். பட்டாம்பூச்சி கூட்டமாக வீட்டை விட்டு வெளியே சென்றால் பண பற்றாக்குறை ஏற்படும். அட்டைப்பூச்சியை கனவில் கண்டால் எதிரிகளால் பிரச்சனைகள் ஏற்படும்.
பகை அதிகரிக்கும்
ஈக்கள் மொய்ப்பது போல கனவு வந்தால் வியாதிகள் வரும் என்று பொருள். ஈக்கள் நம்மை சுற்றி சுற்றி வருவது போல் கனவு கண்டால் வெளிவட்டாரங்களில் பகைமை அதிகரிக்கும் என்று பொருள். வெட்டுக்கிளி கனவில் வந்தால் பார்க்கும் வேலையில் பாதிப்பு ஏற்படும்.
தேனீக்கள் கனவில் வந்தால், வாகனப் பயணத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
விஷ பூச்சி கனவு தொந்தரவுக்கு பரிகாரம்
நோய், வியாதி சம்பந்தமான கனவுகள் தொடர்ந்து வந்தால் தன்வந்திரி மந்திரம் கூறி தன்வந்திரியை வழிபடலாம். வீர ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் நடக்கும். பாம்புகள் விஷ பூச்சிகள் கனவில் வந்தால் கருடன் மீது இருக்கும் விஷ்ணுவின் படத்தை பூஜை செய்து வழிபட்டால் அதுபோன்ற கனவுத்தொல்லைகள் நீங்கும்.
திதி கொடுக்கலாம்
பண கஷ்டம், பண இழப்பு, பண நஷ்டம் போன்ற கனவுகளை கண்டால் மகாலக்ஷ்மியை வழிபட வேண்டும். படிப்பு தடைப்படும்படியான கனவுகளை கண்டால் சரஸ்வதி தேவி மற்றும் ஹயகிரீவர் மந்திரங்களை வழிபாட்டு வரலாம். இறந்தவர்கள் அடிக்கடி கனவில் வந்தால் அவர்களுக்கு நாம் திதி கொடுத்து வழிபட வேண்டும். கெட்ட கனவு தொல்லையில் இருந்து தப்பிக்க பெருமாளை வழிபடலாம்.