அரசு வேலை தரும் சூரியன்,சனி - வெளிநாடு யோகம் தரும் சந்திரன்... கட்டத்துரைக்கு கட்டம் சரியா இருக்கா?
இன்றைக்கு ஜாதகம் பார்க்கும் பலரும் மகனுக்கு உயர்கல்வி வாய்ப்பு அமையுமா? வெளிநாடு சென்று சம்பாதிப்பார்களா, மகன், மகளுக்கு அரசு வேலை அமையுமா என்று கேட்கிறார்கள்.
சென்னை: அமெரிக்காவில் கிரீன் கார்டு வாங்க வேண்டும் என்று ஆசைப்படும் ஆண்களும், பாரின் மாப்பிள்ளைதான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் பெண்களும், பெற்றோரும் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோதிடரிடம் போய், என் மகன் உயர்கல்வி படிப்பானா? வெளிநாடு சென்று வேலை செய்வானா என்று கேட்கின்றனர்.
இன்னும் சிலரோ அரசு வேலை என் மகனுக்கு அமையுமா என்று கேட்கிறார்கள். கட்டதுரைக்கு கட்டம் சரியா இருக்கணும். சூரியன், சனி, குரு, செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஜாதகக் கட்டத்தில் எங்கே அமர்ந்துள்ளன என்று பார்த்து ஆராய்ந்து அதற்கான அமைப்பு இருக்கிறதா என்று கூற வேண்டும்.
கடல் கடந்த பயணங்கள்
12 ராசிகளில் மிதுனம், துலாம், கும்பம் காற்று ராசிகள், கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவை நீர் ராசிகள். காற்று ராசிகள் விமான பயணத்தினை குறிக்கும் நீா் ராசிகள் கடல் பயணத்தினை குறிக்கும். காற்று ராசியும் நீா் ராசியும் 9 மற்றும்12 அதிபதிகளுடன் தொடா்பு பெற்றிருந்தால் வெளிநாட்டிற்கு செல்லும் யோகம் கிடைக்கும்.
வெளிநாட்டில் குடியேறும் அமைப்பு
வெளிநாடு செல்லும் யோகத்தினை தீா்மானிக்கும் கிரகங்கள் சந்திரன்,குரு, ராகு, செவ்வாய் இவா்கள் 9 12 வீடுகளுடன் சோ்ந்திருந்தாலும் தொடா்பு பெற்றிருந்தாலும் வெளிநாடு யோகம் வரும்.
9 மற்றும் 12ஆம் அதிபதிகள் சேர்க்கை,பரிவர்த்தனை, அல்லது சம சப்தம பார்வை இருந்தால் வெளிநாடுகளில் சென்று பணிபுரியும், அல்லது குடியிருக்கும் யோகம் அமையும். 9 அல்லது 12ஆம் அதிபதிகளுடன் 10ஆம் அதிபதியும் சேர்க்கை பெற்றால் வெளிநாடு சென்று சொந்தமாக தொழில் செய்வார்.
சூரியனுடன் சனி சேர்க்கை
ஜோதிடத்தைப் பொறுத்தவரை பத்தாமிடம் இடம் உத்தியோக ஸ்தானமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பத்தாமிடத்தின் அதிபதி பத்தில் இருந்து சூரியனின் பார்வை சேர்க்கை ஏற்பட்டால் அரசு வேலை கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. மேலும் கர்மகாரகன் என கூறப்படும் சனீஸ்வரன் அரசாங்க உத்யோக காரகன் சூரியனுடன் சேர்க்கை பெற்றிருந்தால் அரசு வேலை கிடைக்கும்.
காக்கிக்சட்டை போடும் வாய்ப்பு கிடைக்குமா?
சில ஜாதகங்களில் செவ்வாயின் கிரக நிலையும் அரசுப் பணியை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்ததாக அமையும். செவ்வாய் பத்தாமிடம் மற்றும் சூரியன் சனி ஆகியவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தால் அவர்கள் சீருடை பணியாளர்கள் எனப்படும் காவல்துறை, தீயணைப்பு மற்றும் ராணுவத்துறை போன்றவற்றில் பணியாற்றுவார்கள்.
உயர்கல்வி யோகம் யாருக்கு?
ஒருவரின் ஜாதகத்தில் குருவும்- சந்திரனும் ராசியில் சேர்ந்து இருந்தாலும் அல்லது ராசிக்கு 5, 9 ஆகிய இடங்களில் இருந்தாலும் குரு - சந்திர யோகம் உண்டாகிறது. இதன் மூலம் ஒருவருக்கு உயர்ந்த கல்வி, சாதனை படைக்கும் ஆற்றல் ஏற்படும்.
வித்யா கெஜ கேசரி யோகம்
ஜாதகத்தில் சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது, ராசிக்கு 4, 7, 10 ஆகிய வீடுகளில் குரு இருந்தால் கெஜகேசரி யோகம். குருவுடன் புதன் சேர்ந்தால் வித்யா கெஜ கேசரி யோகம். இந்த அமைப்பு ஜாதகரை உச்சத்திற்குக் கொண்டு செல்லும். கல்வியில் பிரகாசிப்பார்கள்.
படிப்பில் மந்தம் பரிகாரம் என்ன?
ஹயக்ரீவர் மந்திரம்
நன்றாக படித்த குழந்தைகள் கூட திடீரென படிப்பில் கவனம் செலுத்தாமல் போய்விடுவார்கள். ஆசிரியர்கள் என்ன சொன்னாலும் புத்தியில் ஏறவே ஏறாது. இதற்குக் காரணம் சனிபகவானின் தாக்கம்தான். பரிகாரம் செய்தால் பலன் நிச்சயம் கிடைக்கும். சனிபகவானின் பார்வை, சஞ்சாரத்தைப் பொருத்து படிப்பில் கவனச்சிதறல் ஏற்படும். விநாயகப்பெருமான், ஆஞ்சநேயரை சரணடைந்தால் மந்த தன்மை போகும்.
வாசகர்களே உங்களின் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் குறித்த சந்தேகங்களை கேள்விகளையும் எங்களுக்கு அனுப்பலாம்.